/

“பிரதமர் மோடியின் வருகை வீண்முயற்சி”: ஜெயக்குமார் விமர்சனம்

பிரதமர் மோடியின் தமிழ்நாடு வருகை எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

News image
கோப்புப்படம்- dinamani online
Updated On :4 மார்ச் 2024, 8:02 am

DIN

சென்னை நந்தனத்தில் நடைபெறும் அரசியல் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக பிரதமர் மோடி இன்று தமிழ்நாடு வருகிறார். கடந்த 10 நாள்களுக்குள் இரண்டாவது முறையாக தமிழ்நாடு வரும் பிரதமர் மோடியின் வருகை அரசியல் அரங்கில் கவனம் பெற்றுள்ளது.

இந்நிலையில் பிரதமர் மோடியின் வருகையால் எந்த தாக்கமும் ஏற்படாது என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இந்த மண் திராவிட மண். இந்த திராவிட மண்ணில் வடக்கே இருக்கும் கட்சிகளால் ஆட்சி அமைக்க முடியாது. காங்கிரஸ் கட்சியிடம் கணிசமான வாக்கு இருந்தாலும் அதனால் ஆட்சியமைக்க முடியாது. அதேபோல்தான் பாஜகவும். அவர்களால் தேர்தலில் ஒரு சதவிகித வாக்குகளைக் கூடவோ அல்லது குறைவாகவோ பெற முடியுமே தவிர ஆட்சி அமைக்க முடியாது.

பிரதமர் மோடியின் வருகை எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. யார் தமிழ்நாடு வந்தாலும் அது வீணான முயற்சிதான்” என ஜெயக்குமார் குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய அவர், ”அதிமுக கூட்டணிக்காக யாரிடமும் கெஞ்சாது. எங்களுக்கு என தனித்தன்மையும் அடையாளமும் உள்ளது. அதிமுக தனியே தேர்தலில் போட்டியிட்டும் சாதனை படைத்துள்ளது. அதேசமயம் கூட்டணி என்பதை இதர கட்சிகள் விரும்பும்போது எப்படி அவர்களை சேர்த்துக் கொள்ளாமல் இருக்க முடியும்? யார் கூட்டணிக்கு வந்தாலும் அதை கட்சித் தலைமை பரிசீலிக்கும்.

யார் கூட்டணிக்கு வரவில்லை என்றாலும் அதைக் குறித்து கவலைப்படமாட்டோம். திமுக கூட்டணியைப் பொருத்தவரை ஊடங்களில் இழுபறி எனும் செய்திகள் வருகின்றன. இன்னும் காங்கிரஸ், விசிக உள்ளிட்ட கட்சிகளுடன் திமுக தொகுதிப் பங்கீட்டை முடிக்கவில்லை. திமுக கூட்டணியில் போட்டியிட்டால் அக்கட்சியால் ஒரு இடத்தைக் கூட வெற்றி பெற முடியாது” எனத் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.