74 வயதில் இரட்டைக் குழந்தைகள் பிரசவ விவகாரம், IFS மருத்துவர்களின் கண்டனத்தில் நியாயமிருக்கோ?!

இந்தியக் கருவுறுதல் சமூகத்தின் தலைவரான கெளரி தேவி, இது குறித்துப் பேசுகையில், மேற்கண்ட வயோதிக செயற்கை கருத்தரித்தல் உதாரணத்தில் தாய், சேய் இருவரது வாழ்வுமே பணயம் வைக்கப்பட்டிருக்கிறது
74 வயதில் இரட்டைக் குழந்தைகள் பிரசவ விவகாரம், IFS மருத்துவர்களின் கண்டனத்தில் நியாயமிருக்கோ?!

கடந்த வாரம் 74 வயதுப் பாட்டி ஒருவர் இரட்டைக் குழந்தைகளைப் பிரசவித்து உலகின் மிக வயது முதிர்ந்த தாய் என கொண்டாடப்பட்டார்.  74 வயதில் குழந்தை உண்டாக செயற்கை கருத்தரித்தல் முறையைப் பின்பற்றியிருந்தார்கள் அத்தம்பதியினர். குழந்தைகளும், 74 வயது முதிய பெண்மணியும் அவரது கணவரும் தற்போது ஆரோக்யமாகவே இருந்தாலும் கூட இந்தச் செய்தி உலகம் முழுக்கப் பரபரப்பாக பரவியதைத் தொடர்ந்து திடீரென செயற்கை கருத்தரிப்பு முறையிலும் சோதனைக்குழாய் முறையிலும் குழந்தைப்பேற்றுக்கு வகை செய்யக்கூடிய இனப்பெருக்க சுகாதார வழங்குநர்கள் என்று சொல்லப்படக்கூடிய மருத்துவர்கள் மத்தியில் இந்த விஷயம் பெரும் அதிர்வலைகளையும் கடும் கண்டனத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

‘இது முற்றிலும் மனிதநேயமற்ற செயல். செயற்கைக் கருத்தரிப்பு முறையை முறைகேடாகப் பயன்படுத்தி இருக்கிறார்கள். கொஞ்சமும் மனிதாபிமானம் இல்லாமல் குறைந்த பட்ச நெறிமுறைகளைக் கூட பின்பற்றாமல் 74 வயது முதிய பெண்மணிக்கு இரட்டைக் குழந்தைகள் பிரசவம் என்பது உடல்ரீதியாக அந்தப் பெண்மணிக்கு மட்டுமல்ல பிறந்திருக்கும் குழந்தைகளுக்கும் கூட ஆரோக்யமானதல்ல. செயற்கை கருத்தரிப்பு முறை சிகிச்சைக்கான வரையறைகளின் படி 18 முதல் 45 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு திருமணத்தின் பின் நெடுநாட்கள் குழந்தைப்பேறில்லாத பட்சத்தில் இந்த செயற்கை கருத்தரிப்பு முறைகளைப் பின்பற்றலாம் என்பது விதி. இந்த விதியானது 2017 ஆம் ஆண்டு திருத்தி அமைக்கப்பட்ட உதவி இனப்பெருக்க தொழில்நுட்ப மசோதாவின் (Assisted reproductive technology (ART Bill) கீழ் சட்டமாக்கப்படாமல் இன்னும் வெறும் நிபந்தனையாக மட்டுமே நீடித்திருப்பதால் தான் மேற்கண்ட அவலங்கள் எல்லாம் ஈடேறிக் கொண்டிருக்கின்றன. இது நிச்சயம் வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டிய விஷயங்களில் ஒன்று என அந்த மருத்துவர்கள் 74 வயதுப் பாட்டியின் பிரசவம் குறித்து போர்க்கொடி உயர்த்துகிறார்கள்.

இந்தியக் கருவுறுதல் சமூகத்தின் தலைவரான கெளரி தேவி, இது குறித்துப் பேசுகையில், மேற்கண்ட வயோதிக செயற்கை கருத்தரித்தல் உதாரணத்தில் தாய், சேய் இருவரது வாழ்வுமே பணயம் வைக்கப்பட்டிருக்கிறது. இதில் இருவரது உடல் மட்டும் மன ஆரோக்யம் சம்மந்தப்பட்டிருக்கிறது அத்துடன் அவர்களது வாழ்க்கைத் தரம் மற்றும் உயிரோடு வாழக்கூடிய நாட்களின் எண்ணிக்கை என இன்ன பிற விஷயங்களும் சம்மந்தப்பட்டிருக்கின்றன. அப்படி இருக்கும் போது இது கண்டனம் தெரிவிக்கப்பட வேண்டிய செயலே என்றார்.

