புது தில்லி: கேதார்நாத்தில் கடும் பனிப்பொழிவு காரணமாக புனிதயாத்திரை மேற்கொண்ட 2,500 பக்தர்கள் சிக்கி தவித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற கேதார்நாத் கோயில், குளிர் பருவம் முடிந்து கடந்த ஏப்ரல் 29-ம் தேதி மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
கேதார்நாத்தில் ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித பயணத்திற்கு வந்து செல்கின்றனர். அந்தவகையில் கடந்த சில நாட்களாக இமாலய மலைப்பகுதியில் கடும் பனிப்பொழிவு மற்றும் புழுதி புயல் ஏற்பட்டுள்ளது. இமாலய மலைப்பகுதியில் 0.3 டிகிரி குளிர் நிலவுவதால் புனிதப் பயணம் சென்ற பக்தர்கள் கேதர்நாத்தில் சிக்கித் தவித்து வருகின்றனர்.
பனிப்பொழிவில் சிக்கி தவிப்போருக்கு உதவும் வகையில் மாவட்ட அவசரநிலை மையத்தில் இருந்து கிடைத்திருக்கும் தகவலின்படி சோன்பிரியாக் பகுதியில் 2,200 பக்தர்கள், லின்சோலி பகுதியில் 200 பக்தர்கள், கெளரிகுண்ட் பகுதியில் 350 பக்தர்கள் முகாமிட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
கடந்த 8 ஆண்டுகளில் 6 அடி பனிப்பொழிவு உருவாகியிருப்பது இதுவே முதல் முறையாகும் என்று கோயில் அர்ச்சகர் தெரிவித்துள்ளார். ஆனால் கங்கோத்ரி, யமுனோத்ரி, உத்தரகாசி செல்வதற்கு எந்த பாதிப்பும் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.