கீரை ப்ரியர்களுக்கு ஒரு சர்ப்ரைஸ்! 40 வகை கீரைகளும், பலன்களும் (படங்களுடன்)

கிட்டத்தட்ட 42 வகைக் கீரைகளைப் பற்றி நாம் இங்கே தெரிந்து கொண்டிருக்கிறோம். இவற்றுள் 20 வகைக் கீரைகளை மட்டுமே வாரத்தில் இருமுறையோ, மூன்று முறையோ உணவாகப் பயன்படுத்தி வருகிறோம்.
கீரை ப்ரியர்களுக்கு ஒரு சர்ப்ரைஸ்! 40 வகை கீரைகளும், பலன்களும் (படங்களுடன்)

கீரையில் பலவகைக் கீரைகள் உள்ளன. அவற்றில் சுமார் 20 வகைகளைத் தவிர பிற கீரை வகைகளை நாம் அறிந்திருக்க வாய்ப்புகள் குறைவு. முதலில் உங்களுக்கு நன்கு அறிமுகமான கீரைகள், இதுவரை நீங்கள் சமைத்து சாப்பிட்ட கீரை வகைகளை எல்லாம் பட்டியலிடுங்களேன்... பிறகு தெரியும் நமக்குத் தெரியாமலும், இன்னும் சமைத்து உண்ணப்படாமலும் எத்தனை, எத்தனை கீரை வகைகளை நாம் விட்டு வைத்திருக்கிறோம் என; பொதுவாக...

அரைக்கீரை...

  • இக்கீரையை உணவில் சேர்த்து வர வாயுக் கோளாறுகள், வாத வலி நீங்கும்.
  • இக்கீரை விதைகளை எண்ணெயிலிட்டு காய்ச்சி, தலையில் தேய்த்துக் குளித்து வர தலைமுடி நன்கு வளரும். தலைச்சூடு குறையும்.
  • இக்கீரை குழம்பு அடிக்கடி உண்டுவர தலைவலி, உடல்வலி நீங்கும். காய்ச்சல், உடல் குளிர்ச்சியை இக்கீரை குணப்படுத்தும்.
  • இக்கீரையை அரைத்துச் சாறு எடுத்து, தேனில் கலந்து அருந்த உடல் பலத்தைக் கூட்டும். தாது பலத்தை அதிகரிக்கும்.
  • இக்கீரையை பிரசவமான பெண்களுக்கு உணவோடு கொடுக்க, உடல் பலவீனம் மாறும். அரைக்கீரை கூட்டு மலச்சிக்கலை நீக்கும். ஜலதோசம் மாறும்.
  • இக்கீரையோடு நறுக்கிய சின்ன வெங்காயத்தைச் சேர்த்து சமைத்து உண்டிட குளிர் காய்ச்சல் சளி தீரும்.
  • இக்கீரை நரம்பு நோய்களைக் குணப்படுத்தும்.
  • இக்கீரையை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால், பசியற்ற நிலையை மாற்றி பசியையூட்டும்.
  • இக்கீரை பித்தக் கோளாறுகளால் ஏற்படும் தலைச்சுற்று வாந்தி போன்றவற்றைக் குணப்படுத்தும்.
  • இக்கீரையை எவ்விதத்திலாவது உணவில் சேர்த்து வந்தால் இருதயம், மூளை வலுப்பெறும்.
  • இருமல், தொண்டைப் புண் இவற்றை அரைக்கீரை குணப்படுத்தும்.
  • உடலில் வைட்டமின் குறைப்பாட்டால் ஏற்படும் நோய்களை இது தடுக்கும்.

முளைக்கீரை...

