
இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்டில் மார்க் வுட் அணியில் சேர்க்கப்பட்டால், அது அதிர்ச்சியளிப்பதாக இருக்குமென இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் ஸ்டுவர்ட் பிராட் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் நடைபெற்று வருகிறது. இரண்டு அணிகளும் முதல் இன்னிங்ஸில் விளையாடி முடித்த நிலையில், இலங்கை அணி அதன் இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடி வருகிறது.
போட்டியின் 4-வது நாளான இன்று இங்கிலாந்து வேகப் பந்துவீச்சாளர் மார்க் வுட் அணியுடன் களம் காணவில்லை. மூன்றாவது நாள் ஆட்டத்தின்போது, 11-வது ஓவரின் முதல் இரண்டு பந்துகளை வீசிய மார்க் வுட் பெவிலியன் திரும்பினார். அதன்பின், அவர் பந்துவீச்சை தொடரவில்லை. அவருக்கு தொடைப்பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்டில் மார்க் வுட் அணியில் சேர்க்கப்பட்டால், அது அதிர்ச்சியளிப்பதாக இருக்குமென இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் ஸ்டுவர்ட் பிராட் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: இங்கிலாந்து வேகப் பந்துவீச்சாளர் மார்க் வுட்டுக்கு காயம் ஏற்பட்டுள்ளதால், அவரை பந்துவீச்சில் பயன்படுத்தினால் அது இங்கிலாந்து அணிக்கு ஆபத்தாக முடியும். இலங்கை அணி இரண்டாவது இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளை இழந்துள்ளது. மீதமுள்ள விக்கெட்டுகளை வீழ்த்துவதற்கான பந்துவீச்சு வரிசை இங்கிலாந்து அணியிடம் உள்ளது.
இலங்கைக்கு எதிராக லார்ட்ஸில் நடைபெறும் இரண்டாவது போட்டியில் மார்க் வுட் களமிறக்கப்பட்டால், அது அதிர்ச்சியளிப்பதாக இருக்கும். ஓவலில் நடைபெறும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் மார்க் வுட்டை விளையாடவைக்க இங்கிலாந்து அணி முயற்சிக்க வேண்டும் என்றார்.
இங்கிலாந்து - இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 29 ஆம் தேதி லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.