டிராவிஸ் ஹெட் - முகமது சிராஜ் விவகாரம்: இரண்டு அணிகளின் கேப்டன்களும் கூறியதென்ன?

டிராவிஸ் ஹெட் - முகமது சிராஜ் விவகாரம் தொடர்பாக இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன்கள் பேசியுள்ளனர்.
போட்டியின்போது பேசிக் கொள்ளும் முகமது சிராஜ் மற்றும் டிராவிஸ் ஹெட்
போட்டியின்போது பேசிக் கொள்ளும் முகமது சிராஜ் மற்றும் டிராவிஸ் ஹெட்படம் | AP
Published on
Updated on
1 min read

டிராவிஸ் ஹெட் - முகமது சிராஜ் விவகாரம் தொடர்பாக இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன்கள் பேசியுள்ளனர்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. பெர்த்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் அடிலெய்டில் நடைபெற்றது.

இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 337 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிரடியாக விளையாடிய டிராவிஸ் ஹெட் 141 பந்துகளில் 140 ரன்கள் குவித்து அசத்தினார். அவரது விக்கெட்டினை முகமது சிராஜ் வீழ்த்தினார்.

டிராவிஸ் ஹெட்டின் விக்கெட்டினை வீழ்த்திய முகமது சிராஜ், அவரை பெவிலியன் செல்லுமாறு ஆக்ரோஷமாக கையால் சைகை செய்தார். இதனையடுத்து, டிராவிஸ் ஹெட்டும் பதிலுக்கு ஏதோ கூறிவிட்டு பெவிலியன் திரும்பினார்.

முகமது சிராஜ் நன்றாக பந்துவீசியதாக கூறியதாக டிராவிஸ் ஹெட்டும், டிராவிஸ் ஹெட் பொய் கூறுவதாக முகமது சிராஜும் தெரிவித்ததையடுத்து, இந்த விவகாரம் பெரும் பேசுபொருளானது.

ரோஹித் சர்மா, பாட் கம்மின்ஸ் கூறியதென்ன?

டிராவிஸ் ஹெட் - முகமது சிராஜ் இடையேயான இந்த விவகாரம் தொடர்பாக இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா என இரண்டு அணிகளின் கேப்டன்களும் பேசியுள்ளனர்.

அவர்கள் பேசியது பின்வருமாறு,

ரோஹித் சர்மா

ஆக்ரோஷமாக செயல்படுவதற்கும், அதிகப்படியாக ஆக்ரோஷமாக செயல்படுவதற்கும் இடையே மிக மெல்லி கோடு இருக்கிறது. அணியின் கேப்டனாக யாரும் அந்த கோட்டை கடக்காமல் இருப்பதை உறுதி செய்வதே எனது வேலை. ஆனால், வீரர்கள் தங்களுக்குள் பேசிக் கொள்ளலாம். அணிக்காக என்ன செய்ய வேண்டும் என்பது முகமது சிராஜுக்கு நன்றாக தெரியும். அணிக்குத் தேவையான அனைத்து விஷயங்களையும் அவர் செய்வார். இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் தங்களுக்குள் மோதிக்கொள்ளும்போது இதுபோன்ற விஷயங்கள் இருக்கும்.

பாட் கம்மின்ஸ்

டிராவிஸ் ஹெட் ஆஸ்திரேலிய அணியின் துணைக் கேப்டன். அவர் மிகுந்த முதிர்ச்சியுடையவர். அவர் தொடர்புடைய விஷயங்களை அவரே பேசுவார். வீரர்கள் அவர்களாக இருக்க அனுமதிக்கப்பட வேண்டும். அணியின் கேப்டனாக என்னுடைய தலையீடு தேவைப்பட்டால், நான் கண்டிப்பாக தலையிடுவேன். ஆனால், நான் தலையிடுவதற்கான தேவை இருந்ததாக ஒருபோதும் உணரவில்லை.

5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளன. இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் டிசம்பர் 14 ஆம் தேதி தொடங்குவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com