  • முளைக்கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியத்துக்கு தேவையான வைட்டமின்களும் தாதுப்பொருட்களும் உடலுக்கு போதிய அளவில் கிடைக்கும்.  குழந்தைகளுக்குத் தொடர்ந்து 40 நாட்கள் கொடுத்து வந்தால் நன்கு உயரமாக வளருவார்கள். 
  • முளைக்கீரை சாற்றில் சீரகத்தை ஊறவைத்து, உலர்த்தி, தூள் செய்து சாப்பிட்டால் பித்த நோய், மயக்கம், ரத்த அழுத்தம் போன்றவை சரியாகும்.
  • சிறுவர், சிறுமியருக்கு முளைக்கீரை நல்லது. முளைக்கீரையை சாப்பிட்டால் நன்கு பசி எடுக்கும். காச நோயால் ஏற்படும் காய்ச்சலை நீக்கும் ஆற்றல் உடையது. முளைக்கீரையுடன் சிறு பருப்பு சேர்த்து சமைத்து சாப்பிட்டால் குடல்புண் குணமாகும்.
  • முளைக்கீரை சாற்றில் முந்திரி பருப்பு, மஞ்சள் சேர்த்து அரைத்து முகத்தில் தடவிவந்தால், முகப்பரு, தேமல் போன்றவை மறைந்து முகப்பொலிவு உண்டாகும்.
  • சொறி, சிரங்கு முதலிய நோய்கள், இக்கீரையை உண்பதினால் குணமடையும். இந்த கீரையானது வெப்ப சுரத்தை தணிக்க வல்லது. முளைக்கீரை சாற்றில் உளுந்து ஊற வைத்து அரைத்து சாப்பிட்டால் நீர் கடுப்பு மறையும்.

அகத்திக்கீரை...

  • அகத்திக்கீரை, பூ, பிஞ்சு ஆகியவை சமைத்து உண்ணப்படுகின்றன. இலை, பூ, வேர், பட்டை ஆகியவை மருத்துவப் பயனுடையவை. பொதுவாக கீரை மலமிளக்கியாகவும், வேர் உடல் பலம் தரும் மருந்தாகவும் பயன்படும்.
  • அகத்திக்கீரையை வாரம் ஒருமுறை சமைத்து உண்ண வெயிலில் அலைவதால் ஏற்படும் வெப்பும், லமச்சிக்கல், காபி, டீ இவை குடிப்பதால் ஏற்படும் பித்தம் ஆகியவை தீரும்.
  • அகத்திக் கீரை மரப்பட்டையையும், வேர்ப்பட்டையையும் குடிநீராக்கிக் குடித்து வர சுரம், தாகம், கை கால் எரிவு, மார்பு எரிச்சல், உள்ளங்கால், உள்ளங்கை எரிச்சல், நீர்க்கடுப்பு, நீர்த்தாரை எரிச்சல், அம்மைச்சுரம் ஆகியவை தீரும்.
  • குழம்பு வைக்கையில் தாளிதத்துடன் கறிவேப்பிலைக்கு பதிலாக அகத்தியை சிறிது வதக்கி சேர்த்தால் உடல்சூடு, வாய்ப்புண், வயிற்றுப் புண் அகலும். 

முருங்கைக்கீரை...

  • முருங்கைக் கீரையை 40 நாட்கள் நெய்விட்டு, வெங்காயம் போட்டு, பொறியல் செய்து நண்பகலில் உணவில் சாப்பிட ஆண்மை பெருகும். விந்து கெட்டிப் படும். உடலுறவில் மிக்க இன்பம் பெறுவார்கள். புளியைக் குறைக்க வேண்டும். தவிர்க்க வேண்டும். பெண்களுக்கு வரும் சூதகவலிக்கு இதன் இலைச்சாறு பிழிந்து 30 மில்லி இரு வேளை குடிக்க குணமாகும். அடிவயிற்றில் வலியும், விலக்கு தள்ளிப் போவதால் ஏற்படும் வலியும் குணமாகும்.
  • இலையை அடிக்கடி பொரியல் செய்து சாப்பிட பித்த மயக்கம், மலச்சிக்கல், கண்நோய், கபம், மந்தம் தீரும். கீரையில் சுவையான கீரையும் சத்தான கீரையும் இதுதான். இலையை ஆமணக்கெண்ணையில் வதக்கி ஒத்தடம் கொடுக்க வாத மூட்டுவலி, இடுப்பு வலி, உஷ்ணத்தால் வரு வயிற்று வலி நீங்கும்

புளிச்ச கீரை (கோங்குரா)...

