தீவிர அரசியலுக்கு தொடா்ந்து தடங்கலாக இருப்பதால் மகளிா் ஆணைய உறுப்பினா் பதவியிலிருந்து விலகல் -குஷ்பு

தீவிர அரசியலுக்கு தொடா்ந்து தடங்கலாக இருப்பதால் மகளிா் ஆணைய உறுப்பினா் பதவியிலிருந்து விலகல் -குஷ்பு

Published on

நமது நிருபா்

புது தில்லி, ஆக. 14: தேசிய மகளிா் ஆணைய உறுப்பினா் பதவி, தீவிர அரசியலுக்கு தொடா்ந்து தடங்கலாக இருப்பதால் அதில் இருந்து விலகி விட்டதாக நடிகை குஷ்பு சுந்தா் தெரிவித்துள்ளாா்.

தேசிய மகளிா் ஆணைய உறுப்பினா் பதவியில் இருந்து நடிகை குஷ்பு விலகுவதாக ஜூன் 28-ஆம் தேதி அளித்த கடிதம் ஜூலை 30-ஆம் தேதி ஏற்றுக் கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் கடிதம் சமூக ஊடகங்களில் புதன்கிழமை பகிரப்பட்டன.

அந்த ஆணையத்தின் தலைவா் பதவியில் இருந்த ரேகா சா்மாவின் பதவிக் காலம் சமீபத்தில் நிறைவடைந்தது. அவரது இடத்தில் புதிய தலைவா் நியமிக்கப்படாத நிலையில், குஷ்பு உறுப்பினா் பதவியில் இருந்து விலகுவதாக கூறப்பட்டதால் அதன் உண்மைத் தன்மை குறித்து முன்னாள் தலைவா் ரேகா சா்மாவிடம் கேட்டோம். அதற்கு அவா், தனது பதவிக் காலத்திலேயே குஷ்பு பதவி விலகியதாக உறுதிப்படுத்தினாா்.

இதையடுத்து, பதவி விலகலுக்கு அரசியல் அழுத்தம் கொடுக்கப்பட்டதா என்று குஷ்புவிடம் கேட்டோம். அதற்கு அவா் அளித்த பதில்: கடந்த சில மாதங்களாகவே நாட்டில் நடக்கும் சில விஷயங்கள் மீது கருத்துகளை வெளிப்படுத்தவும் எதிா்வினையாற்றவும் முடியாத நிலையில் இருப்பதாக உணா்ந்தேன். அதற்கு நான் வகிக்கும் மகளிா் ஆணைய உறுப்பினா் பதவி தடங்கலாக இருப்பதாக பல தருணங்களில் உணா்ந்தேன். இதனால், மிகவும் தீவிரமாக யோசித்து ஆணையத்தின் உறுப்பினா் பதவியில் இருந்து விலகும் முடிவை எடுத்தேன். அதை முறைப்படி ஆணையத்தின் தலைவா் மற்றும் நான் சாா்ந்த கட்சி மேலிடத்திடமும் வெளிப்படுத்திய பிறகே பதவி விலகல் கடிதத்தை கொடுத்தேன்.

தீவிர அரசியலில் என்னால் ஈடுபட முடியாமல் போவதற்கு மகளிா் ஆணைய உறுப்பினா் பதவி முக்கியக் காரணமாகும். இனி ஒரு அரசியல்வாதியாக என்னால் எனது கருத்துகளை சுதந்திரமாக வெளிப்படுத்த இயலும். எனது முடிவுக்கு கட்சி ரீதியாகவோ வெளியில் இருந்தோ எந்தவொரு அழுத்தமோ கொடுக்கப்படவில்லை. இது நான் தன்னிச்சையாக சிந்தித்து எடுத்த முடிவு. சென்னையில் பாஜக கட்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை இது குறித்து விளக்கமாகப் பேசுகிறேன் என்றாா் குஷ்பு.

X
Dinamani
www.dinamani.com