சுகம் தரும் சித்த மருத்துவம்: ஆண்மைக் குறைவை ‘வெங்காயம்’ போக்குமா?

அரியும்போதே கண்ணில் கண்ணீரை உருவாக்கும் வெங்காயம், காலமெல்லாம் கண்ணீரை வரவழைக்கும், துயரப்படுத்தும் நோய்களிலிருந்து தப்பிக்க உதவும் சித்த மருத்துவ மூலிகை என்பது பலருக்கு தெரிய வாய்ப்பில்லை. 
சுகம் தரும் சித்த மருத்துவம்: ஆண்மைக் குறைவை ‘வெங்காயம்’ போக்குமா?


தமிழர்களின் அன்றாட சமையலில் மிகவும் வழக்கமாக பயன்படுத்தப்படும் மூலிகைப் பொருளாக விளங்குவது வெங்காயம். கிட்டத்தட்ட 5000 ஆண்டுகளுக்கு முன்பில் இருந்தே ஆசிய கண்டத்தில் உணவிற்க்காக வெங்காயம் பயன்படுத்தப்பட்டுள்ளதாக வரலாற்று குறிப்புகள் சொல்கின்றது. 

அரியும்போதே கண்ணில் கண்ணீரை உருவாக்கும் வெங்காயம், காலமெல்லாம் கண்ணீரை வரவழைக்கும், துயரப்படுத்தும் நோய்களிலிருந்து தப்பிக்க உதவும் சித்த மருத்துவ மூலிகை என்பது பலருக்கு தெரிய வாய்ப்பில்லை. 

இன்றைய துரித உணவு விரும்பிகளுக்கு நெருப்பில் வாட்டிய இறைச்சி என்பது அத்தியாவசிய ஒன்றாகிவிட்டது. ஆனால் நவீன அறிவியலோ 100 டிகிரிக்கு மேல், நெருப்பில் வாட்டிய கோழியையோ, மாமிசத்தையோ உணவாக எடுத்துக்கொள்ள புற்றுநோய்க்கான எச்சரிக்கையை விடுக்கின்றது. 

100 டிகிரிக்கு மேல் நெருப்பில் இறைச்சியை வாட்டும் போது, உண்டாகும் ஹெட்ரோசைக்ளிக் அமிலம் (எச்சிஏ) என்ற வேதிப்பொருளால் புற்றுநோய் உண்டாகும் அபாயத்தை அறிவியல் உலகம் அறிவிக்கின்றது. அதனால் தான் என்னமோ, ‘கிரில் சிக்கன்’ என்ற சொல்லப்படும் தீயில் வாட்டிய கோழியை தட்டில் வைக்கும் போது கூடவே, அரிந்த வெங்காய சுருளையும், எலுமிச்சை பழ துண்டையும் வைக்கின்றனர் போலும். 

அதாவது டி.என்.ஏ வரை சென்று தாக்கி புற்றுநோயை வரவழைக்கும் இறைச்சியுடன், புற்றுநோயினை வரவொட்டாமல் தடுக்கும் வெங்காயமும், எலுமிச்சையும் அதே தட்டில் வைக்கும் மறைக்கப்பட்ட பாரம்பரிய மருத்துவத்தின் உண்மை இதில் வெளிப்படை. 

‘காரணமில்லாமல் காரியங்கள்’ இந்த உலகில் எதுவும் கிடையாது. இந்த முதுமொழி நம் உணவு முறைக்கும் பொருந்தும். காலம் காலமாக நாம் பழகிவரும் பல்வேறு செயல்களுக்கு உள்ளார்ந்த அர்த்தத்தை தேடினால் அதன் மருத்துவ பலனும், உண்மையும் தெரிய வரும். 

இத்தகைய சிறப்பு மிக்க வெங்காயத்தை பற்றி சித்த மருத்துவம் சொல்வது என்ன? நவீன அறிவியல் சொல்வது என்ன?
கசப்பும், காரமும் சேர்ந்த சுவையும், மிகுந்த நெடியும் வாசனையும் உள்ள வெங்காயத்தில் ‘அலிசின்’ என்ற வேதிப்பொருள் அதன் மருத்துவ குணங்களுக்கு காரணமாக உள்ளது. பூண்டின் இனத்தை சேர்ந்ததால் பூண்டில் உள்ள அத்தனை வேதிப்பொருள்களும் வெங்காயத்தில் உள்ளது. இதனால் பூண்டின் மருத்துவ குணங்கள் அனைத்தும் வெங்காயத்திற்கு உள்ளது குறிப்பிடத்தக்கது. 

ஆன்டி ஆக்ஸிடன்ட் தன்மையுள்ள குர்சிட்டின் என்ற பிளவனாய்டு வெங்காயத்தில் பெருமளவில் உள்ளது. இதுவே புற்றுநோயை தடுக்கும் தன்மை உடையது, வெங்காயத்தை வேக வைத்தாலும் இதன் மருத்துவ குணங்கள் மாறாதது இன்னும் சிறப்பு.

வெங்காயத்தின் பகுதிகளான பூ, விதை, நாம் பயன்படுத்தும் கிழங்கு ஆகிய அனைத்துமே மருத்துவ குணம் வாய்ந்ததாக சித்த மருத்துவம் கூறுகின்றது. 