  • பெயருக்கு ஏற்றார்போல புளிப்பு சுவையுள்ள இந்த கீரை, உடல் வலிமையை பெருக்குவதில் முதன்மை வகிக்கிறது. நோஞ்சானாக தெரியும்
  • குழந்தைகளுக்கு அடிக்கடி இந்த_கீரையை சிறிதளவெனும் சமைத்து சாப்பிட கொடுத்து வந்தால் உடம்பு தேறுவார்கள். 
  • இதன் மகத்துவம் தெரிந்துதான் ஆந்திர மக்கள் இந்த கீரையை "கோங்குரா சட்னியாக" செய்து தினமும் உணவில் சேர்த்துக் கொள்கிறார்கள்.
  • இந்த கீரையில் தாதுபொருட்களும், இரும்பு சத்துக்களும் அதிக அளவில் உள்ளன. இது தவிர வைட்டமின் சத்துக்களும் கணிசமான அளவு கலந்துள்ளன.
  • எல்லாவிதமான வாத கோளாறுகளையும் குணப்படுத்தும் வல்லமை இந்த கீரைக்கு உண்டு என்பார்கள்.
  • சொறி, சிரங்கு போன்ற சரும நோய் உள்ளவர்கள் இந்த கீரையை சட்னி செய்து உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் விரைவில் குணம் பெறலாம் என்பார்கள்.

சிறுகீரை...

  • இதில் சுண்ணாம்புச்சத்து, இரும்புச்சத்து மிக அதிக அளவில் உள்ளன. 90 சதவிகிதம் நீர்ச்சத்து, புரதம், கொழுப்பு, தாது உப்பு, மாவுச் சத்து ஆகியவையும் இதில் உள்ளன. வைட்டமின் ஏ, பி, சி மூன்றும் இதில் சம விகிதத்தில் கலந்துள்ளன.
  • சர்க்கரை நோய் உள்ளவர்கள் இக்கீரையை தினமும் சாப்பிட்டால் இன்சுலின் இயல்பாக சுரக்கும்.
  • சிறுகீரையுடன் துவரம்பருப்பும், வெங்காயம் சேர்த்து இந்தக் கீரையை நெய்யில் வதக்கிக் கடைந்து, தொடர்ச்சியாக 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால், உடல் வலிமை பெறும்.
  • குடல், இருதயம், மூளை, இரத்தம் இவைகளுக்கு நல்ல வலிமையை தரும். சிறுகீரையை அன்றாட உணவில் சேர்த்துக்கொண்டு வந்தால் இருதய வியாதிகள் நீங்கும்.
  • சிறுகீரை உடலுக்கு அழகையும், முகத்துக்குப் பொலிவையும் தரவல்லது.

வல்லாரைக் கீரை...

  • வல்லாரை கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், ஞாபக சக்தி அதிகரிப்பதுடன், மூளை நரம்புகள் வலுப்பெறும். இக்கீரை, இருமல், தொண்டைக்கட்டை நீக்குவதுடன், பல் ஈறுகளை வலுப்படுத்தும். காச நோய்க்கு சிறந்த மருந்து.
  • வல்லாரை கீரை, சின்ன வெங்காயம், பூண்டு மற்றும் மிளகு சேர்த்து சட்னியாக்கி, தொடர்ந்து, 48 நாட்கள் சாப்பிட்டால், மூளை சோர்வு நீங்கி, ஞாபக சக்தி அதிகரிக்கும்.

மணத்தக்காளிக் கீரை...

  • சருமம் தொடர்பான பல நோய்கள் வராமல் கட்டுபடுத்தும் ஆற்றல் கொண்டது.
  • இதில் வைட்டமின் இ, டி அதிக அளவில் உள்ளன. நார்ச்சத்து மிகுந்தது. இந்தக் கீரையைத் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால், வயிற்றில் ஏற்படும் புண்களைக் குணப்படுத்தும்.
  • மணத்தக்காளிக் கீரையைச் சமைத்துச் சாப்பிட்டு வந்தால், இருமல், இளைப்பு பிரச்னை குணமாகும். வயிற்றுப்போக்கைக் கட்டுப்படுத்தும் சக்தி மிகுந்தது இந்தக் கீரை. சிறுநீர், வியர்வையைப் பெருக்கி உடலில் உள்ள கெட்ட நீரை வெளியேற்றும். மணத்தக்காளி இலைச்சாற்றை 35 மி.லி வீதம் நாள்தோறும் மூன்று வேளைகள் உட்கொண்டுவந்தால், சிறுநீரைப் பெருக்கும்; உடலில் நீர் கோத்து ஏற்படும் வீக்கம், உடல் வெப்பம் ஆகியவற்றைக் குணப்படுத்தும்.

