
புணேவில் மதுபோதையில் விபத்து ஏற்படுத்திய சிறுவனின் ரத்த மாதிரி குப்பைத் தொட்டியில் வீசப்பட்டதாக இரண்டு மருத்துவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும், வேறு ஒருவரின் ரத்த மாதிரியை தடயவியல் ஆய்வகத்திற்கு அனுப்புவதற்காக ரூ.3 லட்சம் லஞ்சம் பெறப்பட்டுள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.
புணேவில், மே 19ஆம் தேதி சனிக்கிழமை நள்ளிரவில், மதுபோதையில் மணிக்கு 160 கிலோ மீட்டர் வேகத்தில் காரை இயக்கிய சிறுவன் மோதியதில் இருவர் பலியாகினர்.
இந்த வழக்கில் சிறுவன் மது அருந்தவில்லை என்று ரத்த பரிசோதனை முடிவு வெளியானதாக காவல்துறையினர் முதல்கட்டமாக தெரிவித்திருந்தனர்.
ஆனால், சிறுவன் கார் விபத்து ஏற்படுத்தியபோது மதுபோதையில் இருந்த விடியோக்களும், பாரில் மது அருந்திய விடியோக்களும் இணையத்தில் பரவி பல்வேறு விவாதத்தை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், புணே காவல் ஆணையர் திங்கள்கிழமை (மே 27) காலை செய்தியாளர்களுடனான சந்திப்பில், சிறுவனின் ரத்த மாதிரியை மருத்துவமனை மாற்றியதாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: சிறுவனுக்கு “கடந்த மே 19 காலை 11 மணிக்கு சாசூன் மருத்துவமனையில் ரத்த மாதிரி பரிசோதனைக்காக எடுக்கப்பட்டது. ஆனால், அந்த மாதிரி குப்பைத் தொட்டியில் வீசப்பட்டு வேறு ஒருவரின் ரத்த மாதிரி தடயவியல் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த ரத்த மாதிரியை தடயவியல் துறையின் தலைவர் அஜய் தாவ்ரேவின் அறிவுறுத்தலின் பேரில், தலைமை மருத்துவ அதிகாரி ஸ்ரீஹரி ஹலனர் மாற்றியுள்ளார். மருத்துவமனையின் கண்காணிப்பு கேமிராக்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. மருத்துவர் அஜய் தாவ்ரேவை நேரடியாக சிறுவனின் தந்தை தொடர்பு கொண்டுள்ளார். மேலும், சிறுவனின் ரத்த மாதிரிகளை மாற்றுவதற்காக, மருத்துவமனையின் பியூனாக இருந்த அதுல், சிறுவனின் குடும்பத்திடமிருந்து 2 மருத்துவர்களுக்காக ரூ.3 லட்சம் லஞ்சமாகப் பெற்றிருக்கிறார். ஆதாரங்களை அழித்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டின் கீழ் இரு மருத்துவர்களும் மற்றும் பியூனும் கைது செய்யப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.