இடுப்புச் சதை குறையனும்னா, கண்ணை மூடிட்டு கண்டிப்பா இந்த 7 உணவு வகைகளுக்கு நோ சொல்லனும்!

பிரெட் வகையறாக்களை தவிர்த்து விடுதல் மிக நல்லது. இல்லாவிட்டால் இந்த உணவுகள் ரத்தத்தில் சர்க்கரையில் அளவை அதிகரிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கத் தொடங்கி விடும் அபாயம் உண்டு
இடுப்புச் சதை குறையனும்னா, கண்ணை மூடிட்டு கண்டிப்பா இந்த 7 உணவு வகைகளுக்கு நோ சொல்லனும்!

நம்மில் பலருக்கும் ஃபிளாட்டான வயிறு வேண்டும் என்ற ஆசை இருக்கும். இடுப்பைச் சுற்றி டன்லப் டயர்களை மாட்டிக் கொண்டு அலைந்தாற் போன்று நீடித்த  தொந்தியும், தொப்பையுமாக இருக்க யாருக்குத்தான் பிடித்திருக்கிறது?! ஒருவகையில் குண்டாக இருப்பவர்கள் அனைவருக்குமே இது வாழ்நாள் கனவாக இருக்கலாம். சிலர் எப்படியாவது ஜிம், வொர்க் அவுட், டயட், யோகா, உடற்பயிற்சி, ஜூம்பா நடனம் என பாடாய்ப்பட்டு கருமமே கண்ணாக இருந்து இளைத்தும் விடுகிறார்கள். அதாவது சிலரால் மட்டுமே அப்படி இளைக்க முடிகிறது! ஆனால் பலருக்கும் இந்த ஃப்ளாட் டம்மி அட... அதாங்க தொப்பை இல்லாத வயிறு என்பது வாழ்நாள் முழுமைக்கும் நிறைவேறாத கனவாகவே நீடித்து விடுகிறது. அவர்கள் வேறென்ன செய்து தொப்பையைக் குறைக்கலாம் என்று நாளும் சிந்தித்துக் கொண்டிருப்பார்கள். அவர்களுக்கு இந்த டிப்ஸ் ஓரளவு உபயோகமாக இருக்கலாம்.

கீழே பட்டியலிடப்பட்டுள்ள உணவுப் பொருட்களை எல்லாம் தொப்பை இருப்பவர்கள் மட்டுமல்ல கடும் பிரயத்தனப்பட்டு ஃபிளாட் டம்மி என்ற இலக்கை எட்டியவர்களும் கூட அதே நிலை நீடிக்க வேண்டுமென்றால் இவற்றையெல்லாம் தவிர்த்து விட்டால் நல்லது. 

மாட்டிறைச்சி...

சிவப்பு இறைச்சி என்று சொல்லப்படக் கூடிய ஆடு மற்றும் மாட்டிறைச்சி வகையறாக்களில் விட்டமின்களும், மினரல்களும் அதிகமிருக்கும். அதுமட்டுமல்ல அவற்றில் பிரதான சத்தாக புரதம் பெரும்பங்கு வகிக்கும். வயிறு ஃபிளாட்டாக இருக்க வேண்டும் எனக் கடும் முயற்சி எடுத்து வயிற்றுச் சதையைக் குறைத்தவர்கள் இவ்வகை இறைச்சிகளை உண்டால் மீண்டும் உடல் எடை அதிகரிப்பதோடு, உடலில் கொழுப்புச் சத்தும் கூடும். இறைச்சியில் உள்ள சோடியம் மற்றும் பதப்படுத்தலுக்குச் சேர்க்கப்பட்ட பொருட்களால் இடுப்பைச் சுற்று மீண்டும் சதை மிகுந்து தொப்பை வரக் காரணமாகி விடும். எனவே தொப்பையை வெறுப்பவர்கள் மிதமிஞ்சிய இறைச்சியையும் தவிர்த்து விடுங்கள்.

