
ஐக்கிய அரபு அமீரகத்துக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று (ஜூலை 23) நடைபெற்ற முதல் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரக அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த ஐக்கிய அரபு அமீரகம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 103 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் தீர்த்தா அதிகபட்சமாக 40 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து, கேப்டன் ஈஷா ரோஹித் அதிகபட்சமாக 16 ரன்கள் எடுத்தார்.
பாகிஸ்தான் தரப்பில் ஷதியா இக்பால், நஸ்ரா சாந்து மற்றும் துபா ஹாசன் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். நிடா தர் ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினார்.
104 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான் அணி 14.1 ஓவர்களில் இலக்கை எட்டி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தை வீழ்த்தியது. தொடக்க வீராங்கனைகளே அணிக்கு வெற்றியை தேடித் தந்தனர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய குல் ஃபெரோஷா 55 பந்துகளில் 62 ரன்கள் (8 பவுண்டரிகள்) எடுத்தும், முனீபா அலி 30 பந்துகளில் 37 ரன்கள் (4 பவுண்டரிகள்) எடுத்தும் களத்தில் இருந்தனர்.
இதுவரை 3 போட்டிகளில் விளையாடியுள்ள பாகிஸ்தான் அணி 2 போட்டிகளில் வெற்றி பெற்று குரூப் ஏ பிரிவில் புள்ளிப்பட்டியலில் இந்தியாவுக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.