கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் வியந்து பாராட்டிய சூப்பர் வுமன் இவர்!

லஷ்மி பாய் பற்றி அறிய நேர்ந்த இந்தியக் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவக், அவரை வியந்து பாராட்டி தனது ட்விட்டர் தளத்தில் பதிய... இப்போது லஷ்மி பாய் உலகறிந்த ஸ்டெனோகிராபர் ஆகி விட்டார்.
கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் வியந்து பாராட்டிய சூப்பர் வுமன் இவர்!

மத்தியப் பிரதேசம், ஷிகோரைச் சேர்ந்த லஷ்மிபாய் தான் அந்த சூப்பர் வுமன். லஷ்மிபாய்க்கு 72 வயதாகிறது. ஆனால், இன்றும் கூட மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் எதிரில் அமர்ந்து அங்கே மனு அளிக்க வருகின்ற பொதுமக்களுக்காக டைப்ரைட்டரில்  விண்ணப்பங்களை டைப் செய்து தரும் பணியைச் செய்து கொண்டிருக்கிறார். லஷ்மிக்கு வயது ஒரு பிரச்னையாகத் தோன்றவில்லையா? ஏன் இந்த தள்ளாத வயதில் டைப் ரைட்டரோடு மல்லுக்கட்ட வேண்டும் எனப் பலர் அவரிடம் விசாரித்ததுண்டு.

அவர்களுக்கு லஷ்மி அளிக்கும் வழக்கமான பதில், 

‘எனக்கு வயதாகி விட்டதால் என்னால் வேலை எதுவும் செய்ய முடியாது என்று நான் நினைக்கவில்லை. அது மட்டுமல்ல, சில ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த விபத்தில் என் மகள் மோசமான காயங்களுடன் காப்பாற்றப்பட்டாள், அவளுடைய இடத்தில் இருந்து குடும்பத்தைத் தாங்க இப்போது நான் இருக்கிறேன். என்னால் பிச்சை எடுத்து உண்ண முடியாது. குடும்ப காரியங்களை நிகழ்த்த முடியாது. எனக்கு வருமானம் ஈட்ட ஒரு வேலை தேவைப்பட்டது. அப்போது தான், மாவட்ட ஆட்சியர் ராகவேந்திர சிங் மற்றும் துணை டிவிஷனல் மாஜிஸ்ட்ரேட் பாவனா விளம்பே உதவியாலும், பரிந்துரையாலும் எனக்கு இந்த வேலை கிடைத்தது. வங்கிக் கடனை அடைத்து விட்டு ஒரு வீட்டை சொந்தமாகக் கட்டிக் கொள்ள வேண்டும் என்பது மட்டுமே இப்போதைய எனது ஒரே தேவை. அதற்காகத் தான் உழைத்துக் கொண்டிருக்கிறேன்.’

லஷ்மி பாய் பற்றி அறிய நேர்ந்த இந்தியக் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவக், அவரை வியந்து பாராட்டி தனது ட்விட்டர் தளத்தில் பதிய... இப்போது லஷ்மி பாய் உலகறிந்த ஸ்டெனோகிராபர் ஆகி விட்டார்.

சேவக் லஷ்மி பாய் பற்றி குறிப்பிடுகையில்...

என்னுடைய சூப்பர் வுமன் இவர் தான்... இவரது பெயர் லஷ்மி பாய். மத்தியப் பிரதேசம், ஷிகோரைச் சேர்ந்த இந்த லஷ்மி பாய்... தான் செய்யும் வேலையைச் சிறியதென நினைக்கவில்லை. கற்றுக் கொள்ளவோ, வேலை செய்யவோ வயது ஒரு தடையில்லை என இந்த உலகம் உணர்ந்து கொள்ள சிறந்த வாழும் உதாரணம் இந்த லஷ்மி பாய்’ அவரே எனது எனது சூப்பர் வுமன். எனக்குறிப்பிட்டிருந்தார்.’

சேவக்கின் ட்விட்டர் பாராட்டுரை குறித்து கேள்விப்பட்ட லஷ்மி பாய், அது குறித்து தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டதோடு... முதலில் வங்கிக் கடனை அடைத்து விட்டு சொந்தமாக, நிரந்தரமாக ஒரு வீட்டை கட்டிக் கொள்ள வேண்டும். அதற்காக நான் தொடர்ந்து உழைப்பேன் எனக்கூறும் போது அந்த வார்த்தைகள் பறைசாற்றுகின்றன அவரது உழைப்பின் வெற்றியை!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com