பங்கஜ் தல்வார், இந்தியக் கருவுறுதல் சமூகத்தின் பொதுச்செயலாளரான பங்கஜ் இதுகுறித்துப் பேசுகையில், நாங்கள் இவ்விஷயத்தில் எங்களது தனிப்பட்ட கருத்தை முன் வைக்கவில்லை. இந்திய கருவுறுதல் மையத்தின் எண்ணற்ற மருத்துவர்களிடம் பேசி அவர்களது ஒட்டுமொத்த கருத்துக்களைத் தான் முன்வைக்கிறோம். இம்மாதிரியான வயோதிக செயற்கைப் பிரசவங்களில் ஆரோக்யமான கருக்களை உருவாக்குதல் தொடங்கி பிரசவத்திற்கு முன்பும், பின்பும் தாய், சேய் இருவரின் நலம் பேணுவதும் மிகக் கடினமான காரியம். எனவே இது போன்ற செயற்கை கருத்தரிப்பு முறையை அந்த வயோதிகத் தம்பதிகளுக்கு இந்த வயதில் பரிந்துரைத்து அவர்களை குழந்தையும் பெற வைத்த இனப்பெருக்க சுகாதார வழங்குனர்களின் நெறியற்ற முறைகேடான செயலாகவே இதை நாங்கள் கருதுகிறோம். என்றார்.

அதுமட்டுமல்ல, இந்தியா முழுவதிலுமிருக்கும் பிற செயற்கை கருத்தரிப்பு மருத்துவர்களை ஒருங்கிணைத்து அவர்களிடம் மேற்கண்ட விஷயத்தின் தீவிரத் தன்மையை வலியுறுத்தி அதற்கு எதிரான கண்டனத் தீர்மானங்களைப் பெற்று அதை மத்திய உள்துறை அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்று இனி வரும் காலங்களில் இது மாதிரியான கேலிக்கூத்தான முறையற்ற பிரசவங்கள் நிகழ்வதை தடுக்க தங்களால் இயன்றதை தாங்கள் செய்து கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

ஆந்திராவைச் சேர்ந்த 74 வயது முதிய பெண்மணியொருவருக்கு செயற்கை கருத்தரிப்பு முறையில் கடந்த வாரம் ஒரே பிரசவத்தில் இரட்டைக் குழந்தைகள் பிறந்தன. வயோதிகத்தின் காரணமாக அவருக்கு சுகப்பிரசவம் நிகழவில்லை அறுவை சிகிச்சை மூலமே இரட்டைக் குழந்தைகள் பிறந்தன. மேலோட்டமாகப் பார்க்கும் போது இச்சம்பவம் உலகோர் முன் பரபரப்புச் செய்தியாகப் பார்க்கப்படினும் முறையான கடுமையான சட்டங்கள் இல்லாத காரணத்தால் தான் நம் நாட்டில் மட்டும் செயற்கை கருத்தரிப்பு முறை என்பது இன்றைக்கும் கேலிக்கூத்தான செயலாகக் கருதப்படப்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த நிலை மாற வேண்டுமெனில் இது போன்ற செயற்கை கருத்தரித்தல் நிகழ்த்தப்படுவது தவிர்க்கப்பட வேண்டும், அவற்றைத் தடுப்பதற்கான கடுமையான சட்டங்கள் இயற்றப்பட வேண்டும் என IVF சிறப்பு நிபுணரும், மகளிர் மகப்பேறு மருத்துவருமான அர்ச்சனா தவான் பஜாஜ் தெரிவித்துள்ளார்.

இவ்விஷயத்தில் பாட்டிக்கு செயற்கை கருத்தரிப்பு முறையைப் பரிந்துரைத்து அதைச் செயல்படுத்தியும் காட்டிய ஆந்திரப் பிரதேஷ அகல்யா நர்ஸிங் ஹோம் செயற்கை கருத்தரிப்பு சிகிச்சைக்கான மருத்துவர் குழுவினரும் தீர விசாரிக்கப்பட வேண்டும். அவர்கள் பணத்திற்காக அன்றி வேறெதற்காகவும் வயது முதிர்ந்த பெண்ணொருவருக்கு செயற்கை கருத்தரிப்பை பரிந்துரைத்திருக்க வாய்ப்பில்லை எனவே எதிர்காலத்தில் இப்படியான விபரீதங்கள் நடவாமல் தடுக்க அவர்களுக்கும் உரிய தண்டனை வழங்கப்பட் வேண்டும் என்றும் இந்தியக் கருவுறுதல் சமூக மருத்துவர்கள் தங்களது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com