தொடக்க ஆட்டக்காரர் இடத்துக்கு நாதன் மெக்ஸ்வீனி சரியான தேர்வா? மேத்யூ ஹைடன் பதில்!

பார்டர் - கவாஸ்கர் தொடரில் நாதன் மெக்ஸ்வீனி தொடக்க ஆட்டக்காரராக களமிறக்கப்படுவது குறித்து...
நாதன் மெக்ஸ்வீனி (கோப்புப் படம்)
நாதன் மெக்ஸ்வீனி (கோப்புப் படம்)படம் | ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் (எக்ஸ்)
Published on
Updated on
2 min read

இந்தியாவுக்கு எதிரான பார்டர் - கவாஸ்கர் தொடரில் ஆஸ்திரேலிய வீரர் நாதன் மெக்ஸ்வீனி தொடக்க ஆட்டக்காரராக களமிறங்க சரியான தேர்வா என்பது குறித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் மேத்யூ ஹைடன் பேசியுள்ளார்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பார்டர் - கவாஸ்கர் தொடர் வருகிற நவம்பர் 22 ஆம் தேதி தொடங்குகிறது. டேவிட் வார்னரின் ஓய்வுக்குப் பிறகு, ஆஸ்திரேலிய அணியில் தொடக்க ஆட்டக்காரராக அவரது இடத்தை யார் நிரப்பப் போகிறார் என்ற கேள்வி எழுந்த நிலையில், நாதன் மெக்ஸ்வீனி தொடக்க ஆட்டக்காரராக களமிறங்குவார் என அறிவிக்கப்பட்டது.

மெக்ஸ்வீனி சரியான தேர்வா?

உஸ்மான் கவாஜாவுடன் தொடக்க ஆட்டக்காரராக நாதன் மெக்ஸ்வீனி களமிறங்குவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் அந்த இடத்துக்கு பொருத்தமானவரா என்பது குறித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரரான மேத்யூ ஹைடன் பேசியுள்ளார்.

Matthew Hayden
மேத்யூ ஹைடன்படம் | ஐசிசி

இது தொடர்பாக அவர் பேசியதாவது: இந்தியாவுக்கு எதிரான பார்டர் - கவாஸ்கர் தொடரில் ஆஸ்திரேலிய அணிக்காக தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கவுள்ள நாதன் மெக்ஸ்வீனி எப்படி செயல்படுவார் என்பதை காலம்தான் முடிவு செய்யும். ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் என்ற முறையில், தொடக்க ஆட்டக்காரர் இடத்துக்கு நாதன் மெக்ஸ்வீனி நல்ல தேர்வு எனக் கூறுவேன்.

எந்த இடத்தில் களமிறங்கி விளையாடுகிறோம் என்பது முக்கியமில்லை. ஆஸ்திரேலியாவுக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடும் பண்புகளையும், தரத்தினையும் ஒருவர் பெற்றிருக்க வேண்டும். நாதன் மெக்ஸ்வீனியை எனக்கு தனிப்பட்ட முறையில் தெரியாது. ஆனால், அவர் மிகவும் திறமையான வீரர் என்பதையும் அவரிடம் தலைமைப் பண்பு இருப்பதையும் உறுதி செய்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் தேர்வுக் குழுத் தலைவர் ஜியார்ஜ் பெய்லி, அவரை தொடக்க ஆட்டக்காரராக களமிறக்க முன்வந்துள்ளார்.

ரோம் நகரம் ஒரே நாளில் கட்டி எழுப்பப்படவில்லை. அதே போல்தான் டேவிட் வார்னரும். அவர் மிகச் சிறந்த வீரராக ஒரு நாளில் உருவாகிவிடவில்லை. அவரது இடத்தை நிரப்புவது மிகவும் கடினமான விஷயம் என்றார்

பார்டர் - கவாஸ்கர் தொடரின் பிரதான போட்டிகளுக்கு முன்பாக இந்தியா ஏ அணிக்கு எதிராக மெக்ஸ்வீனி இரண்டு பயிற்சி டெஸ்ட் போட்டிகளில் விளையாடினார். அதில் முதல் போட்டியில் 39 ரன்கள் மற்றும் 88 ரன்களும், இரண்டாவது போட்டியில் 14 ரன்கள் மற்றும் 25 ரன்களும் எடுத்தார்.

இந்தியாவுக்கு எதிரான தொடரில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கவுள்ள நாதன் மெக்ஸ்வீனி, உள்ளூர் போட்டிகளில் வழக்கமாக 3-வது அல்லது 4-வது வீரராக களமிறங்கி விளையாடுபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com