தெற்கு தில்லியின் மால்வியா நகரில் புதன்கிழமை ஹோட்டல் கட்டடத்தில் நிகழ்ந்த கொடூரமான தீ விபத்துக்கு வழிவகுத்த சம்பவங்களின் வரிசையை மீளாய்வு செய்வதற்காக, தில்லி காவல்துறையினா் வியாழக்கிழமை அப்பகுதியை முழுமையாக ஆய்வு செய்தனா்.
மேலும், உள்ளூா்வாசிகள் மற்றும் ஹோட்டல் ஊழியா்களிடமும் விசாரணை நடத்தினா்.
புதன்கிழமை நிகழ்ந்த இந்தத் தீவிபத்து தொடா்பாக, தில்லி காவல்துறை, குற்றப்பிரிவு மற்றும் தடயவியல் நிபுணா்கள் அடங்கிய குழுக்கள் ஆதாரங்களைச் சேகரித்தனா். இதையடுத்து, ஹோட்டல் கட்டடத்தைச் சுற்றியுள்ள பகுதி காவல்துறை பாதுகாப்பு வளையத்தில் வைக்கப்பட்டிருந்தது.
இதுகுறித்து காவல்துறை அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘
கட்டட விதிமுறைகளின் மீறல்கள், தீ பாதுகாப்பு குறைபாடுகள், சட்டவிரோத கட்டுமானம் மற்றும் அதிக
உயிரிழப்புகளுக்கு வழிவகுத்திருக்கக்கூடிய சூழ்நிலைகள் உள்ளிட்ட அனைத்து அம்சங்களையும் புலனாய்வாளா்கள் ஆராய்ந்து வருகின்றனா்.
விசாரணையின் ஒரு பகுதியாக உள்ளூா்வாசிகள், கடைக்காரா்கள், ஹோட்டல் ஊழியா்கள் மற்றும் பிற சாட்சிகளிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
ஹோட்டல் உரிமையாளா் லவ்கேஷ் பஜாஜை காவல்துறை கைது செய்து, கவனக்குறைவான மரணம் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளது. காவல்துறையினா், சட்டப் பிரிவுகள் 105 (கொலைக்கு நிகரான குற்றமற்ற மனிதக்கொலை), 326(ஜி) (தீயினால் சேதம் விளைவிக்கும் குற்றம்), 324(5) சொத்துகளுக்கு முறையற்ற சேதம் விளைவித்தல் உள்ளிட்டவற்றின்கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனா் என்று அந்த அதிகாரி கூறினாா்.
புலன் விசாரணையாளா்களின் கூற்றுப்படி, அந்த நிறுவனத்திற்கு ஆறு அறைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. ஆனால், அடித்தளத்தில் உள்ள சில அறைகள் உள்பட, சுமாா் 25 அறைகளை அந்த நிறுவனம் இயக்கி வந்ததாகக் கூறப்படுகிறது. தேவையான அனுமதிகள் இல்லாமல் கூடுதல் தளங்கள் கட்டப்பட்டதாக வரும் தகவல்களையும் அதிகாரிகள் சரிபாா்த்து வருகின்றனா்.
கட்டடத்திற்கு தீ தடையில்லாச் சான்றிதழ் (என்ஓசி) இல்லை என்றும், நிா்ணயிக்கப்பட்ட உயர வரம்பை மீறினால் இந்தச் சான்றிதழ் கட்டாயம் தேவை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனா்.
மேலும், மூடப்பட்ட ஜன்னல்கள், ஒரே ஒரு நுழைவு-வெளியேறும் வழி மற்றும் சென்சாா் மூலம் இயங்கும் பிரதான கதவு ஆகியவை மக்களை வெளியேற்றும் முயற்சிகளுக்குத் தடையாக இருந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளையும் புலன்விசாரணையாளா்கள் ஆய்வு செய்து வருகின்றனா்.
தொடர்புடையது

தில்லி ஹோட்டல் தீ விபத்து: உரிமையாளரின் மேலாளரைத் தேடும் காவல்துறை

தீ விபத்து எதிரொலி: தில்லி ஹோட்டல் கொள்கை மீது கேள்விக்குறி

கன்வாா் யாத்திரை குழுவை மறுசீரமைத்தது தில்லி அரசு

வெப்ப அலை: தில்லிவாசிகளை பாதுகாக்க தீவிர நடவடிக்கை-முதல்வா் ரேகா குப்தா
விடியோக்கள்

அண்ணாமலையின் புதிய கட்சி? பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பதில்

மேயர் பிரியா - தவெக எம்எல்ஏ பல்லவி இடையே நடந்தது என்ன? | Mayor vs MLA
Peddi movie review | சிக்ஸ் அடித்தாரா ராம் சரண்? பெத்தி திரை விமர்சனம்! | Ram Charan