இயல்பாகவே மாட்டிறைச்சியில் கொழுப்பு அதிகமிருக்கும். செரிப்பதற்கு நேரமாகும். அதனால் அடிவயிற்றுப் பகுதியில் கொழுப்பு சேகரிக்கப்பட்டு எடை அதிகரிப்பால் இழந்த தொப்பையை மீண்டும் பெற்றுக் கொண்டது போலாகி விடும்.

அதற்காக மாட்டிறைச்சியே உண்ணக் கூடாது என்பதில்லை. உண்ணலாம். ஆசைக்கு சிறு, சிறு துண்டுகளாக உண்ணப் பழகலாம். அதிகமாக உண்டால் தான் ஆபத்தே!

மக்காச்சோளம்...

அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பது பழமொழி, அதற்கேற்ப எதை உண்பதாக இருந்தாலும் அளவுடனே உண்ண வேண்டும். ருசியாக இருக்கிறதே என்று நிறைய சாப்பிட்டுக் கொண்டே இருந்தால் பிறகு அதுவே ஒரு பழக்கமாகி உடல் எடை கூடுவதற்கான காரணங்களில் மிக முக்கியமானதாகி விடும். சிலருக்கு மக்காச்சோளம் சாப்பிடப் பிடிக்கும். சுவையாக இருப்பதால் மட்டுமல்ல, அதை அதிகமாக உண்டாலும் கூட வயிறு நிறைந்தாற் போலான உணர்வு ஏற்படுவதில்லை என்பதாலும் தான். ஆனால், சோளத்தில் நிறைந்திருப்பது முழுதுமே சர்க்கரையும், ஆற்றலும் தான். சோளத்தில் நிறைந்திருக்கும் ஃப்ரக்டோஸ் எனும் சர்க்கரை உடல் உள்ளுறுப்புகளில் கொழுப்பு படிவதற்கும், தேங்குவதற்கும் மிக முக்கியமான காரணியாகி விடுகிறது. இதனால் உடல் எடை கூடுவதோடு கல்லீரலைச் சுற்று கொழுப்பு படிவதற்கும் காரணமாகி விடுகிறது. சோள உணவுகளால் உடல் எடை அதிகமாவதைத் தடுக்க வேண்டுமெனில் பிறகு மீண்டும் டயட் என்றும் உடற்பயிற்சி என்றும் போராடியாக வேண்டும். இது தேவையா?!

சோளம் அல்லது கார்ன் சாப்பிடுவதென்றால் அளவாகவோ அல்லது குறைவாகவோ சாப்பிடலாம். தினமும் கார்ன் சாப்பிட்டுத்தான் ஆக வேண்டுமெனில் புரத உணவு அல்லது கொழுப்பு சார்ந்த உணவுகளுடன் எடுத்துக் கொண்டால் வயிற்றுப் பகுதியில் சதை போடுவதைத் தவிர்க்கலாம்.

சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை...

சர்க்கரை முழுக்க முழுக்க மாவுச்சத்தும் சத்துக்களற்ற ஆற்றலும் மட்டுமே கொண்டது. அதில் உடல் ஆரோக்யத்துக்குத் தேவையான எவ்விதமான சத்துக்களும் இல்லை. குழந்தைகள் எழுச்சியுடன் இயங்கா விட்டால் ஆற்றல் கிடைப்பதற்காக மட்டுமே அவர்கள் அருந்தும் பானங்களில் அல்லது உணவுகளில் சர்க்கரை சேர்க்க வேண்டும். தற்போது சந்தையில் சரளமாகக் கிடைக்கும் குளிர்பானங்கள் மற்றும் எனர்ஜி பானங்களில் உடல் எடையை அதிகரிக்கச் செய்யும் சர்க்கரை மூலப்பொருளே அதிகமாகச் சேர்க்கப்பட்டுள்ளது. அவற்றை அருந்துவதால் உடல் எடை அதிகரிப்பதோடு ஒபிஸிட்டி உள்ளிட்ட பல்வேறு வகையான உடல்நலக் கோளாறுகளும் வரக்கூடும். எனவே எந்த அளவுக்கு முடியுமோ அந்த அளவுக்கு சுத்திகரிக்கப் பட்ட சர்க்கரை கலந்த பானங்கள் மற்றும் ஸ்னாக்ஸ் வகையறாக்களை சாப்பிடுவதைத் தவிர்த்து விடுவது நல்லது.