பசலைக்கீரை...

  • பசலைக் கீரையில் வளமான அளவில் இரும்புச் சத்து இருப்பதால், இதனை உட்கொண்டால் ரத்த சோகையில் இருந்து விடுபடலாம். மேலும் இது ரத்த அழுத்தம் மற்றும் இதய நோயாளிகளுக்கு ஏற்ற ஒரு சிறப்பான உணவுப்பொருள்.
  • முக்கியமாக உடல் பருமனால் அவஸ்தைப் படுபவர்கள், இதனை தினமும் டயட்டில் சேர்த் தால் நல்ல பலன் கிடைக்கும். இது மாதிரி பசலைக் கீரையை உட்கொண்டால், கிடைக்கும் நன்மைகளைப் பற்றி சொல்ல ஆரம்பித்தால், சொல்லிக் கொண்டே போகலாம்.

பாலக் கீரை அலைஸ் பருப்புக் கீரை...

  • பாலக்கீரை போல் உடலுக்கு நன்மை தரும் கீரை வேறெதுவும் இல்லை. இரும்புச்சத்து, பீட்டா கரோட்டின், ஃபோலிக் அமிலம், கால்சியம் போன்றவை இதில் அடங்கியுள்ளன.
  • இந்த கீரையில் உள்ள சில ரசாயனப் பொருட்கள் பார்வைக் குறைவை தடுக்கிறது. மலச் சிக்கலை போக்கிறது.
  • இதில் மிக அதிகமாக உள்ள பச்சையம் கொழுப்பை கரைக்கும் தன்மையுள்ளது.
  • ரத்தத்தின் சிவப்பு அணுக்கள், ஹீமோகுளோபின் ஆகியவை அதிகமாக உற்பத்தியாக உதவுகிறது.

குப்பைக்கீரை...

  • குப்பைக்கீரையுடன் பருப்பு சேர்ந்து கடைந்து சாப்பிட்டால் உடல் சூடு குறையும்.
  • குப்பைக்கீரை, முடக்கறுத்தான், சீரகம் மூன்றையும் சூப்வைத்து சாப்பிட்டால் மூட்டுவலி குணமாகும்.
  • ஒரு கைப்பிடி குப்பைக்கீரையுடன் இரண்டு சிட்டிகை மஞ்சள் தூள், அரை டீ ஸ்பூன் ஓமம் சேர்த்து நன்றாக காய்த்து அந்த சாற்றை பருகினால் நெஞ்சு எரிச்சல் குணமாகும்.
  • உடலின் மேல் ஏற்படும் கட்டிகளின்மீது இந்தக் கீரையை அரைத்து பூசிவந்தால் கட்டிகள் கறந்து குணம் கிடைக்கும்.
  • அடிப்பட்ட இடத்தில் வீக்கம் ஏற்பட்டால் குப்பைக்கீரையுடன் மஞ்சள் சேர்த்து அரைத்து பூசினால் வீக்கம் வடியும்.

பச்சைப் பொன்னாங்கன்னி...

  • கண்பார்வைக்கு மிகவும் நல்லது.
  • சருமத்துக்கு மிகவும் நல்லது.
  • மூல நோய், மண்ணீரல் நோய்களை சரிப்படுத்தும் ஆற்றல் உடையது.
  • ரத்தத்தைச் சுத்தீகரிக்கும்
  • உடலுக்கு புத்துணர்ச்சியைத் தரும்.
  • வாய் துர்நாற்றத்தை நீக்கும்.
  • இதயத்திற்கும் மூளைக்கும் புத்துணர்வு ஊட்டும்.

இக்கீரையின் சாறு எடுத்து நல்லெண்ணையுடன் சேர்ந்து தைலம் காய்ச்சி தலைக்குத் தேய்த்துக் குளித்து வர கண் எரிச்சல், உடல் உஷ்ணம்- போன்றவைகள் நீங்கி உடல் குளிர்ச்சிப் பெறும்.

சிவப்புப் பொன்னாங்கன்னி...

