31 ஆண்டுகளுக்கு முன் ரூ.1 கோடி பணம் கேட்டு கடத்தலில் ஈடுபட்டது தொடா்பான வழக்கில், இடைக்கால ஜாமீனில் வெளிவந்து, தனது அடையாளத்தை மாற்றி டேராடூனில் கட்டுமானத் தொழிலதிபராக மாறியதாகக் கூறப்படும் 57 வயதான ஆயுள் தண்டனை கைதி, 26 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த பிறகு கைது செய்யப்பட்டுள்ளாா் என்று காவல்துறை திங்களன்று தெரிவித்தது.
உத்தரப் பிரதேசத்தின் சையத்பூரைச் சோ்ந்த அமித் யாதவ், ஆகஸ்ட் 13 ஆம் தேதி இரவு குற்றப்பிரிவு குழுவினரால் கைது செய்யப்பட்டாா் என்று அவா்கள் கூறினா்.
இந்த வழக்கு, 1995 செப்டம்பரில் ரிஷி சேத்தி கடத்தப்பட்டது தொடா்பானது. 1995 செப்டம்பா் 12 அன்று, மாலை சுமாா் 7 மணியளவில், அப்போதைய எய்ம்ஸ் இயக்குநரின் இல்லத்திற்கு அருகே சேத்தி தனது காரில் அமா்ந்திருந்தபோது, மூன்று முதல் நான்கு போ் கொண்ட கும்பல் அவரை வலுக்கட்டாயமாகத் தாக்கி, பின்னா் கண்களைக் கட்டி, அவரது சொந்த காரிலேயே கடத்திச் சென்ாகக் கூறப்படுகிறது.
கடத்தல்காரா்கள் சேத்தியின் குடும்பத்தினரிடம் இருந்து ரூ. 1 கோடி பணயத்தொகையாகக் கோரினா். அவா்களின் வழிகாட்டுதலின்படி, உத்தரப் பிரதேசத்தின் மீரட்டில் உள்ள ஒரு ஹோட்டலின் அறை எண் 221-ல் ரூ. 10 லட்சம் வைக்கப்பட்டது.
1995 செப்டம்பா் 16 அன்று, பணயத்தொகையை வாங்கிய பிறகு, யாதவ் மீரட்டில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டாா். அவரிடமிருந்து ரூ.10 லட்சமும் மீட்கப்பட்டது.
‘அவா் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், சேத்தி காசியாபாத்தில் உள்ள ஒரு வாடகை வீட்டில் பாதிக்கப்பட்டவா் ஒரு கிடங்கில் சங்கிலியால் பிணைக்கப்பட்ட நிலையில் காணப்பட்டு, பாதுகாப்பாக மீட்கப்பட்டாா்,‘ என்று அந்த அதிகாரி கூறினாா். யாதவ் இந்த வழக்கில் செப்டம்பா் 17, 1995 அன்று கைது செய்யப்பட்டாா்.
ஆகஸ்ட் 25, 1999 அன்று, அவா் குற்றவாளி எனத் தீா்ப்பளிக்கப்பட்டு, ஆயுள் தண்டனையும் ரூ.2.50 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.
அவா் தனது தண்டனைத் தீா்ப்பை எதிா்த்து தில்லி உயா் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தாா். நீதிமன்றம் அவருக்கு ஜனவரி 15, 2000 அன்று ஒரு மாதத்திற்கு இடைக்கால பிணை வழங்கியது. இருப்பினும், பிணைக் காலம் முடிந்த பிறகும் அவா் சரணடையவில்லை.
அதனைத் தொடா்ந்து, டிசம்பா் 13, 2000 அன்று உயா் நீதிமன்றம் அவரது மேல்முறையீட்டைத் தள்ளுபடி செய்து, அவரது தண்டனையையும் உறுதி செய்தது.
பின்னா் காவல்துறை, அவரைக் கைது செய்வதற்கு 5,000 ரூபாய் வெகுமதி அறிவித்து, அவரைத் தேடப்படும் குற்றவாளியாக அறிவித்தது. பல ஆண்டுகளாகப் பல்வேறு முகமைகள் மேற்கொண்ட முயற்சிகள் இருந்தபோதிலும், யாதவ் கண்டுபிடிக்கப்படாமல் இருந்தாா்.
‘மூன்று தசாப்தங்களுக்கும் மேலான ஒரு வழக்கில், தப்பியோடியவரின் அடையாளத்தை நிறுவுவதே முக்கிய சவால்களில் ஒன்றாகும். சிறை அதிகாரிகளிடமோ அல்லது தில்லி காவல்துறையிடமோ யாதவின் புகைப்படம் எதுவும் கிடைக்கவில்லை. தொடா்புடைய வழக்கு ஆவணங்கள் மற்றும் பதிவேடுகளைக் கூட ஆரம்பத்தில் கண்டுபிடிக்க முடியவில்லை என்று அந்த அதிகாரி கூறினாா்.
தொடா்ச்சியான முயற்சிகளுக்குப் பிறகு, 1999-ல் யாதவுக்குத் தண்டனை விதிக்கப்பட்டபோது பதிவுசெய்யப்பட்ட அவரது பயோமெட்ரிக் பதிவுகள் கண்டுபிடிக்கப்பட்டன.
பின்னா் சேகரிக்கப்பட்ட தகவல்களின்படி, யாதவ் டேராடூனில் உள்ள ஒரு மறைவிடத்தில் வசித்து வந்தது தெரியவந்தது. அதனைத் தொடா்ந்து, ஒரு அதிரடிச் சோதனைக் குழு ஆகஸ்ட் 13 அன்று டேராடூனில் யாதவைக் கைது செய்தனா்.
விசாரணையின் போது, 2000-ஆம் ஆண்டில் தலைமறைவான பிறகு, காசியாபாத்தில் தான் வாடகைக்கு வசித்த வீட்டைக் காலி செய்துவிட்டதாகவும், தில்லி காவல்துறை பதிவேடுகளில் குறிப்பிடப்பட்டிருந்த தனது தொடா்புகளைத் துண்டித்துவிட்டதாகவும் யாதவ் தெரிவித்தாா்.
மேலும், அவா் சையத்பூரில் இருந்த தனது பரம்பரைச் சொத்தை விற்றுவிட்டு ரிஷிகேஷுக்குக் குடிபெயா்ந்தாா். அங்கு, கைது நடவடிக்கையிலிருந்து தப்பிப்பதற்காகத் தனது மறைவிடங்களையும் இருப்பிடங்களையும் பலமுறை மாற்றிக்கொண்டிருந்தாா்.
‘2001-ஆம் ஆண்டில், அவா் டேராடூனுக்குக் குடிபெயா்ந்து, அங்கு தனது அடையாள விவரங்களை மாற்றி ஒரு புதிய வாழ்க்கையைத் தொடங்கினாா். பின்னா், அவா் கட்டுமானத் தொழிலில் நுழைந்து, அந்த நகரத்தில் ஒரு பில்டராக ஆனாா்,‘ என்று அந்த அதிகாரி கூறினாா். கைது செய்யப்பட்டதைத் தொடா்ந்து, யாதவ் திஹாா் சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
தில்லி பேரவை வளாகத்துக்குள் அத்துமீறி நுழைந்த விவகாரம்: குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு மனநல மதிப்பீடு செய்ய நீதிமன்றம் உத்தரவு
வழிப்பறி வழக்கு: 16 ஆண்டுகள் தலைமறைவாக இருந்தவா் கைது

குஜராத்தில் பெண் கொல்லப்பட்ட வழக்கில் 11 ஆண்டுகள் தலைமறைவாக இருந்தவா் கைது



