
தனது மகனின் 10 ஆண்டு கிரிக்கெட் வாழ்க்கையை வீணாக்கிவிட்டதாக சஞ்சு சாம்சனின் தந்தை குற்றம் சாட்டியுள்ளார்.
இந்திய டி20 கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சனின் 10 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்க்கையை இந்திய முன்னாள் கேப்டன்கள் எம்எஸ். தோனி, விராட் கோலி, ரோஹித் சர்மா, அணியின் முன்னாள் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆகியோர் வீணாக்கி விட்டதாக சஞ்சு சாம்சனின் தந்தை சாம்சன் விஸ்வநாதன் குற்றம்சாட்டியுள்ளார்.
இந்தியா - தென்னாப்பிரிக்க அணிகள் 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகின்றன. இந்தத் தொடரில் முதல் போட்டியில் சதம் விளாசிய சஞ்சு சாம்சன் அடுத்தடுத்து 2 போட்டிகளிலும் டக் அவுட் ஆனார்.
இதுவரை வெளிநாடுகளில் 5 போட்டிகளில் விளையாடிய சஞ்சு சாம்சன் ஒரு சதம் மற்றும் நான்கு போட்டிகளில் டக் அவுட் ஆகியுள்ளார்.
சஞ்சு சாம்சான் ஆட்டம் குறித்து அவரது தந்தை சாம்சன் விஸ்வநாதன் கூறுகையில், “இந்திய கிரிக்கெட்டில் முக்கியமானவர்கள் சிலர் எனது மகனின் 10 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்க்கையை வீணாக்கிவிட்டனர்.
அவர்களில் இந்திய முன்னாள் கேப்டன்கள் எம்எஸ். தோனி, விராட் கோலி, ரோஹித் சர்மா, அணியின் முன்னாள் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆகியோர் உள்ளனர். அவர்கள் எந்தளவு காயப்படுத்திருந்தாலும், என் மகன் அதிலிருந்து மீண்டுவந்துள்ளார்.
அவற்றில் இருந்து மீண்டுவந்து சஞ்சு சாம்சன் வங்கதேசத்திற்கு எதிராக சதம் அடித்தபோதும் அவருக்கு விமர்சனங்கள் வந்தன. இந்திய அணியின் முன்னாள் வீரரும், அணித் தேர்வாளருமான ஸ்ரீகாந்த்கூட விமர்சனம் கூறியது அதிப்ருதியை ஏற்படுத்தியது.
இவ்வளவு விரக்திகள் இருந்தபோதிலும் நான் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் மற்றும் கேப்டன் சூர்யகுமார் யாதவ் இருவருக்கும் நன்றி சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.
இவர்கள் இருவரும் சரியான நேரத்தில் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பளிக்கவில்லை என்றால், அவர் அணியில் இருந்து நீக்கப்பட்டிருப்பார். இவர்கள் தொடர்ச்சியாக அளிக்கும் வாய்ப்பால் சஞ்சு சாம்சன் அடுத்தடுத்த இன்னிங்ஸ்களில் சதம் விளாசிய இந்திய வீரர் என்ற சாதனையும் படைத்துள்ளார்” என்றார்.
2026 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை நடைபெறும் நிலையில் சஞ்சு சாம்சனின் சிறப்பான ஆட்டங்கள் அணித் தேர்வர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது. மேலும், தேசிய அணியில் சஞ்சு சாம்சன் நிலையான இடத்தைப் பிடிப்பார் என்று அவரது தந்தை சாம்சன் விஸ்வநாதன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.