பச்சைப் பொன்னாங்கண்ணியில் இருக்கும் அத்தனை சத்துக்களும், பயன்களும் சிவப்புப் பொன்னாங்கண்ணிக்கும் உண்டு. ஆனால் பச்சை தான் நாட்டுப் பொன்னாங்கண்ணி என கொண்டாடப்படுகிறது. சிவப்பை சீமைப் பொன்னாங்கண்ணி என்றும் அதில் நாட்டுப் பொன்னாங்கண்ணியைக் காட்டிலும் சத்துக்களும், பயன்களும் குறைவு என்றும் மக்கள் கருதுகிறார்கள். சீமைப் பொன்னாங்கண்ணியை வெறும் அழகுக்காக வளர்ப்பவர்களும் இருக்கிறார்கள்.

வெந்தயக்கீரை...

  • வெந்தயக் கீரையோடு, நாட்டுக் கோழி முட்டையில் வெள்ளை கரு, தேங்காய் பால், கசகசா, சீரகம், மிளகு, பூண்டு போன்றவற்றை சேர்த்து சிறிதளவு நெய் கலந்து சமைத்து சாப்பிட்டால் இடுப்பு வலி குணமாகும்.
  • கபம் சளி உள்ளவர்கள் வெந்தயக் கீரை சாப்பிட்டால் விரைவாக குணமடையலாம்.
  • மந்தமாக உணர்பவர்கள், அல்லது உடல் சோர்வாக உணர்பவர்கள் வெந்தயக் கீரை சாப்பிடலாம். இது உடலின் செயலாற்றலை அதிகரித்து சுறுசுறுப்பாக உதவும்.
  • நரம்பு தளர்ச்சி உள்ளவர்களுக்கு வெந்தயக் கீரை ஓர் சிறந்த மருந்தாகும், இது நரம்பு தளர்ச்சியில் இருந்து மீண்டுவர சீரிய முறையில் உதவும்.

புதினாக்கீரை...

  • இக்கீரையை உணவில் சேர்த்து கொள்வதால் பசியைத்தூண்டி உணவிற்கு  ருசியையும் கொடுக்கிறது .
  • வாந்தியையும் கட்டுப்படுத்துகிறது .
  • தொடர்ந்து எடுக்கும் விக்கல் நீங்கும் .
  • மயக்கத்தை நீக்க இக்கீரையை கசக்கி நுகரலாம் .
  • தலைவலிக்கு இதன் சாற்றை   நெற்றியில் பூசலாம் .
  • வாத நோய்க்கும் காய்ச்சலுக்கும் ,வறட்டு இருமலுக்கும்  இது சிறந்த மருந்தாகும் .
  • மாதவிடாய் தாமதமாகும் பெண்கள் இக்கீரையை உலர்த்தி தூள் செய்து  தேனில் கலந்து தினமும் மூன்று வேளை உட்கொண்டால் மாதவிடாய் தாமதவாது  நீங்கும் .
  • புதினா இலையை ஒரு தம்புளர் நீரில் கொதிக்க வைத்து எடுத்து ஆறிய பிறகு இளசூட்டில் குடித்தால் நன்றாக பசி எடுக்கும் .
  • புதினாவுடன்  இஞ்சியையும் உப்பும் சேர்த்து  அரைத்து தினமும் உணவில் மூன்று வேளை சேர்த்து வந்தால் வாய்நாற்றம்,அஜீரணம் ,பித்தமும் அகலும் .
  • புதினாவை துவையல் செய்து நல்லெண்ணெய் விட்டு சாதத்தில் பிசைந்து சாப்பிட பித்தம் மூட்டு வலி ,ஆஸ்துமா ,ஈரல் சம்பந்த பட்ட நோய்கள், சிறுநீர்  உபத்திரம் நீங்கும் .  

கொத்தமல்லிக்கீரை...

கொத்தமல்லிக் கீரை வீட்டுத் தோட்டங்களிலும் மட்டுமின்றி சிறு தொட்டிகளில் கூட வளர்க்கலாம். வழக்கமாக ரசம், சாம்பார் போன்றவற்றில் மணத்திற்காக இக்கீரையைப் பயன்படுத்துவார்கள்.

