
19 வயதுக்குள்பட்டோருக்கான ஆசியக்கோப்பையில் இந்திய அணி இலங்கையை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குத் தகுதிபெற்றுள்ளது.
19 வயதுக்குள்பட்டோருக்கான 11-வது ஆசியக் கோப்பை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றுவருகிறது. இந்தப் போட்டியில் மொத்தம் 8 அணிகள் பங்கேற்றுள்ள நிலையில் இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் ஆகிய அணிகள் அரையிறுதிப்போட்டிக்கு முன்னேறியிருந்தன.
அதன்படி, முதலாவது அரையிறுதிப் போட்டியில் விளையாடி பாகிஸ்தான் அணியை வீழ்த்திய வங்கதேச அணி முதல் அணியாக இறுதிப்போட்டிக்குத் தகுதிபெற்றது.
2-வது அரையிறுதிப் போட்டியில் விளையாடிய இந்தியா - இலங்கை அணிகள் மோதிய போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்றது.
இந்தப் போட்டியில் முதலில் டாஸ் வென்ற இலங்கை கேப்டன் தேவ்மிகா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். அதன்படி, முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி இந்திய வீரர்களின் பந்துவீச்சைத் தாக்குப்பிடிக்க முடியாமல், 46.2 ஓவர்களில் 173 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் - அவுட் ஆனது. அதிகபட்சமாக லக்வின் அபேசிங்கே 69 ரன்கள் எடுத்தார். அதில், 2 சிக்ஸர்களும், 3 பவுண்டரிகளும் அடங்கும்.
இந்திய அணித் தரப்பில் சேத்தன் சர்மா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். அடுத்து 174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 21.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் இலக்கை எட்டி வெற்றி பெற்றது.
இந்திய அணி சார்பில் வைபவ் சூரியவன்ஷி 67 ரன்கள் விளாசினார். அதில், 5 சிக்ஸர்களும் 6 பவுண்டரிகளும் அடங்கும். அவரைத் தவிர்த்து ஆயுஷ் மத்ரே 34 ரன்களும், கேப்டன் அமான் 25 ரன்களும் எடுத்தனர்.
அரையிறுதியில் வெற்றிபெற்ற இந்திய அணி வருகிற ஞாயிற்றுக்கிழமை(டிச.8) அன்று நடைபெறும் வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் மோதுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.