சுத்திகரிக்கப்பட்ட தானியங்கள்...

சுத்திகரிக்கப்பட்ட தானியங்களில் இருந்து தயாரிக்கப்படும் பிரெட், பிஸ்கட், வொயிட் பிரெட், ரஸ்க் போன்றவற்றைச் சாப்பிடுவதாலும் உடல் எடை கூடும். அதுமட்டுமல்ல சுத்திகரிக்கப்பட்ட தானியங்கள் அவ்விதமாக சுத்திகரிக்கப் படுவதற்காக பல்வேறு விதமான ரசாயனங்களைப் பயன்படுத்துகின்றனர். அந்த ரசாயனங்களால் அந்தந்த தானியங்களுக்குண்டான இயல்பான சத்துக்கள் கெடுகின்றன. முடிவில் நமது தட்டுக்கு கொண்டு வரப்படும் போது அது நாம் உண்ணத்தகாத உணவுப் பொருளாகக் கூட பல சந்தர்பங்களில் மாறி விடுகிறது. எனவே பழைய காலங்களைப் போல கைக்குத்தல் அரிசியும், கழனி நெல்லும், புஞ்சை நிலத்து கம்பு, சோளம், கேழ்வரகுமாக உண்டு வாழ்வதே நலம் தரக்கூடும். முக்கியமாக இந்த பிரெட் வகையறாக்களை தவிர்த்து விடுதல் மிக நல்லது. இல்லாவிட்டால் இந்த உணவுகள் ரத்தத்தில் சர்க்கரையில் அளவை அதிகரிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கத் தொடங்கி விடும் அபாயம் உண்டு.

ஃப்ரக்டோஸ் எனும் சர்க்கரை மூலக்கூறு அதிகமுள்ள பழங்கள்...

பழங்களில் இயற்கையாகவே நார்ச்சத்து, புரதம், விட்டமின்கள் மற்றும் மினரல் சத்துக்கள் நிறைந்திருக்கும். அதனால் தான் பழங்களை நாம் சரிவிகிதமான சத்துக்களைக் கொண்ட உணவுகளாகக் கருதுகிறோம். ஆனால், பழங்களிலுமே கூட கொய்யா, செர்ரி, லிச்சி மற்றும் மாம்பழம் போன்ற பழங்களில் ஃப்ரக்டோஸ் எனும் சர்க்கரை மூலக்கூறு அபிரிமிதமாக இருப்பதால் அவை மேலும் மேலும் அந்தப் பழங்களை உண்ணும் விருப்பத்தை அதிகரிக்கச் செய்வதோடு இனிப்பான உணவுகளை அடிக்கடி சாப்பிடும் ஆசையையும் தூண்டும் விதமாக செயல்படுகின்றன. இதனால் உடலில் சர்க்கரை மூலக்கூறுகளின் எண்ணிக்கை அதிகமாகி விதம், விதமான சர்க்கரை மூலக்கூறுகளுக்கு ஏற்ப உடலில் வெவ்வேறு விதமான விளைவுகளும் ஏற்படுகின்றன.

எனவே பழங்களாகவே இருந்தாலும் ஃப்ரக்டோஸ் அதிகமுள்ள பழங்களை சுவைக்காக அதிகமாக உண்ணாமல், அளவோடு அன்றாட உணவுடன் இணைத்து உண்டால் ஆரோக்யமே. இல்லாவிட்டால் இடுப்புச் சதை இடைஞ்சல் தரலாம். 

சோடியம் அதிகளவுள்ள உணவுப் பொருட்கள்...


