
மகாராஷ்டிர மாநிலம் புணேவில் ஓட்டுநரால் மதுபோதையில் ஒட்டப்பட்ட லாரி நடைபாதையின் மீது ஏறியதில் அதில் படுத்துறங்கிய 3 பேர் உடல் நசுங்கி பலியானார்கள். மேலும், 6 பேர் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடி வருகின்றனர்.
புணே மாவட்டம் வக்கோலியிலுள்ள கேசந்து பத்தா எனும் இடத்தில் இன்று (டிச.23) அதிகாலை சாலையோரமாக உள்ள ஒரு நடைபாதையின் மீது 12 பேர் உறங்கிக்கொண்டிருந்தனர்.
அதிகாலை சுமார் 1 மணியளவில் கஜானன் ஷங்கர் டோட்ரே (26) என்பவர் குடிபோதையில் டிப்பர் லாரியை வேகமாக ஒட்டி வந்துள்ளார், இதில் நிலைத் தடுமாறி அந்த லாரி நடைபாதையின் மீது ஏறியது.
அப்போது அதில் உறங்கிக்கொண்டிருந்த 9 பேரின் உடல்கள் நசுங்கியதில், வைபவி ரித்தேஷ் பவார் (வயது-1), வைபவ் ரித்தேஷ் பவார் (2) ஆகிய இரண்டு குழந்தைகளும் விஷால் வினோத் பவார் (22) இளைஞரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
இதையும் படிக்க: ஹரியாணா உணவகத்தில் மூவர் சுட்டுக் கொலை!
உடனடியாக அங்கிருந்தவர்கள் படுகாயமடைந்த 6 பேரை மீட்டு ஸஸ்ஸூன் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், படுகாயமடைந்தவர்களில் 3 பேர் உயிருக்கு போராடி வரும் நிலையில், நடைபாதையில் உறங்கிய மேலும் 3 பேர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த அம்மாநில காவல்துரையினர் மதுபோதையில் லாரியை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய ஓட்டுநரின் மீது கொலை வழக்குப்பதிவு செய்து அவரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.