பெர்த் டெஸ்ட்: சதம் விளாசிய ஜெய்ஸ்வால், விராட் கோலி; 2-வது இன்னிங்ஸில் ஆஸி. தடுமாற்றம்!

யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் விராட் கோலியின் அசத்தல் சதங்களால் ஆஸ்திரேலிய அணிக்கு 534 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
யசஷ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி
யசஷ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி
Published on
Updated on
2 min read

யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் விராட் கோலியின் அசத்தல் சதங்களால் ஆஸ்திரேலிய அணிக்கு 534 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் முதல் போட்டி பெர்த்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 150 ரன்களுக்கு ஆட்டமிழக்க, ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 104 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனையடுத்து, இந்திய அணி 46 ரன்கள் முன்னிலை பெற்றது.

இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 172 ரன்கள் எடுத்திருந்தது. யஷஸ்வி ஜெய்ஸ்வால் 90 ரன்களுடனும், கே.எல்.ராகுல் 62 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்திய அணி ஆஸ்திரேலியாவைக் காட்டிலும் 218 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது.

சதம் விளாசிய ஜெய்ஸ்வால், விராட் கோலி

218 ரன்கள் என்ற வலுவான முன்னிலையுடன் இந்திய அணி இன்று (நவம்பர் 24) மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடங்கியது. இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 200 ரன்களைக் கடந்தது. சிறப்பாக விளையாடிய கே.எல்.ராகுல் 77 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து, யஷஸ்வி ஜெய்ஸ்வாலுடன் ஜோடி சேர்ந்தார் தேவ்தத் படிக்கல். அவர் 25 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இதனையடுத்து, விராட் கோலி மற்றும் ஜெய்ஸ்வால் ஜோடி சேர்ந்தனர். தொடக்கம் முதலே அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய யஷஸ்வி ஜெய்ஸ்வால் 297 பந்துகளில் 161 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 15 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, ரிஷப் பந்த் மற்றும் துருவ் ஜுரெல் தலா ஒரு ரன் எடுத்து அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.

இந்த நிலையில், விராட் கோலி மற்றும் வாஷிங்டன் சுந்தர் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இருவரும் சிறப்பாக விளையாடி ரன்கள் சேர்த்தனர். வாஷிங்டன் சுந்தர் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த, விராட் கோலி அவ்வப்போது பவுண்டரிகள் அடித்து அசத்தினார். வாஷிங்டன் சுந்தர் 29 ரன்களில் ஆட்டமிழக்க, விராட் கோலியுடன் நிதீஷ் ரெட்டி ஜோடி சேர்ந்தார். அவர் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி பவுண்டரிகளையும், சிக்ஸர்களையும் பறக்கவிட்டார். விராட் கோலி 143 பந்துகளில் 100 ரன்கள் எடுத்து தனது 81-வது சர்வதேச சதத்தை நிறைவு செய்தார்.

இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 487 ரன்கள் எடுத்திருக்கையில் டிக்ளேர் செய்தது. விராட் கோலி 100 ரன்களுடனும், நிதீஷ் ரெட்டி 38 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்திய அணி ஆஸ்திரேலியாவைக் காட்டிலும் 533 ரன்கள் முன்னிலை பெற, ஆஸ்திரேலியாவுக்கு 534 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

ஆஸ்திரேலியா தடுமாற்றம்

534 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடி வரும் ஆஸ்திரேலிய அணி, மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில்12 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.

இந்தியா தரப்பில் கேப்டன் ஜஸ்பிரித் பும்ரா 2 விக்கெட்டுகளையும், முகமது சிராஜ் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றியுள்ளனர்.

ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு கடைசி இரண்டு நாள்களில் 522 ரன்களும், இந்திய அணியின் வெற்றிக்கு இன்னும் 7 விக்கெட்டுகளும் தேவைப்படுகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com