
ஆஸ்திரேலிய பிரதமர் ஆன்டனி ஆல்பனேசியை இந்திய கிரிக்கெட் வீரர்கள் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் விளையாட ஆஸ்திரேலியா சென்றுள்ளது. இதில் 1-0 என இந்தியா முன்னிலை வகிக்கிறது.
2ஆவது டெஸ்ட் டிச.6இல் இரவு பகல் ஆட்டமாக அடிலெய்டில் தொடங்குகிறது. அதற்கு முன்பாக நவ.30ஆம் தேதி பிரதமர் லெவன்ஸ் அணியுடன் இந்திய அணி 2 நாள் பயிற்சி ஆட்டம் ஆடவிருக்கிறது.
இதனை முன்னிட்டு ஆஸ்திரேலிய பிரதமர் ஆன்டனி ஆல்பனேசி உடன் இந்திய வீரர்கள், ஆஸி. வீரர்கள் சந்தித்து வாழ்த்து பெற்றார்கள்.
ரோஹித் சர்மா இந்திய அணியை ஆஸி. பிரதமருக்கு அறிமுகம் செய்துவைத்தார். பும்ரா, விராட் கோலியை ஆஸி. பிரதமர் மிகவும் பாராட்டி பேசினார்.
இது குறித்து தனது இன்ஸ்டா பக்கத்தில் ஆன்டனி ஆல்பனேசி கூறியதாவது:
இந்த வாரம் பிரதமர் அணிக்கு ஓவல் ஆடுகளத்தில் சிறப்பான இந்திய அணிக்கு எதிராக மிகப்பெரிய சவால் காத்திருக்கிறது. நான் பிரதமர் மோடியிடம் சொன்னதுபோல ஆஸி. அணி தனது வேலையை செய்து முடிக்குமென நம்புகிறேன் என்றார்.
கிரிக்கெட் என்பது இந்தியா - ஆஸ்திரேலியாவின் நல்லுறவை மேம்படுத்தும் அரசியல் செயல்பாடுகளின் ஒரு பகுதியாகவே இருந்து வருகிறது.
கடந்தாண்டு நடைபெற்ற அகமதபாத் டெஸ்ட்டில் இரு அணி வீரர்களையும் மோடி, ஆன்டனி ஆல்பனேசி இருவரும் கலந்துகொண்டு வாழ்த்தியதும் குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.