/

மகாராஷ்டிர அமைச்சரின் ராஜிநாமா ஏற்பு!

மகாராஷ்டிர அமைச்சரின் ராஜிநாமா ஏற்றுக்கொள்ளப்பட்டதைப் பற்றி...

News image

தனஞ்சய் முண்டே

Updated On :4 மார்ச் 2025, 7:29 pm IST

மகாராஷ்டிர மாநில அமைச்சரின் ராஜிநாமாவை அம்மாநில ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணன் இன்று (மார்ச்.4) ஏற்றுக்கொண்டுள்ளார்.

மகாராஷ்டிர மாநில பாஜக அரசின் கூட்டணிக் கட்சியான தேசியவாத காங்கிரஸைச் (அஜித் பவார்) சேர்ந்த தனஞ்சய் முண்டே, உணவு, குடிமைப் பொருட்கள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சராக பதவி வகித்து வந்த நிலையில், இன்று (மார்ச்.4) காலை அவரது ராஜிநாமா கடிதத்தை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸிடம் ஒப்படைத்தார்.

இதனைத் தொடர்ந்து, முதல்வர் அதை ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணனிக்கு அனுப்பி வைத்தார். முதல்வர் பட்னாவிஸ் அனுப்பி வைத்த உணவு, குடிமைப் பொருட்கள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சரின் ராஜிநாமாவை ஏற்றுக்கொண்டதாக மகாராஷ்டிர ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது.

முன்னதாக, பீட் மாவட்டத்தில் பஞ்சயாத்து தலைவர்  சந்தோஷ் தேஷ்முக் என்பவரின் கொலை வழக்கில் தனஞ்சய் முண்டேவின் நெருங்கிய உதவியாளரான வால்மிக் கர்காட் என்பவரை முதல் குற்றவாளியாக குறிப்பிட்டு மகாராஷ்டிர காவல்துறை குற்றப் புலனாய்வுப் பிரிவு (சிஐடி) குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்திருந்தது. இதனால், தனஞ்சயின் அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்யுமாறு முதல்வர் பட்னாவிஸ் உத்தரவிட்டார்.

அவரது ராஜிநாமா குறித்து தனஞ்சய் வெளியிட்ட அறிக்கையில், தனது மனசாட்சிக்கு இணங்கியும், மருத்துவக் காரணங்களுக்காகவும் தான் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாகக் கூறியுள்ளார்.

இருப்பினும், மாநில சட்டமன்ற அவை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, ​​அவைக்கு வெளியே ராஜினாமாவை அறிவித்ததற்காக முதலமைச்சருக்கு எதிராக உரிமை மீறல் வழக்கைத் தொடுப்போம் என்று காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார்) ஆகிய எதிர்கட்சிகள் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.