தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

டெஸ்ட் தொடர் தோல்வி எதிரொலி: இங்கிலாந்துடன் பயிற்சி ஆட்டங்களில் விளையாடும் இந்தியா!

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு முன்பாக இந்திய அணி பயிற்சி ஆட்டங்களில் விளையாடும் என பிசிசிஐ தகவலறிந்த வட்டாரங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image

இந்திய அணி வீரர்கள்

படம் | AP

Updated On :16 ஜனவரி 2025, 3:09 pm

DIN

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு முன்பாக இந்திய அணி பயிற்சி ஆட்டங்களில் விளையாடும் என பிசிசிஐ தகவலறிந்த வட்டாரங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் தொடர்ச்சியாக இரண்டு மிகப் பெரிய தோல்விகளை சந்தித்துள்ளது. முதலாவதாக, சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 0-3 என இந்திய அணி முழுமையாக இழந்தது. இதன் மூலம், சொந்த மண்ணில் 12 ஆண்டுகளாக டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து வந்த இந்திய அணியின் ஆதிக்கம் முடிவுக்கு வந்தது.

இரண்டாவதாக, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மிக முக்கியமான டெஸ்ட் தொடரில் இந்திய அணி 1-3 என்ற கணக்கில் தோல்வியடைந்தது. இதன் மூலம், பார்டர் - கவாஸ்கர் கோப்பையை இழந்தது மட்டுமில்லாமல், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பையும் இந்திய அணி இழந்தது.

பயிற்சி ஆட்டங்களில் விளையாடும் இந்தியா

நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடர்களை இழந்த இந்திய அணியின் மீது கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. மூத்த வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் கடுமையாக விமர்சிக்கப்பட்டனர்.

தொடர்ச்சியான டெஸ்ட் தொடர் தோல்விகளை சந்தித்த இந்திய அணி, இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்த டெஸ்ட் தொடர் வருகிற ஜூன் 20 ஆம் தேதி தொடங்குகிறது.

இந்த நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் தொடங்குவதற்கு முன்பாக இந்திய அணி, இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிராக நான்கு நாள்கள் நடைபெறும் மூன்று பயிற்சி ஆட்டங்களில் விளையாடவுள்ளதாக பிசிசிஐ தகவலறிந்த வட்டாரங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பிசிசிஐ தகவலறிந்த வட்டாரங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: பார்டர் - கவாஸ்கர் தொடருக்கு முன்பாக இந்தியா ஏ அணி பயிற்சி ஆட்டங்களில் விளையாடியது. இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு முன்பாகவும், இந்தியா ஏ மற்றும் இங்கிலாந்து லயன்ஸ் அணிகளுக்கு இடையே பயிற்சி ஆட்டங்கள் நடைபெறவுள்ளது. வீரர்கள் இங்கிலாந்தில் உள்ள ஆடுகளங்களின் தன்மையை அறிந்துகொள்ள இந்த போட்டிகள் உதவியாக இருக்கும். அதேபோல, சில மாதங்களுக்குப் பிறகு சிவப்புப் பந்தில் விளையாடுவதற்கான வாய்ப்பாகவும் இந்த போட்டிகள் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயிற்சி ஆட்டங்கள் நடைபெறும் இடங்கள் மற்றும் தேதி தொடர்பான தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.