வகுப்பறையில் குறட்டைவிட்டுத் தூங்கிய ஆசிரியரைப் புகைப்படமெடுத்த மாணவன்!

வகுப்பு நேரத்தில் ஆசிரியர் ஒருவர் குறட்டை விட்டுத் தூங்கிய சம்பவமானது அந்த மாணவன், சக ஆசிரியர்கள் மற்றும் இப்போது காவல்துறையினர் என மூவரை குற்றவாளிகள் ஆக்கி விட்டிருக்கிறது.
வகுப்பறையில் குறட்டைவிட்டுத் தூங்கிய ஆசிரியரைப் புகைப்படமெடுத்த மாணவன்!

ஹைதராபாத்: பள்ளி நேரத்தில் பாடம் நடத்தாமல் குறட்டை விட்டுத் தூங்கிய கணித ஆசிரியரை புகைப்படமெடுத்து, வாட்ஸ் அப் மூலமாக அந்தப் புகைப்படத்தை மாவட்டக் கல்வி அதிகாரிக்கு அனுப்பி விட்டான் ஒரு மாணவன். இதை அவன் மட்டுமே தனியாகத் செய்து விடவில்லை. தன் நண்பர்களின் உதவியுடன் இப்படிச் செய்திருக்கிறான். இதனால் சம்பந்தப்பட்ட அந்த ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இதைக் கவனித்துக் கொண்டிருந்த பிற ஆசிரியர்களுக்கு புகைப்படப் புகார் அளித்த மாணவன் மீது இனம் புரியாத வன்மம் தோன்றியிருக்கிறது. அதன் விளைவாக அவர்கள் அந்த மாணவன் குறித்து காவல்துறையினருக்கு புகார் தட்டி விடவே; 

பள்ளி வளாகத்தில் தன் நண்பர்களுடன் குளிர்பானம் அருந்திக் கொண்டிருந்த அந்த மாணவனை, காரணமே சொல்லாமல் கொத்தாகப் பிடித்து பள்ளிக்குள் இருந்த கம்பத்தில் கட்டி வைத்து உதைத்து விட்டுச் சென்றிருக்கின்றனர் காவல்துறையினர். தெலுங்கானா, மெஹபூப் நகரிலுள்ள ஒரு பள்ளியில் நடைபெற்ற இந்தச் சம்பவம் அதைப் பார்த்துக் கொண்டிருந்தவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்குவதாக இருந்தது.

மாணவனை காவல்துறையினர் கம்பத்தில் கட்டி வைத்து உதைக்கும் போது அவனைச் சுற்றியிருந்த நண்பர்கள் அனைவரும் ஓடி விட்டிருந்தனர். பள்ளியின் பிற ஆசிரியர்களோ, அந்தத் தாக்குதலை தடுக்காமல் வேடிக்கை பார்த்து ரசித்துக் கொண்டிருந்திருக்கின்றனர். தற்போது உடல் முழுவதும் காயங்களுடன் அந்த மாணவன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான்.

இதில் ஆசிரியர் செய்தது தவறு என்றாலும், பள்ளி நேரத்தில் கையில் அலைபேசி வைத்திருந்த காரணத்துக்காக மாணவன் செய்ததும் தவறென்றே ஆகிறது. ஆசிரியர், மாணவரிடையே சரியான புரிந்துணர்வு இல்லாமல் போன காரணத்தால் கடைசியில் பிரச்னை 10 ஆம் வகுப்பு மாணவனொருவனை காவல்துறையினர் அடித்து உதைக்கும் அளவுக்கு பெரும் பிரச்னையாகி விட்டது. இதில் காவல் துறையினர் மீதும் தவறு இருக்கிறது. ஆக மொத்தத்தில் வகுப்பு நேரத்தில் ஆசிரியர் ஒருவர் குறட்டை விட்டுத் தூங்கிய சம்பவமானது அந்த மாணவன், சக ஆசிரியர்கள் மற்றும் இப்போது காவல்துறையினர் என மூவரை குற்றவாளிகள் ஆக்கி விட்டிருக்கிறது.

Image courtesy: NDTV

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com