/

இபிஎஸ் பெயருடன் வந்த மின்னஞ்சல் மூலம் கேரள அரசு அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!

கேரளத்தின் அரசு அலுவலகத்துக்கு வெடி குண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதைப் பற்றி...

News image
கோப்புப் படம்
Updated On :16 ஏப்ரல் 2025, 1:58 pm

DIN

கேரள மாநில பாலக்காடு மாவட்டத்திலுள்ள அரசு அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

பாலக்காடு மாவட்டத்தின் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு மின்னஞ்சல் மூலமாக இன்று (ஏப்.16) காலை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனால், அந்த அலுவலகத்தின் ஊழியர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.

பின்னர், தீயணைப்புப் படையினர், வெடிகுண்டு நிபுணர்கள் ஆகியோர் மோப்ப நாய்களின் உதவியுடன் அந்த அலுவலகம் முழுவதும் சோதனை மேற்கொண்டனர்.

அந்தச் சோதனைகளின் முடிவில், கோட்டாட்சியர் அலுவலகத்தில் எந்தவொரு வெடிகுண்டும் கண்டுபிடிக்கப்படாத நிலையில் இந்த மிரட்டல் போலியானது என அறிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, அம்மாநில சைபர் கிரைம் காவல் துறையினர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது யார் எனக் கண்டறியும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த மிரட்டல் குறித்து வெளியான தகவலில் அந்த அலுவலகத்தில் ஆர்.டி.எக்ஸ். வெடிகுண்டு நிறுவப்பட்டுள்ளதாகவும் அது சரியாக மதியம் 1.30 மணிக்கு வெடிக்கும் எனவும் மிரட்டல் விடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இத்துடன், அந்த மிரட்டல் மின்னஞ்சலில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை அழிக்கும் முயற்சி நிகழ்த்தப்படும் அதே நேரத்தில் இந்த வெடிகுண்டு வெடிக்கும் எனக் கூறப்பட்டிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, கடந்த மாதம் கேரளத்தின் திருவனந்தபுரம், பத்தனம்திட்டா மற்றும் வயநாடு ஆகிய மாவட்டங்களின் ஆட்சியர் அலுவலகங்களுக்கு மின்னஞ்சல்கள் மூலம் போலியான வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.