
சிறுநீரக நோய் தீர்க்கும் அருள்மிகு திருவீதியம்மன் திருக்கோயில்!
நோய்களைத் தீர்க்கும் மருத்துவச்சி என்று போற்றப்படும் திருவீதியம்மன் கோயிலின் சிறப்புகள் பற்றி..

திருவீதியம்மன்
சென்னை ஆர்ஏ புரம் முதல் பிரதான சாலைப் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு திருவீதியம்மன் திருக்கோயில். இக்கோயிலின் சிறப்புகள் பற்றி தெரிந்துகொள்வோம்.
சென்னை, மந்தைவெளி ரயில் நிலையத்திலிருந்து நடந்து செல்லும் தொலைவில் அமையப்பெற்றுள்ளது இந்த ஆலயம். இந்து சமய அறநிலையத்துறைக்கு உள்பட்ட திருவீதியம்மன் திருக்கோயிலில் ஊர்ப்பெரியவர்கள் 180 ஆண்டுகளாக பல்வேறு திருப்பணிகளைச் செய்து அம்மனை வழிபட்டு வருகின்றனர்.
தனம் தரும் கல்வி தரும் ஒரு நாளும் தளர்வு அறியா
மனம் தரும் தெய்வ வடிவும் தரும் நெஞ்சில் வஞ்சம் இல்லா
இனம் தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே
கனம் தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே
என்று அன்னை அபிராமியை, அபிராமி அந்தாதி போற்றிப்புகழ்வது போல.. இத்திருத்தலத்தில் நடுநாயகமாகக் கண்கொள்ளாக்காட்சியாக அருள்மழை பொழிபவளாக அன்னை திருவீதியம்மன் காட்சி தருகிறாள். விநாயகப் பெருமான் தனி சன்னதி கொண்டு அற்புதமாகக் காட்சி அளித்து வருகிறார். தட்சிணாமூர்த்தி, விஷ்ணு, துர்க்கையும் இத்தலத்தில் அருள்பாலிக்கின்றனர்.

வள்ளி, தெய்வானை சமேதராய் முருகப்பெருமான் இக்கோயிலில் சிறப்பாகக் காணப்படுகிறார். வேல் உண்டு வினையில்லை என்று சொல்வதற்கிணங்க அவர் எதிரே வேலும், கந்த சஷ்டி கவசம் பொறிக்கப்பட்ட கல்வெட்டையும் இங்குக் காணலாம்.
கோயிலில் உள்ள ஆலமரத்தடியில் நாகங்கள் சன்னதியும், அதனையடுத்து நவக்கிரக தோஷங்கள் விலகச் செய்யும் நவக்கிரக சன்னதியும் அமைக்கப்பட்டுள்ளது. அதோடு ஆஞ்சனேயர், ஐயப்ப சாஸ்தா ஆகிய சன்னதிகளும் உள்ளன. மூர்த்தி சிறிது எனினும் கீர்த்தி பெரிது என்பதற்கேற்கிணங்க சாஸ்தா இத்திருத்தலத்தில் அருளாட்சி வழங்குகிறார். இந்த கோயிலில் மற்றுமொரு சிறப்பாகச் சனீஸ்வர பகவான் தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார்.
திருவிழா
அம்மன் உத்தரவிற்கிணங்க இக்கோயிலில் கூழ் வார்த்தல் திருவிழா வெகு விமர்சையாக நடைபெறுகிறது. அதோடு, நவராத்திரி உள்பட அம்மனுக்குரிய விசேஷங்களும் இக்கோயிலில் சிறப்பாக நடத்தப்படுகிறது.
பரிகாரத் தலம்
நாக தோஷம் நீங்க இத்தலத்தில் சிறப்புப் பரிகாரங்கள் செய்யப்படுகின்றது.
குழந்தையின்மை, நோய் நீக்குதல், சோதனைகளிலிருந்து மீள்வது மட்டுமின்றி திருமணம் கைகூட அம்மனிடம் ஜாதகம் வைத்து வழிபட அடுத்த ஒரு வருடத்தில் திருமணம் நிச்சயமாகும்.
குழந்தைப் பாக்கியம் கிடைக்க அம்மனுக்குக் கட்டிய புடவை வழங்கப்படுகிறது. எத்தனை வருடம் குழந்தை இல்லையென்றாலும் வழிபாடு செய்த 18 மாதங்களில் அந்த பாக்கியம் கிடைக்கும் என்பது இத்திருத்தலத்தில் மக்களின் நம்பிக்கையாக இருந்து வருகின்றது.

கோயில் அமைவிடம்
ஆர்ஏ புரம் முதல் பிரதான சாலை அருகே நைனான் தெருவில் அமைந்துள்ளது அருள்மிகு திருவீதியம்மன் கோயில்.
இத்திருத்தலம் அருகே உள்ள சிறுநீரக மருத்துவமனையில் இருந்து வரும் பக்தர்கள் இந்த அம்மனை வழிபட, நாள்பட்ட சிறுநீரக பிரச்னை நிவர்த்தியாவதும் இக்கோயிலின் சிறப்பு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