கொத்தமல்லிக் கீரை உப்புச் சுவையுடையது. உஷ்ணமும் குளிர்ச்சியும் கலந்த தன்மை உடையது.

  • கொத்தமல்லிக் கீரையை உணவில் சேர்த்துக் கொள்வதால் காய்ச்சல் குணமாகும். வாதம், பித்தம் நீங்கும். உடல் பலம் பெறும். தாது விருத்திக்கும் நல்லது.
  • இக்கீரை பசியைத் தூண்டும் சக்தி படைத்தது.
  • இக்கீரையின் சாறு பிழிந்து பித்தத் தழும்புகள் மீது பூசினால் விரைவில் குணம் கிடைக்கும்.
  • இக்கீரையை எண்ணெயில் சிறிது வதக்கி, கட்டிகள், வீக்கங்களின் மீது வைத்துக் கட்டினால் குணம் கிட்டும்.
  • கொத்தமல்லிக் கீரையைத் துவையல் செய்து சாப்பிடலாம். தினமும் இக்கீரையை உணவில் சேர்த்து வந்தால் சிறுநீர் எளிதாய் பிரியும்.
  • பற்களுக்கு உறுதியை அளிக்கும். பல் சம்பந்தமான எல்லா நோய்களும் இக்கீரையை உண்டுவரக் குணமாகும்.
  • முதுமைப் பருவத்தில் ஏற்படும் தோல் சுருக்கத்தைப் போக்கி தேகத்திற்கு அழகையும் மினுமினுப்பையும் தரும்.

- மேலே பட்டியலிடப்பட்டுள்ள போன்ற கீரைகள், நாம் அடிக்கடி சமைத்து சாப்பிட்டுப் பழகிய கீரை வகைகள்.

சுக்காங்கீரை...

  • சுக்காங்கீரை உடலிலுள்ள அதிக வெப்பத்தைத் தணித்து குளிர்ச்சியைத் தரவல்லது.இது ரத்தத்தைச் சுத்தப்படுத்துவதோடு, புதிய இரத்தம் உற்பத்தியாகவும் துணைபுரியும்.
  • பசியின்மையால் சாப்பிட விரும்பாதவர்களுக்கு இந்தக் கீரை பசியைத் தூண்டுவதோடு,சாப்பிடும் ஆர்வத்தை உண்டாக்கும்.
  • பித்த சம்பந்தமான நோய்களை நீக்கவல்லது.பித்த வாந்தி மயக்கம்,நெஞ்சரிப்பு, பித்தத்தலைவலி போன்ற தொல்லைகளை நீக்கும்.
  • வயிறு சம்பந்தப்பட்ட வியாதிகளுக்கும் இது நிவாரணமளிக்கிறது.வயிற்றுவலியைப் போக்கும்.குடல் பலவீனத்தினால் ஏற்படும் கேடுகளைக் களையும் குடலுக்கு வலுவையும் சீராக இயங்கும் சக்தியையும் அளிக்கிறது.
  • இக் கீரை அதிக குளிர்ச்சியைத் தரவல்லது.அதனால் தொடர்ந்து சாப்பிடாமல் சில சமயங்களில் மட்டும் சாப்பிடலாம்.

முடக்கத்தான் கீரை...

வாரம் ஒருமுறை முடக்கத்தான் ரசம் வைத்துச் சாப்பிட்டால் உடலில் தங்கும் தேவையற்ற நச்சு வாயுக்கள் வெளியேறி விடும். வாயு, வாதம், மலச்சிக்கல் உள்ளிட்ட அத்தனை பிரச்னைகளும் அகன்று விடும்.

முள்ளங்கி இலைக்கீரை...

முள்ளங்கி கீரையில் இருக்கு வைட்டமின் எ , வைட்டமின் பி, வைட்டமின் சி இவை அனைத்தும் நம் உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுப்பதுதான், ஆனால் இந்த கீரையை அதிகம் உணவில் உட்கொள்ள கூடாது சிலருக்கு இதனால் பிரச்சனைகள் எழ வாய்ப்புண்டு. வயிற்று கோளாறுகள் அல்லது இதய கோளாறுகள் ஏற்படலாம். அதனால் குறைந்த அளவிலே எடுத்து கொள்ளுங்கள்.

