யார் இந்த கார்த்திகேயன் பாண்டியன்? ஒடிசாவில் தமிழ்ப் புயல்!

ஒடிசா அரசியலைக் கலக்கும் தமிழரான விருப்ப ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அலுவலர் கார்த்திகேயன் பாண்டியனின் வெற்றிக்குப் பின்னால்...
ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்குடன் கார்த்திகேயன் பாண்டியன்.
ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்குடன் கார்த்திகேயன் பாண்டியன்.

ஐஏஎஸ் பணியிலிருந்து விடுவிக்கப்பட்ட ஒரே நாளில் நாடு முழுவதும் பேசப்படும் நபராக மாறியிருக்கிறார் வி. கார்த்திகேயன் பாண்டியன்!

ஒடிசா மாநில ஐஏஎஸ் அலுவலரான வி.கே. பாண்டியன் என்ற வி. கார்த்திகேயன் பாண்டியன், விருப்ப ஓய்வு விண்ணப்பத்தை விண்ணப்பித்த சில நாள்களிலேயே திங்கள்கிழமை மத்திய அரசு ஏற்றுக்கொண்டது. மறுநாளான செவ்வாய்க்கிழமையே மாற்றத்துக்கான முன்னெடுப்புகள் (5T – 5டி) மற்றும் நவீன ஒடிசா தலைவராக - கேபினட் அமைச்சர் அந்தஸ்தில் நியமிக்கப்பட்டுள்ள அவர், நேரடியாக முதல்வர் நவீன் பட்நாயக்கின் கீழ் பணியாற்றுவார் என்றும் ஆளுநரின் அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

ஏற்கெனவே, வெளிப்படைத் தன்மை, கூட்டாகப் பணி, தொழில்நுட்பம், மாற்றத்துக்கான தக்க தருணம் என்ற இதே ‘5டி’யின் பொறுப்பு – செயலராக பாண்டியன் பணியாற்றிவந்தார்.

பஞ்சாயத்துகள் மூலம் கிராமங்களுக்குத் தேவையான கட்டமைப்பு வசதிகளைச் செய்து தரும் நம்ம ஒடிசா, நவீன ஒடிசா என்ற திட்டத்தை இந்த அமைப்புதான்  செயல்படுத்தி வருகிறது.

2011 ஆம் ஆண்டு முதல் ஒடிசா முதல்வர் அலுவலகத்தில் செயல்பட்டுவரும் பாண்டியன், முதல்வர் நவீன் பட்நாயக்கிற்கு மிகவும் நெருக்கமானவர் என்று அறியப்படுகிறார். 

முதல்வர் சார்பில் மக்களிடமிருந்து நேரடியாகக் குறைகளைக் கேட்கிறார் என்பதற்காக மிகக் கடுமையாக எதிர்க்கட்சிகளால் விமர்சிக்கப்படும் பாண்டியன், ஆளும் பிஜு ஜனதா தளத்துக்காக அரசியல் வேலைகளில் ஈடுபடுகிறார் என்றும் குற்றம் சாட்டப்பட்டார்.

தற்போது அமைச்சர் அந்தஸ்தில் முதல்வர் நவீன் பட்நாயக்கின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் நியமிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, அனைத்துத் துறைகளின் மீதும் செல்வாக்கு செலுத்தக் கூடிய வாய்ப்பை, அதிகாரத்தை பாண்டியன் பெறுகிறார்.

பின்புலம் என்ன?

1974-ல் தமிழ்நாட்டில் மதுரை மாவட்டம் மேலூர் அருகேயுள்ள கூத்தப்பன்பட்டி என்ற ஊரில் பிறந்தவர் வி. கார்த்திகேயன் பாண்டியன். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நடத்தும் நெய்வேலி விளையாட்டு விடுதியில் தங்கிப் பயின்ற பாண்டியன், மதுரை ஒத்தக்கடை விவசாயக் கல்லூரியில் பி.எஸ்ஸி. முடித்தார். பின்னர், தில்லியில் இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் முதுநிலை படித்தார்.

2000-ல் இந்திய ஆட்சிப் பணித் தேர்வில் வெற்றி பெற்ற பாண்டியன், ஒடிசா மாநிலத்தில் ஐ.ஏ.எஸ். அலுவலராகப் பணியைத் தொடங்கினார். இதே ஆண்டில்தான் ஒடிசா முதல்வராக நவீன் பட்நாயக்கும் பதவியேற்று, இன்னமும் தொடர்கிறார்.

காலஹண்டி மாவட்டத்திலுள்ள தரம்கர்க்கில் முதன்முதலாக துணை ஆட்சியராகப் பொறுப்பேற்ற பாண்டியன், நெல் கொள்முதலை ஒழுங்குபடுத்தினார். 2005-ல் பழங்குடியினர் அதிகம் வாழும் மயூர்பஞ்ச் மாவட்ட ஆட்சியராகப் பொறுப்பேற்றார்.

2007 முதல் 2011 வரை கஞ்சம் மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றிய காலகட்டத்தில்தான் முதல்வர் நவீன் பட்நாயக்கின் கவனத்தைப் பெற்றார். கஞ்சம் மாவட்டத்தில்தான் நவீன் பட்நாயக்கின் பேரவைத் தொகுதியான ஹிஞ்சிலி  இருக்கிறது. இங்கேயேதான் நவீன் பட்நாயக் எம்.பி.யாக இருந்த அஸ்கா மக்களவைத் தொகுதியும் இருக்கிறது. ஆட்சியராக பாண்டியன் இருந்தபோதுதான், தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தைச் சிறப்பாகச்  செயல்படுத்தியதற்காகத் தேசிய அளவில் இரு முறை கஞ்சம் மாவட்டம் விருது பெற்றது.

கஞ்சத்திலிருந்துதான் வி. கார்த்திகேயன் பாண்டியனின் மேல் நோக்கிய பயணம் தொடங்குகிறது. பாண்டியனுடைய திறமையைப் பெரிதும் மெச்சிய முதல்வர் நவீன் பட்நாயக், 2011-ல் அவரை முதல்வர் அலுவலகத்துக்கு அழைத்துக் கொண்டார்.

இந்த இடத்தை எப்படி எட்டினார்?

முதல்வர் நவீன் பட்நாயக்கின் நம்பிக்கைக்குரியவராக கார்த்திகேயன் பாண்டியன் உருவானது எப்படி என்பது இன்னமும் ஆர்வத்தைத் தூண்டக்கூடிய விஷயம்.

2012-ல்தான் அந்த சம்பவம் நடந்தது. என்னதான் முதல்வர் அலுவலகத்தில் பணி என்றாலும் அந்த நேரத்தில் மற்றவர்களுடன் ஒப்பிட, பாண்டியன் மிகவும் ஜூனியர்தான். 

பியாரி மோகன் மொகபத்ரா என்பவர் முன்னாள் ஐஏஎஸ் அலுவலர். நவீன் பட்நாயக்கின் தந்தை பிஜு பட்நாயக் முதல்வராக இருந்தபோது அவரிடம் முதன்மைச் செயலராக இருந்தவர். மொகபத்ராவை அரசியலுக்குக் கொண்டுவந்தார் பிஜு பட்நாயக். 1997-ல் தந்தை பிஜுவின் மறைவுக்குப் பிறகுதான் - பெரும்பாலும் ஒடிசாவுக்கு வெளியிலேயே இருந்து பள்ளி, கல்லூரிப் படிப்பு எல்லாவற்றையும் டேராடூன், தில்லியில் முடித்தவரான நவீன் பட்நாயக் -  அரசியலுக்கு, ஒடிசாவுக்கு வந்தார். அப்போது மகன் நவீன் பட்நாயக்கிற்கு ஒரு வழிகாட்டியைப் போலத் திகழ்ந்தார் மொகபத்ரா. ஒடிய மொழியில் சரியாக எழுதவோ, படிக்கவோ தெரியாதவராக இருந்ததாகக் கூறப்படும் நவீனுக்குக் கட்சியிலும் ஆட்சியிலும் எல்லாவகையிலும் உதவியாக இருந்து செயல்பட்டவர் மொகபத்ரா.

ஆனால், 2012-ல் முதன்முதலாக முதல்வர் நவீன் பட்நாயக் வெளிநாட்டுக்கு – லண்டனுக்கு சென்றிருந்தபோது, கட்சியின் சில தலைவர்களின் உதவியுடன் ஆட்சியைக் கைப்பற்ற மொகபத்ரா முயற்சி மேற்கொண்டார். இதற்குக் காங்கிரஸும் உதவியதாகக் கூறப்படுகிறது. 

ஒடிசாவில் அப்போது 144 உறுப்பினர்களைக் கொண்ட சட்டப்பேரவையில் பிஜு ஜனதா தளத்துக்கு 104 உறுப்பினர்கள் இருந்தனர். மொகபத்ராவால் சுமார் 30 பேரின் ஆதரவை மட்டுமே திரட்ட முடிந்தது. இந்த நேரத்தில் பாண்டியன்தான் பெரும்பாலான எம்எல்ஏக்களையும் அமைச்சர்களையும் நவீன் பட்நாயக்கிற்காகத்  தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருந்து மொகபத்ராவின் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியைத் தடுத்ததாகக் கூறுவார்கள்.

