மாயாபுரி பகுதியில் உள்ள ஒரு தொழிற்சாலையில் வியாழக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. இதைத் தொடா்ந்து, கட்டடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது.
இதுகுறித்து தில்லி தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவா் கூறியதாவது
இந்த தீவிபத்தைத் தொடா்ந்து 18 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டன.
முன்னதாக, மாயாபுரி தொழிற்பேட்டையின் ஃபேஸ் 1 பகுதியில் அமைந்துள்ள தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது குறித்த தகவல் காலை 11:17 மணியளவில் தீயணைப்புத் துறைக்குக் கிடைத்தது.
தீயின் தீவிரம் அதிகரித்ததால், அதை அணைக்க கூடுதல் தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டன. சுமாா் 500 சதுர கெஜம் பரப்பளவிலான கட்டடத்தின் முதல் மற்றும் இரண்டாவது தளங்களில் இயங்கி வந்த எஃகு வெட்டும் மற்றும் பேக்கிங் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலையைத் தீ முழுமையாகச் சூழ்ந்திருந்தது.
இக்கட்டடம் அடித்தளம், தரைத்தளம் மற்றும் இரண்டு மேல் தளங்களைக் கொண்டதாகும்.
தீயணைப்புப் பணிகளின்போது, முதல் மற்றும் இரண்டாவது தளங்களின் சில பகுதிகள் இடிந்து விழுந்தன.
தீ விபத்து மற்றும் கட்டடம் இடிந்தன் காரணமாக ஏற்பட்ட கட்டமைப்பு சேதங்களால், கட்டடம் தற்போது ஆபத்தான நிலையில் உள்ளது.
பிற்பகல் 2:20 மணியளவில் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இச்செய்தி வெளியாகும் நேரம் வரை உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.







