இங்கிலாந்து அணிக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி தொடரை கைப்பற்றியுள்ளது.
இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றது. முதல் 3 போட்டிகளில் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை பெற்றிருந்தது.
இந்த நிலையில், ராஞ்சியில் நடைபெற்ற 4-வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 353 ரன்களும், இந்திய அணி 307 ரன்களும் எடுத்தது. இரண்டாவது இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இங்கிலாந்து 145 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்தியாவின் அஸ்வின் 5 விக்கெட்டுகளும், குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளும் எடுத்தனர்.
தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி 4-வது நாள் உணவு இடைவெளிக்கு முன்னதாகவே 5 விக்கெட்டுகளை இழந்து வெற்றிக்கு தேவையான 192 ரன்களை எடுத்தது.
அதிகபட்சமாக இந்திய கேப்டன் ரோஹித் சர்மா 55 ரன்களும், சுப்மன் கில் ஆட்டமிழக்காமல் 52 ரன்களும் எடுத்திருந்தனர்.
இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 3-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்று தொடரை இந்திய அணி கைப்பற்றியது.