நீர் அடைப்பு தொல்லையா முள்ளங்கி கீரையை சுத்தம் செய்து ஒரு நாளைக்கு இரு வேளை சாப்பிட சில நாட்களில் பிரச்சனை இருக்காது.

அனைத்து கீரை வகைகளும் கண்களுக்கு நல்ல ஆரோக்கியத்தை கொடுப்பது போலவே இந்த முள்ளங்கி கீரை கண்களுக்கு நல்ல பார்வை திறனை கொடுக்கும்.

இதில் இருக்கும் புரத சத்துக்கள், கால்சியம் எலும்புகளுக்கு உறுதியை கொடுக்கும் மற்றும் மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து விடுபட செய்யும்.

தூதுவளைக் கீரை...

  • தூதுவளை இலையை சிறிய வெங்காயத்துடன் சேர்த்து நல்லெண்ணெயில் வதக்கி மூன்று நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு பின்பு மூன்று நாட்கள் விட்டு மூன்று நாட்கள் சாப்பிட வேண்டும். இவ்வாறு தொடர்ச்சியாக 21 நாட்கள் சாப்பிட சுவாசகாசம் நீங்கும்.
  • இலையை அரைத்து அத்துடன் சம அளவு பசு வெண்ணெய், பின்பு 10 கிராம் பொடித்த அரிசித் திப்பிலி, ஓமம், கடுக்காய்த் தோல் சேர்த்துக் கலக்கி சூடு செய்து பிழிந்து கிடைக்கும் நெய்யைத் தேக்கரண்டியளவு தொடர்ந்து 40 நாட்கள் உள்ளுக்குச் சாப்பிட ஷயரோகம் குணமாகும்.
  • தூதுவளைப் பூவை நெய்யில வதக்கி தயிருடன் சாப்பிட விந்து கட்டும், அறிவு விருத்தியாகும். தூதுவளை இலையைத் துவையல் செய்து சாப்பிட மாந்தம், தாது நஷ்டம், இளைப்பு இவைகள் போகும். பருப்புடன் சேர்த்து இதைக் குழம்பு வைத்துச் சாப்பிட மகோதரம் (பெருவயிற்றுநோய்), கர்ண சூலை இவை குணமாகும். தூதுவளை இலைச் சாற்றை காதில் பிழிய காதடைப்பு, காதெழுச்சி முதலிய நோய்கள் குணமாகும்.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள இந்தக் கீரைகள் எல்லாம் இப்போதும் சூப்பர் மார்க்கெட்டுகளில் கிடைக்கின்றன. இவற்றையும் கூட நாம் முழங்கால் வலியென்றோ, மூட்டு வலியென்றோ, உடலில் இரும்புச் சத்து குறைவு, நார்ச்சத்து குறைவு போன்ற காரணங்களுக்காகவோ நாம் வாழ்க்கையில் ஒருமுறையேனும் சமைத்துச் சாப்பிட்டிருப்போம்.

இவை தவிரவும் இன்னும் பலவகைக் கீரைகள் உள்ளன. அவற்றை மூலிகைக்கீரைகள் எனப் பெயர் சூட்டி நாம் பெரும்பாலும் சமைத்து உண்பதைத் தவிர்த்து வருகிறோம். சிலவற்றை சமைத்தும் உண்ணக்கூடாது. அவற்றை பாரம்பர்ய சித்த மருத்துவர்களின் உதவியுடன் கஷாயமாகவோ அல்லது குளிகைகளாகவோ உருமாற்றித்தான் உண்ணவோ, அருந்தவோ முடியும். அவற்றுள் சிலவற்றின் பெயர்கள்...

மஞ்சள் கரிசலை...


பிண்ணாக்குக் கீரை...


பரட்டைக்கீரை...


வெள்ளைக்கரிசலைக் கீரை


கல்யாண முருங்கைக் கீரை...


கீழாநெல்லிக் கீரை...


நஞ்சுமுண்டான் கீரை அல்லது நச்சுகொட்டைகீரை...


தும்பைக்கீரை...


மணலிக்கீரை...


சக்ரவர்த்திக் கீரை...


தவசுக்கீரை


சாணக்கீரை...

இந்தக் கீரையின் புகைப்படம் கிடைக்கவில்லை...

விழுதிக்கீரை...


கொடி காசினி...