வெங்காய விதை வயிறு புண்ணை (அல்சரை) போக்கும். வெங்காயத்தால் ‘வெப்பம் மூலம் கிரந்தி வீறு ரத்தபித்தம்’ இவை போகும் என்று அகத்தியர் குணவாகடம் கூறுகின்றது. 

ஆகவே உடலின் வெப்பத்தை போக்கி குளிர்ச்சியை தந்து, மூல நோய்க்கும் நன் மருந்தாகும் என்று இப்பாடலால் அறியப்படுகின்றது. 

வெங்காயம் என்ற சொல்லுக்கு வெம்மை+ காயம் என்று பிரித்து பொருள் பார்த்தால் வெம்மை என்றால் உஷ்ணம், காயம் என்றால் உடம்பு. உடம்பின் உஷ்ணத்தை போக்கும் தன்மையுடையதால் ‘வெங்காயம்’ என்ற பெயர் வந்ததாக தெரிய வருகிறது.

சித்த மருத்துவத்தில் வெங்காயத்திற்கு ‘பலாண்டு’ என்ற வேறுபெயர் உள்ளதும் குறிப்பிடத்தக்கது. 

அதாவது பல ஆண்டுகள் ஆரோக்கியமாக வாழ்வதற்கு உதவியாக இருப்பதால் என்று ஒரு பொருளும், பலம்+ஆண் என்று பிரித்தால் ஆண்களுக்கு பலத்தை தரக்கூடியது அதாவது ஆண்மையை அதிகரிக்கும், விந்தணுக்கள் உற்பத்தியை பெருக்கும் என்ற பொருள்படும்படியாக உள்ளது. 

தென்தமிழகத்தில் இன்றளவும் தயிரில் வெங்காயத்தை சேர்த்து பச்சடியாக்கி பகல் வேளையில் வழங்குவது வழக்கம். ஆகவே நாம் அடிக்கடி உணவில் சேர்க்கும் வெங்காய பச்சடி ஆண்மையை அதிகரிக்கும் தன்மை உடையது.

வெங்காயத்தின் கிழங்கு,விதை இரண்டிற்கும் ஆண்மை அதிகரிக்கும் தன்மையுள்ளது.

வெங்காயத்தில் மருத்துவ குணம் வாய்ந்த உயிரி மூலக்கூறுகளான குர்சிட்டின், காம்ப்பெரோல், பீனால்கள், பிளேவோன்கள், பிளவனாய்டுகள், ஆன்தோசயனின், பெருலிக் அமிலம், வானிலிக் அமிலம்  இருப்பத்தோடு  புரத சத்தும், நார்ச்சத்தும், உடல் செல்களுக்கு இன்றியமையாத தாதுஉப்புக்களான இரும்பு சத்து, மாங்கனீசு, கால்சியம், பொட்டாசியம், துத்தநாக சத்து, செலினியம் சத்து ஆகியவையும் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

வெங்காயத்தில் மருத்துவ குணம் வாய்ந்த வேதிப்பொருள்கள் இருப்பதால் இது இருதயத்தை பாதுகாக்கவும், நரம்புசெல்களை பாதுகாப்பதாகவும், உடலின் எடையை குறைப்பதாகவும், சர்க்கரை அளவை குறைப்பதாகவும், ஆண்களில் காமத்தை தூண்டுவதாகவும், புற்றுநோயினை தடுப்பதாவும், கிருமிக்கொல்லியாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

வெங்காயத்தில் உள்ள ‘அல்லில் சிஸ்டீன் சலஃபாக்சைடு’ எனும் வேதிப்பொருள் கணையத்தில் இன்சுலின் சுரைப்பை இயற்கையாக தூண்டக் கூடியது. அத்துடன் உண்ணும் உணவில் உள்ள சர்க்கரை குடலில் உட்கிரப்பதை தடுத்து சர்க்கரை அளவை குறைக்கவும் கூடியது.

வெங்காயத்தில் உள்ள வேதிப்பொருள்கள் நம் உடலில் உள்ள ‘ஆண் ஹார்மோன்’ என்று அழைக்கப்படும் ‘டெஸ்டோஸ்டீரோன்’ அளவை இயற்கையாக அதிகரித்து விந்தணுக்கள் உற்பத்தியை கூட்டும். அது மட்டுமின்றி, ‘பிரீ ரேடிகல் வாயு’ என்று சொல்லப்படும் நைட்ரஜன் ஆக்சைடு உற்பத்தியை அதிகரித்து ஆண் பிறப்பு உறுப்புகளுக்கு ரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்து ஆண்தன்மையை அதிகரிக்கும் படியாக உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

ஆகவே வெங்காயம் தானே என்று ஏளனமாக நினைக்காமல் ஆண்மை குறைவு என்று வருத்தப்படும் பலரும், மடிக்கணினி அதிகம் பயன்படுத்தும் மென்பொருள் பணியாளர்களும், புதுமணத் தம்பதியினரும், சர்க்கரை வியாதியினரும் பாதாம், முந்திரி தான் சாப்பிட வேண்டும் என்றில்லாமல் தினமும் ஒரு கிண்ணம் வெங்காய பச்சடி சேர்த்து வந்தாலே போதும் அவர்களுக்கு ஆண்மை பலப்பட்டு ஆரோக்கியத்தை கூட்டும். இது எளிய சித்த மருத்துவ முறை, இருப்பினும் வலிமையான முறை.

மருத்துவரை தொடர்புகொள்ள வேண்டிய இ-மெயில் ஐடி - drthillai.mdsiddha@gmail.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com