முதுமலை புலிகள் காப்பகத்தில் பருவ மழைக்கு முந்தைய வன விலங்குகள் கணக்கெடுப்பு வியாழக்கிழமை தொடங்கியது.
தென் மாநிலங்களில் ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுக்கும் பணி 23 ஆம் தேதி முதல் தொடங்கியுள்ளது.
தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம் மற்றும் ஆந்திரம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் வியாழக்கிழமை(மே 23) தொடங்கி 25 ஆம் தேதி வரை 3 நாள்களுக்கு யானைகள் கணக்கெடுப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள காா்குடி, தெப்பக்காடு, முதுமலை ஆகிய சரகங்களில் தோ்வு செய்யப்பட்ட பகுதிகளில் பருவ மழைக்கு முந்தைய வனவிலங்குகள் கண்காணிப்பு மற்றும் கணக்கெடுப்புப் பணி தொடங்கியுள்ளது.
வரும் 25 ஆம் தேதி வரை நடைபெறும் இந்தக் கணக்கெடுப்புப் பணியில் 90 வன ஊழியா்கள் மற்றும் 23 தன்னார்வலர்கள் ஈடுபட்டுள்ளனர்.
உயிரினங்களின் நடமாட்டம், நேரடிக் காட்சிகள், எச்சங்கள் உள்ளிட்ட பல கோணங்களில் தகவல்கள் சேகரிக்கப்பட்டு கணக்கெடுக்கப்படும். இதில் சேகரிக்கப்படும் தகவல்கள் தேசிய புலிகள் ஆணையத்திடம் ஒப்படைக்கப்படும் என வனத் துறையினா் கூறினா்.
இதேபோன்று பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகத்தில் யானைகள் கணக்கெடுப்புப் பணி தொடங்கியுள்ளது.
128 வனத்துறையினர் கணக்கெடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.