காலவாரியான இருப்புப் பட்டியல் தயாரிப்புகள்
1805
அப்போதைய புரி ஆட்சியர் சார்லஸ் குரோம், ரத்னா பந்தரில் 64 தங்கம் மற்றும் வெள்ளி ஆபரணங்கள் இருக்கிறது என்றும், அதுபோக, ஏராளமான தங்கம், வெள்ளி மற்றும் செப்பு நாணயங்கள் இருப்பதாக ஒரு அறிக்கையை வெளியிட்டார்.
1926
ரத்னா பந்தரில் உள்ள நகைகளின் பட்டியல் புரி மகாராஜாவால் சரிபார்க்கப்பட்டு, புரி ஆட்சியர் அலுவலகத்தின் பதிவு அறையில் வைக்கப்பட்டது
1952
கோவிலின் உரிமைகள் குறித்த பதிவு தயாரிக்கப்பட்டு அதில், பஹாரா பந்தரில் 150 தங்க நகைகளும், பிதாரா பந்தரில் 180 தங்க நகைகள் மற்றும் 146 வெள்ளிப் பொருட்கள் இருப்பதும் குறிப்பிடப்பட்டது.
1962
அப்போதைய நிர்வாகி எல்.என். மிஸ்ராவால் மார்ச் 1962 முதல் ஆகஸ்ட் 1964 வரை ரத்னா பந்தரில் நகை சரிபார்ப்புப் பணி தொடங்கப்பட்டது. கருவூலத்தில் இருந்த 602 நகைகள் சரிபார்க்கப்பட்டன. இருப்பினும், கோயில் நிர்வாகக் குழு மற்றொரு முறை சரிபார்க்கும் பணிக்குக் கோரிக்கை விடுத்தது.
1967
மே மாதம், கோவில் கமிட்டி உத்தரவுப்படி, மற்றொரு சுற்று சோதனை மேற்கொள்ளப்பட்டது, ஆனால் 433 பொருட்கள் மட்டுமே சரிபார்க்கப்பட்டன. நகைகள் குறித்த ஆய்வு எதுவும் செய்யப்படவில்லை.
1978
ஒடிசாவின் அப்போதைய கவர்னர் பி டி சர்மா மே 13 முதல் ஜூலை 23 வரை கருவூலத்தின் இருப்புப் பட்டியலைத் தயார் செய்தார். அவர் மூலம் கருவூலத்தின் இரு அறைகளிலும் 454 தங்க நகைகளும், 293 வெள்ளி நகைகளும் இருப்பதாகக் கணக்கிடப்பட்டது.
2018
மார்ச் மாதம், ஒடிசா உயர் நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின் படி, தொல்லியல் துறை, ரத்னா பந்தரின் உள் அறைக்குள் நுழையாமல் ஆய்வு செய்தது. அப்போதைய, புரி கலெக்டர் உள் அறையின் சாவியை காணவில்லை என்று கூறியிருந்தார். ஆனால், இரண்டு மாதங்களுக்குப் பிறகு, மாவட்ட பதிவாளர் அறையில் ரத்ன பந்தரின் மாற்றுச் சாவி கிடைத்ததாக ஆட்சியர் கூறினார். ஒரு சீல் செய்யப்பட்ட உறையில் சாவி இருந்தது என்றும், அதில் ‘பிதாரா பந்தரின் மாற்றுச் சாவிகள்’ என்றும் குறிப்பிடப்பட்டிருந்ததாகக் கூறப்பட்டது.
2024
பிப்ரவரியில், முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக், ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி அரிஜித் பசாயத் தலைமையில் 1978 ஆம் ஆண்டுக்கு பிறகு, தற்போது மீண்டும் ரத்ன பந்தரின் புதிய நகைகள் இருப்புப் பட்டியலை உருவாக்க ஆணையத்தை அமைத்து உத்தரவிட்டார்.