கட்சியிலும் ஆட்சியிலும் கடினமான தருணங்களில் எல்லாம் நவீன் பட்நாயக்கிற்கு உறுதுணையாக இருந்து செயல்பட்டுவந்ததன் மூலம் அவருக்கு  மிகவும் நம்பிக்கைக்குரியவராகிவிட்டார் பாண்டியன். ஒடிய மொழியினர் அல்லாதவராக, ஐஏஎஸ் அலுவலராக பணியிலிருந்தாலும் நவீனின் முழு விசுவாசியாக இருக்கிறார் பாண்டியன்.

முன்னுள்ள சவால்

நவீன் பட்நாயக்கிற்கு 77 வயதாகிறது. நலமாக இருப்பதாக அவர் தெரிவித்தாலும் அடிக்கடி அவர் உடல் நலம் பற்றி வதந்திகள் பரவுவது இயல்பாக இருக்கிறது.

23 ஆண்டுகளாக ஒடிசாவின் முதல்வராக இருக்கிறார் நவீன். இதுவரையிலும் தன்னுடைய வாரிசு என யாரையும் அவர் முன்னிறுத்தியதில்லை.

ஐஏஎஸ் பணியை ராஜிநாமா செய்துவிட்டு அமைச்சர் அந்தஸ்தில் பாண்டியனை  பணியேற்கச் செய்திருப்பது அதற்கான நகர்த்துதலா என்று உறுதிபடத்  தெரியவில்லை. ஏனெனில், என்னதான் அரசிலும் கட்சியிலும் பாண்டியனுக்கு செல்வாக்கு இருந்தாலும் அவர், வெளி ஆள், ஒடிய மொழி பேசாதவர் என்பதாகத்தான் பார்க்கப்படுவார்.

ஒடிசாவைச் சேர்ந்தவரான ஐஏஎஸ் அலுவலர் சுஜாதா (தற்போது ஒடிசா மகளிர் இயக்க  மேலாண் இயக்குநராக இருக்கிறார்) என்பவரைத்தான் கார்த்திகேயன் பாண்டியன் திருமணம் செய்துகொண்டிருக்கிறார்.

விரைவில் பிஜு ஜனதா தளத்தில் பாண்டியன் இணையும் செய்தியும் வெளியாகலாம். நவீன் பட்நாயக்கிற்கு நம்பிக்கைக்குரியவராகத் திகழ்ந்தாலும்  ஒடிசா அரசியலில் கார்த்திகேயன் பாண்டியனை மக்களும் பிஜு ஜனதா தளமும் எந்தளவுக்கு ஏற்றுக்கொள்வார்கள் என உறுதிபடக் கூற இயலாது.

மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து ஒடிசா சட்டப்பேரவைக்கும் ஓராண்டுக்கும் குறைவான காலத்தில் தேர்தல் வரவிருக்கிறது. முதல்வர் நவீன் பட்நாயக்குடன் இணைந்து - அரசுத் திட்டங்களின் வெற்றி அல்ல - பேரவைத் தேர்தல் வெற்றியையும் பாண்டியன் திட்டமிட வேண்டியிருக்கும். 23 ஆண்டுகளாக முதல்வராக இருக்கும் நவீன், மீண்டும் வெல்வதிலும் முதல்வராகத் தொடருவதிலும் பாண்டியனுக்குப் பெரும் பங்கு வந்து சேர்ந்திருக்கிறது. எதிர்க்கட்சிகளை மட்டுமல்ல, இந்த அந்தஸ்து உயர்வு காரணமாக, பிஜு ஜனதா தளத்தினரையும்கூட சேர்த்தே அவர் சமாளிக்க வேண்டியிருக்கும்.

கார்த்திகேயன் பாண்டியனின் தற்போதைய நியமனத்தை காங்கிரஸ், பாரதிய ஜனதா உள்பட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்துள்ளன. அரசுத் துறைப் பதவியை ராஜிநாமா செய்துவிட்டு நேரடியாக அரசியலுக்கு அவர் வர வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளன. 

தமிழகத்தைச் சேர்ந்த எத்தனையோ உயர் அலுவலர்கள், தங்கள் சிறப்பான பணிகளால், பல்வேறு மாநிலங்களிலும் பலவிதங்களில் புகழ் பெற்றிருக்கிறார்கள், இப்போதும் பெற்றுக்கொண்டும் இருக்கிறார்கள்.

இப்போது ஆட்சிப் பணியில் சிறக்கப் பணியாற்றி, முதல்வராக இருப்பவரின் நம்பிக்கையைப் பெற்று ஒடிசா அரசியலில் பெரும் புயலை எழுப்பிக் கொண்டிருக்கிறார் தமிழரான ஒருவர் – கார்த்திகேயன் பாண்டியன், மதுரைக்காரர்! 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com