வாழப்பாடி: சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டதால் ஆத்திரமடைந்த சந்திரப்பிள்ளை வலசு கிராம மக்கள், காலி குடங்களுடன் அயோத்தியாபட்டணம் சாலையில் வியாழக்கிழமை திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
வாழப்பாடி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது சந்திரப்பிள்ளை வலசு கிராமம். இந்த கிராமத்தில் தொடர் வறட்சியால் நிலத்தடி நீர்மட்டம் சரிந்து போன நிலையில், இந்த பகுதி மக்களுக்கு ஊராட்சியில் இருந்து சீரான குடிநீர் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இதனால் குடிநீருக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டதால் அவதிக்குள்ளான இந்த பகுதி மக்கள், சீரான குடிநீர் வழங்கக் கோரி, ஊராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த அந்த பகுதி மக்கள், காலிக்குடங்களுடன் வியாழக்கிழமை காலை பேளூர்- அயோத்தியாப்பட்டணம் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இது குறித்து தகவலறிந்து வந்த ஊராட்சி நிர்வாகத்தினர் மற்றும் வாழப்பாடி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஓரிரு நாள்களில் சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.
இதனையத்து, போராட்டத்தை கைவிட்டு மக்கள் கலைந்து சென்றனர்.