தஞ்சை தந்த ஆடற்கலை
தஞ்சை தந்த ஆடற்கலை - முனைவர் சண்முக.செல்வகணபதி, முனைவர் செ.கற்பகம்; பக்.144; ரூ.100; தஞ்சை பெரியகோயில் வார வழிபாட்டு மன்றம், தஞ்சாவூர்-9; )04362-239087.
"தமிழிசை இயக்கம் தோன்றி 80 ஆண்டுகள் ஆயினும், தமிழிசை இயக்கத்துக்கு ஆதரவானவர்கள் அரசு கட்டிலேறி நாற்பது ஆண்டுகளுக்குப் பின்னும் தமிழிசை "துக்கடா'வாகவே இருக்கிறது. இந்த நிலையைப் போக்கி "துக்கடா' இசைத் தமிழையும், நாட்டியத்தையும் எடுத்துக்கூறி தமிழ்த்தொண்டாற்றி வருகிறார் சண்முக.செல்வகணபதி' என்கிற சு.கோவிந்தராசனின் அணிந்துரை தமிழிசையின் நிலையை எடுத்துக் கூறுகிறது. இசைத்தமிழ் வளர்ச்சி குறித்த பலரது ஏக்கத்தையும் வருத்தத்தையும் நூலாசிரியர் இருவரும் போக்கியிருக்கிறார்கள். தஞ்சை பெரியகோயிலில் காணப்படும் 81 கரணசிற்பங்களின் (கரணம்-முத்திரை) புகைப்படமும், ஸ்ரீராமதேசிகன் நூலில் காணப்படும் வரைபடங்களும் ஒப்புநோக்கப்பட்டிருக்கின்றன. தஞ்சை தந்த ஆடற்கலை, சோழர், நாயக்கர், மராட்டியர் காலத்தில் இருந்த ஆடற்கலை, கல்வெட்டுக்கூறும் நாட்டிய இசைக்குழு, தஞ்சாவூர் கரணச் சிற்பங்கள், கரணங்களும் அங்ககாரங்களும் - அடைவுவரிசைகளும் என மொத்தம் 9 தலைப்புகளில் இசை மற்றும் நாட்டியத்தைப் பற்றிய அருமையான தகவல்களைப் பதிவு செய்துள்ளனர். இறுதியில் தஞ்சை பெரியகோயிலின் ஆயிரமாண்டு நிறைவு விழா பற்றிய தகவல்கள் அறியப்பட வேண்டியவை. இசைக்கும் நாட்டியத்துக்கும் நூலாசிரியர் இருவரும் செய்திருக்கும் தொண்டு காலத்தால் அழியாதது.