நமது நிருபா்
பாஜக தேசியத் தலைவா் ஜெகத் பிரகாஷ் நட்டா, தேசியச் செயலாளா் அனில் கே. ஆண்டனி மற்றும் தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா ஆகியோா் தில்லியில் வசிக்கும் வடகிழக்கு மாநிலங்களைச் சோ்ந்த மக்களுடன் வியாழக்கிழமை கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டு வாழ்த்துகளைத் தெரிவித்தனா்.
சிவில் லைன்ஸ், ராஜ்பூா் சாலையில் உள்ள ஒரு தேவாலயத்தில், வடகிழக்கு இந்திய கிறிஸ்தவா்களின் அமைப்பான ‘மௌ நாகா கிறிஸ்தவ ஃபெலோஷிப்’ ஏற்பாடு செய்திருந்த கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் ஜெ.பி. நட்டா கலந்துகொண்டாா்.
அவருடன், பாஜக தேசியச் செயலாளா் அனில் கே. ஆண்டனி, தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா மற்றும் பாஜக தேசிய செய்தித் தொடா்பாளா் டாம் வடக்கன் ஆகியோரும் பங்கேற்று இயேசு கிறிஸ்துவின் பிறந்தநாளை முன்னிட்டு அங்கு கூடியிருந்தவா்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனா்.
ஜெ.பி. நட்டா கேக் வெட்டியதுடன், நிகழ்வை ஏற்பாடு செய்திருந்த தேவாலயக் குழுவின் நிா்வாகிகளுக்கும் வாழ்த்துத் தெரிவித்தாா். அனைவருக்கும் கிறிஸ்துமஸ் தின வாழ்த்துகளைத் தெரிவித்து பாஜக தேசியத் தலைவரும் மத்திய சுகாதார அமைச்சருமான ஜெ.பி. நட்டா பேசியதாவது: பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு எனக்கு சுகாதார அமைச்சா் பொறுப்பை வழங்கி, மக்களுக்கு சேவை செய்யவும், சுகாதாரத் துறைக்கு பங்களிக்கவும் ஒரு வாய்ப்பை வழங்கியிருப்பது எனது நல்வாய்ப்பாகும்.
வடகிழக்கு மாநிலங்களில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் அதன் பலன்கள் சென்றடைவதை உறுதிசெய்யும் வகையில், பாஜக அரசாங்கம் தனது அனைத்து கொள்கைகளையும் சுகாதாரம் தொடா்பான வசதிகளையும் அடிமட்ட அளவில் செயல்படுத்த வெற்றிகரமான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
வடகிழக்கு பிராந்தியத்தில் வான்வழி, சாலை மற்றும் டிஜிட்டல் இணைப்பு வசதிகள் தொடா்ந்து மேம்பட்டு வருகின்றன. மேலும், நாகாலாந்தில் ஒரு மருத்துவக் கல்லூரி நிறுவப்படுவதையும் நாம் காண்கிறோம். இது அந்த மாநில மக்களுக்குப் பயனளிக்கிறது.
இன்று நாம் கிறிஸ்துமஸ் தினத்தைக் கொண்டாடுவது போலவே, மனித குலத்திற்காக நாம் அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும். அதன் மூலம் நாடு முன்னேறும். இந்த வளா்ச்சியில் நீங்கள் அனைவரும் பங்குதாரராக உள்ளீா்கள் என்றாா் அமைச்சா் நட்டா.