நீங்கள் உண்ணும் உணவில் மிதமிஞ்சிய அளவில் சோடியம் இருந்தால் உடலில் நீர்ச்சத்து அதிகமாக நீங்களே காரணமாவீர்கள். உடலில் நீர்ச்சத்து குறையாதிருக்க வேண்டும் என்பது எத்தனை முக்கியமானதோ அதே விதமாக நீர்ச்சத்து அதிகரிக்காமலிருப்பதும் முக்கியம். நீர்ச்சத்து அதிகரித்தால் அது ஒபிஸிட்டிக்கு வழிவகுக்கும். இதைத் தவிர்க்க உணவில் உப்பின் அளவைக் குறைப்பதைத் தவிர வேறு வழியில்லை.

நாளொன்றுக்கு மனித உடலுக்குத் தேவையான உப்பின் அளவு 200 முதல் 250 கிராம் மட்டுமே என்கின்றன அறிவியல் ஆய்வுகள். ஆனால், இன்று பாக்கெட் செய்து விற்கப்படும் அனைத்து விதமான உணவுப் பொருட்களிலும் உப்பு அபிரிமிதமான அளவிலே கலக்கப்படுகிறது. அது உடலுக்கு கேடான விளைவுகளை மட்டுமே தருவதில்லை. உங்களது தோற்றப் பொலிவைக் கெடுப்பதிலும் முக்கியமாகச் சொல்வதென்றால் உங்களது இடுப்புச் சதை அதிகரிப்பதிலும் மிக முக்கிய பங்காற்றுகிறது.

எனவே உணவில் உப்பின் சதவிகிதத்தைக் குறைத்தால் எந்த வித நஷ்டமுமில்லை. 

ட்ரான்ஸ் ஃபேட்...

இந்த ட்ரான்ஸ் ஃபேட் என்று சொல்லப்படக்கூடிய கெட்ட கொழுப்புகளில் உடல் ஆரோக்யத்துக்குத் தேவையான எவ்விதமான சத்துக்களும் இல்லை. அவற்றில் முழுக்க முழுக்க நிறைந்திருப்பது செயற்கை சர்க்கரை மூலக்கூறுகளும், சத்துக்களற்ற வெற்று கலோரிகளும் தான். இவற்றை உண்பதால் உடல் எடை கூடுமே தவிர உடலை ஸ்திரப்படுத்தத் தக்க ஆற்றல் எதுவும் கிடைக்கப் போவதே இல்லை. நாம் தினம் உண்ணும் சிப்ஸ், பிஸ்கட்டுகள், வேஃபர் பிஸ்கட்டுகள், மைக்ரோ வேவ் பாப்கார்ன், ஃப்ரைடு சிக்கன், ஃப்ரெஞ்ச் ஃப்ரை போன்ற ஸ்னாக்ஸ் வகையறாக்கள் அனைத்தும் டீப் ஃப்ரை என்று சொல்லப்படக் கூடிய எண்ணெயில் முழுக்காட்டி பொரிக்கப்பட வேண்டிய வகையறாக்கள். இப்படிப் பொரித்து உண்பதால் சுவை கூடுமே தவிர, அதில் உடல் ஆரோக்யத்துக்கு எவ்வித பலனும் இல்லை. இந்த வகை உணவுகளைத் தொடர்ந்து எடுத்துக் கொண்டால் உடல் எடை நிச்சயமாக உயரும். குறிப்பாக இடுப்பைச் சுற்றி சதை போடும்.

எனவே இதன் மூலம் இடுப்புச் சதை கூடக்கூடாது என்று நினைப்பவர்கள் தயவு செய்து கேக்குகள், குக்கீஸ்கள், ப்ரெட் வகையறாக்கள் மற்றும் கடைகளில் ரெடி மேடாகக் கிடைக்கும் பாக்கெட் செய்யப்பட்ட உணவு வகைகளைத் தவிர்த்து விடுவது நல்லது.
 

Image courtesy: NDTV.COM

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com