பிரதமர் நரேந்திர மோடி தொடக்கிவைத்து ஒரு வாரத்துக்குள் அந்தமானில் தலைநகர் போர்ட் பிளேரிலுள்ள வீர சாவர்க்கர் விமான நிலையத்தின் மேற்கூரைப் பகுதிகள் மழை காரணமாக சரிந்துவிழுந்தன.
போர்ட் பிளேரில் விரிவாக்கிக் கட்டப்பட்ட இந்த விமான நிலையத்தைக் காணொலி வாயிலாக சில நாள்களுக்கு முன்னர்தான், ஜூலை 18 அன்று, பிரதமர் நரேந்திர மோடி தொடக்கிவைத்தார். இன்னமும் இது பயன்பாட்டுக்குக்கூட வரவில்லை.
இந்த நிலையில் பலத்த காற்று - மழை காரணமாக மேற்கூரைகளின் பகுதிகள் சரிந்துவிழுந்தன.
சிசிடிவி கேமராக்களைப் பொருத்துவதற்காக டிக்கெட் கவுன்ட்டர், முனையத்தின் வெளிப்பகுதிகளில் மேற்கூரைப் பகுதிகள் தளர்த்தப்பட்டிருந்ததாக அலுவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதையும் படிக்க | மணிப்பூரில் நடப்பது என்ன?
சரிந்து கிடக்கும் வீர சாவர்க்கர் விமான நிலையப் பகுதிகளின் காட்சி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வைரலாகப் பரவி வருகிறது.
இந்த நிலையில், இந்த பாதிப்பு விமான நிலையத்துக்கு வெளியேதான் என்றும் வேண்டுமென்றேதான் இந்தப் பகுதி தளர்த்திவைக்கப்பட்டிருந்தது என்றும் மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய எம். சிந்தியா குறிப்பிட்டுள்ளார்.
இப்போதெல்லாம் பிரதமர் நரேந்திர மோடி, வேலை முடிந்ததோ, இல்லையோ, தரம் குறைந்த கட்டுமானங்களோ என்னவோ, எதை வேண்டுமானாலும் - நெடுஞ்சாலைகள், விமான நிலையங்கள், பாலங்கள், ரயில்கள் என - தொடக்கிவைப்பார் என்று சிந்தியாவுக்கு காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் டிவிட்டரில் பதிலளித்துள்ளார்.