உத்தரப் பிரதேசத்தில் பாஜகவைச் சேர்ந்த அமைச்சர் தாரா சிங் செளகான் பதவி விலகியிருப்பது அக்கட்சிக்கு மேலும் பின்னடவை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான தேர்தல் பிப்ரவரி 10ஆம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில் தேர்தலில் வெற்றி பெற பல்வேறு அரசியல் கட்சிகளும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.
இவற்றுக்கு மத்தியில் உத்தரப்பிரதேசத்தில் பாஜக அமைச்சர்கள் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் அடுத்தடுத்து வெளியேறுவது அக்கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தல் அறிவிக்கப்பட்ட பின் பாஜகவின் முக்கிய அமைச்சராக அறியப்பட்ட சுவாமி பிரசாத் மௌரியா தனது பதவியை ராஜிநாமா செய்ததுடன் அக்கட்சியிலிருந்தும் விலகுவதாக அறிவித்தார். அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சியில் அவா் இணைய இருப்பதாக தெரியவந்துள்ளது. அவரைத் தொடர்ந்து பாஜகவைச் சோ்ந்த பிரஜேஷ் பிரஜாபதி, ரோஷன் லால் வா்மா, பகவதி சாகா் உள்ளிட்ட மேலும் 3 சட்டப்பேரவை உறுப்பினர்களும் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனா்.
இதையும் படிக்க | ’ஓப்போ ஏ16 கே' ஸ்மார்ட்போன் அறிமுகம்
தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பாஜகவிலிருந்து பலரும் வெளியேறத் துவங்கியுள்ளது அக்கட்சிக்கு பெரும் தலைவலியைக் கொடுத்துள்ளது. இந்நிலையில் புதன்கிழமை மேலும் ஒரு பாஜக அமைச்சர் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.
தனது பதவியை ராஜிநாமா செய்வதாக அறிவித்துள்ள அமைச்சர் தாரா சிங் செளகான் முதல்வர் யோகி ஆதித்யநாத் அமைச்சரவையில் முக்கியத்துவம் வாய்ந்தவராகக் கருதப்பட்டவர் ஆவார். முன்னதாக தேசியவாத கட்சியின் தலைவர் சரத்பவார் பாஜகவிலிருந்து 13 பேர் விலக உள்ளதாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.