
இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் முகமது ஷமிக்கு ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் புகழாரம் சூட்டியுள்ளார்.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் துபையில் நேற்று (பிப்ரவரி 20) நடைபெற்ற போட்டியில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதின. இந்தப் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷுப்மன் கில் சதம் விளாசி அசத்தினார். அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய முகமது ஷமி 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.
ரிக்கி பாண்டிங் புகழாரம்
முகமது ஷமி 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்திய நிலையில், காயத்திலிருந்து மீண்டு முகமது ஷமி அவருடைய மிகச் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்துவதாக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் புகழாரம் சூட்டியுள்ளார்.
இது தொடர்பாக ஐசிசியில் ரிக்கி பாண்டிங் பேசியதாவது: காயத்திலிருந்து மீண்டு சாம்பியன்ஸ் டிராபியின் முதல் போட்டியிலேயே முகமது ஷமி 5 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளது மிகவும் சிறப்பான விஷயம். இதுபோன்ற வீரர்கள்தான் அணியில் வேண்டும். இந்த மாதிரியான வீரர்கள் அணிக்காக சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெற்றுத் தருபவர்கள். காயத்திலிருந்து மீண்டு சர்வதேச கிரிக்கெட்டில் மீண்டும் சிறப்பாக செயல்படுவது ஷமிக்கு அவ்வளவு எளிதாக இருந்திருக்காது. அவர் மிகவும் அற்புதமாக பந்துவீசினார் என்றார்.
நேற்றையப் போட்டியில் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய முகமது ஷமி, ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 200 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய இந்திய வீரர் என்ற சாதனையைப் படைத்ததும் குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.