
தில்லியிலுள்ள செங்கோட்டை மற்றும் ஜாமா மசூதிக்கு வெடி குண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து அங்கு பாதுகாப்புப் படையினர் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
தில்லியிலுள்ள புகழ்பெற்ற செங்கோட்டை மற்றும் ஜாமா மசூதிக்கு இன்று (ஏப்.10) காலை செல்போன் வாயிலாக மர்ம நபர் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து, இந்திய பாதுகாப்புப் படையினர் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் அங்கு சென்று அந்த இரண்டு கட்டடங்களிலும் அதனைச் சுற்றியுள்ள வளாகத்திலும் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
இந்நிலையில், அவர்கள் மேற்கொண்ட சோதனையின் முடிவில் வெடிகுண்டுகள் எதுவும் கண்டறியப்படாததினால் மர்ம நபர் விடுத்த வெடிகுண்டு மிரட்டல் போலியானது என உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து தில்லி தீயணைப்புப் படை அதிகாரி ஒருவர் கூறுகையில், தகவலறிந்த உடன் செங்கோட்டை மற்றும் ஜாமா மசூதியின் வளாகத்தில் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது எனவும் அந்தச் சோதனைகளில் சந்தேகப்படும்படியான எந்தவொரு பொருளும் கிடைக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, மும்பை தாக்குதல் குற்றவாளி தஹாவூர் ரானா அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு நாடுகடத்தப்பட்டுள்ள நிலையில் அவர் ஆஜர்படுத்தப்படும் தில்லியின் பட்டியலா நீதிமன்றம் அமைந்துள்ள பகுதி முழுவதும் ராணுவப் படையின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.