துயிளிக்கீரை...

இந்தக் கீரைக்கும் படம் கிடைக்கவில்லை. 

ஓமவல்லி அலைஸ் கற்பூரவல்லி கீரை...


துத்திக் கீரை...

வாதநாராயணன் கீரை...

காரகொட்டிக் கீரை, மூக்குதட்டை கீரை, நறுதாளி கீரை...

இந்த மூன்று வகையான கீரைகளுக்கும் படம் கிடைக்கவில்லை.

பொடுதலை இலைக்கீரை...

பண்ணைக்கீரை...

-இப்படி கிட்டத்தட்ட 42 வகைக் கீரைகளைப் பற்றி நாம் இங்கே தெரிந்து கொண்டிருக்கிறோம். இவற்றுள் 20 வகைக் கீரைகளை மட்டுமே வாரத்தில் இருமுறையோ, மூன்று முறையோ உணவாகப் பயன்படுத்தி வருகிறோம். இன்னும் சில வீடுகளில் குழந்தைகள் யாரும் கீரையே உண்பதில்லை. அப்படிச் சொல்வதைக் காட்டிலும் குழந்தைகளை பெரியவர்கள் உண்ணப் பழக்கவில்லை என்று சொல்லலாம். அப்படியான வீடுகளில் வாரம் ஒருமுறையோ 15 நாட்களுக்கு ஒரு முறையோ மட்டுமே கீரை சமைக்கப்படுகிறது. சமைத்த கீரையிலும் பெரும்பாலான பகுதி வீணடிக்கப் படுகிறது. ஏனெனில் சமைத்த கீரையை பிற காய்கறிகளைப் போல ஃப்ரிஜ்ஜில் வைத்துப் பயன்படுத்தக் கூடாது. அதில் நச்சுத்தன்மை மிகுந்து விடும் என்பதால் சமைத்து உடனே உண்ணத்தக்க உணவாகவே கீரை கருதப்படுகிறது.

குழந்தைகளுக்கு 6 ஆம் மாதம் முதலே கீரையை மசித்து சாப்பிடத் தந்து  பழக்க வேண்டும்.

கீரை வகைகளைப் வதக்கி உண்பதைக் காட்டிலும் மசித்து உண்டால் நிறைந்த பலன் கிடைக்கும், அதன் சத்துக்கள் வீணாவதைத் தடுக்கலாம்.

சிறுவர், சிறுமிகளுக்கு சிறு வெங்காயத்தை பொடியாக நறுக்கி, சீரகம், பச்சை மிளகாய், ஒன்றிரண்டு பூண்டுப்பல் இட்டு எண்ணெய் விட்டு வதக்கியும் தரலாம். ஆனால் எந்தக் கீரையாக இருந்தாலும் அதன் குக்கிங் டைம் அதாவது சமைக்கும் நேரம் 3 முதல் 5 நிமிடமாக மட்டுமே இருக்க வேண்டும். அதைக் காட்டிலும் அதிக நேரம் சமைத்தால் அதன் சத்துக்கள் கெடும் பின்னர் அந்தக் கீரையை உண்பதால் எந்தப் பலனும் கிட்டாது.

எனவே இன்று முதல் தினம் ஒரு கீரை என்ற மந்திரத்தை மனதில் ஒலிக்க விட்டு தினம், தினம் மேலே குறிப்பிடப்பட்டுள்ள கீரை வகைகளில் முதல் 20 ல் ஏதோ ஒரு கீரையை மசித்தோ, வதக்கியோ, சாம்பாரில் அல்லது காரக் குழம்பில் கலந்தோ சமைத்துக் கொடுத்து உங்கள் வீட்டுக் குழந்தைகளுக்கு உண்ணப் பழக்குங்கள்.

குழந்தைகளே கீரை சாப்பிட விரும்புவார்கள் எனில் நிச்சயம் பெரியவர்களுக்கும் அந்தப் பழக்கம் தானாக கைவந்து விடும். பிறகு சாப்பாட்டில் உப்பில்லாமல் கூட உண்டு விடுவார்களாயிருக்கும் ஆனால் கீரை இல்லாமல் மட்டும் உண்ணவே மாட்டோம் என்று பெருமிதமாகச் சொல்லிக் கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com