ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

சதம் விளாசி வரலாறு படைத்த கொங்கடி த்ரிஷா; இந்தியா அபார வெற்றி!

மகளிர் டி20 உலகக் கோப்பைத் தொடரில் ஸ்காட்லாந்தை 150 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

News image
சதம் விளாசிய மகிழ்ச்சியில் கொங்கடி த்ரிஷா- படம் | பிசிசிஐ
Updated On :28 ஜனவரி 2025, 9:28 am

DIN

மகளிர் டி20 உலகக் கோப்பைத் தொடரில் ஸ்காட்லாந்தை 150 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

19 வயதுக்குட்பட்டோருக்கான ஐசிசி டி20 உலகக் கோப்பைத் தொடரின் இன்றையப் போட்டியில் இந்தியா மற்றும் ஸ்காட்லாந்து அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஸ்காட்லாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, இந்திய அணி முதலில் விளையாடியது.

சதம் விளாசிய கொங்கடி த்ரிஷா

இந்திய அணியில் தொடக்க வீராங்கனைகளாக கமலினி மற்றும் கொங்கடி த்ரிஷா களமிறங்கினர். இந்த இணை இந்திய அணிக்கு சிறப்பான தொடக்கத்தைத் தந்தது. ஸ்காட்லாந்து வீராங்கனைகள் எவ்வளவு முயற்சி செய்தும் இந்த பார்ட்னர்ஷிப்பை எளிதில் உடைக்க முடியவில்லை. இந்திய அணி அதன் முதல் விக்கெட்டுக்கு 147 ரன்கள் சேர்த்தது. கமலினி அரைசதம் கடந்து ஆட்டமிழந்தார். அவர் 42 பந்துகளில் 51 ரன்கள் எடுத்தார். அதில் 9 பவுண்டரிகள் அடங்கும்.

இதனையடுத்து, கொங்கடி த்ரிஷாவுடன் சானிகா சால்கே ஜோடி சேர்ந்தார். தொடக்கம் முதலே கொங்கடி த்ரிஷா அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதிரடியாக விளையாடிய அவர் சதம் விளாசி அசத்தினார். அவர் 59 பந்துகளில் 110 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். அதில் 13 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும். 19 வயதுக்குட்படோருக்கான மகளிர் டி20 உலகக் கோப்பைத் தொடர் வரலாற்றில் முதல் சதத்தைப் பதிவு செய்து, வரலாற்றில் இடம்பெற்றுள்ளார் கொங்கடி த்ரிஷா. சானிகா சால்கே 20 பந்துகளில் 29 ரன்களுடன் களத்தில் இருந்தார்.

இறுதியில் இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் ஒரு விக்கெட்டினை இழந்து 208 ரன்கள் எடுத்தது.

இந்தியா அபார வெற்றி

209 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய ஸ்காட்லாந்து அணி, இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 14 ஓவர்களில் 58 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம், இந்திய அணி 150 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஸ்காட்லாந்து அணியில் பிப்பா கெல்லி மற்றும் எம்மா வால்சிங்ஹம் அதிகபட்சமாக தலா 12 ரன்கள் எடுத்தனர். பிப்பா ஸ்பிரௌல் 11 ரன்கள் எடுத்தார். மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

இந்தியா தரப்பில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய ஆயுஷி சுக்லா 4 விக்கெட்டுகளையும், வைஷ்ணவி சர்மா மற்றும் கொங்கடி த்ரிஷா தலா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர்.

பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலுமே அபாரமாக செயல்பட்ட கொங்கடி த்ரிஷா ஆட்ட நாகியாக தேர்வு செய்யப்பட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.