
ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த நபர் 120 நாள்கள் கடல் நீருக்கடியில் வாழ்ந்து உலக சாதனை படைத்துள்ளார்.
ஜெர்மனியைச் சேர்ந்த ருடிகர் கோச் (வயது 59) எனும் விண்வெளி பொறியாளர் ஒருவர் கடலுக்கடியில் உருவாக்கப்பட்ட 320 சதுரடி அளவிலான நீர் புகாத தங்குமிடத்தில் வாழ்ந்து உலக சாதனை படைத்து கின்ன்ஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.
பனாமா கடல்பகுதில் 36 அடி ஆழத்தில் உருவாக்கப்பட்ட அந்த தங்குமிடத்தை விட்டு வெளியே வராமல் தொடர்ந்து 120 நாள்கள் அவர் தங்கியுள்ளார். அவரது இந்த சாதனைக்காக கடலுக்கு அடியில் உருவாக்கப்பட்ட தங்குமிடம் ஓர் மிகப்பெரிய குழாயின் வழியாக கடலுக்கு வெளியே இருக்கும் மற்றொரு அறையோடு இணைக்கும்படி உருவாக்கப்பட்டது. அந்த குழாயினுள் சுழலும் வடிவிலான படிகள் அந்த தங்குமிடத்தினுள் சென்றடையும்.
அந்த தங்குமிடம் முழுவதும் சூரிய ஒளியின் மூலம் மின்சாரம் பெறும் வசதி படைக்கப்பட்டிருந்த நிலையில், ஒரு படுக்கை, கழிப்பறை, தொலைக்காட்சி, இணைய வசதியுடன் கூடிய கணினி மற்றும் உடற் பயிற்சி வாகனம் உள்ளிட்டவை அதனுள் இடம்பெற்றிருந்தன.
இதையும் படிக்க: மும்மை பயங்கரவாதத் தாக்குதல் வழக்கு: தஹாவூர் ராணாவை நாடு கடத்த அமெரிக்கா அனுமதி!
அந்த படிகளின் வழியாக நாள்தோறும் அவருக்கான உணவுகள் அனுப்பப்பட்டதுடன், அவரை காண வருவோர் அவ்வழியாக உள்ளே செல்லவும் அதில் வசதி செய்யப்பட்டிருந்தது. மேலும், 24 மணி நேரமும் அவர் செய்யும் செயல்கள் உள்ளே பொருத்தப்பட்டிருந்த கேமராக்களின் மூலமாக பதிவு செய்யப்பட்டன.
இந்நிலையில், நேற்று (ஜன.24) கடல் நீருக்கடியில் 120 நாள்கள் கழித்த அவர், கின்னஸ் சாதனை தீர்ப்பாளர் சூஸனா ரெயிஸ் முன்னிலையில் வெளியே வந்தார். இதற்கு முன்னர் 100 நாள்கள் நீருக்கடியில் இருந்து சாதனை படைத்த அமெரிக்காவின் ஜோசப் டிடூரியின் சாதனையை இவர் முறியடித்துவிட்டதாக சூஸனா ரெயிஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
கடலை விட்டு வெளியே வந்த ருடிகர் கோச் இந்த சாதனையின் மூலம் கடல்கள் மனிதக்குலம் வாழ்வதற்கு மிகவும் ஏற்ற வகையிலான சுற்றுசூழல் பெற்றுள்ளது என்று நிருபிக்க முயற்சித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.