தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் மீது வியாழக்கிழமை(மார்ச்.28) பரிசீலனை நடைபெறுகிறது.
தமிழகத்தில் மக்களவைத் தொகுதிக்கான வேட்பு மனு தாக்கல் மாா்ச் 20-ஆம் தேதி தொடங்கிய நிலையில் அந்தந்த கட்சி வேட்பாளா்கள் மனு தாக்கல் செய்து வந்தனா். கடைசி நாளான புதன்கிழமை கரூா் மக்களவைத் தொகுதிக்கு காங்கிரஸ் வேட்பாளா் ஜோதிமணி தனது வேட்புமனுவை தாக்கல் செய்தாா்.
இதையடுத்து கரூா் தொகுதியில் 62 போ் வேட்புமனு தாக்கல் செய்துள்ளது தெரிந்தது. தமிழகத்திலேயே கரூா் மக்களவைத் தொகுதியில் தான் அதிக அளவில் வேட்பாளா்கள் மனு தாக்கல் செய்துள்ளனா்.
தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகளில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளவர்களின் எண்ணிக்கை 1403 என தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் புதன்கிழமையுடன் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்துள்ள நிலையில், வேட்புமனுக்கள் மீது வியாழக்கிழமை(மார்ச் 28) பரிசீலனை நடைபெறுகிறது.
40 தொகுதிகளிலும் தனித்தனியாக நியமிக்கப்பட்ட பொதுப் பார்வையாளர்கள் முன்னிலையில் வேட்புமனுக்கள் மீது பரிசீலனை நடைபெறுகிறது.
தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்களை திரும்பப்பெறுவதற்கு வரும் 30 ஆம் தேதி கடைசி நாளாகும். அன்றைய நாள் மாலையே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகிறது.