
இந்திய கிரிக்கெட் வீரர் யுஸ்வேந்திர சஹால் மற்றும் அவரது மனைவி தனஸ்ரீ வர்மா விவாகரத்து வழக்கில் மும்பை உயர்நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு வழங்கியுள்ளது.
இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளராக இருந்தவர் யுஸ்வேந்திர சஹால். இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு தனஸ்ரீ வர்மாவை திருமணம் செய்து கொண்டார். மாடலிங்கில் ஈடுபட்டு வந்த தனஸ்ரீ வர்மா, பாடல் நிகழ்ச்சிகளில் பாடகியாக அறிமுகமாகினார்.
இந்த நிலையில், பரஸ்பர விவாகரத்து கோரி யுஸ்வேந்திர சாஹல் மற்றும் தனஸ்ரீ வர்மா இருவரும் மும்பை பாந்த்ரா குடும்பநல நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தனர்.
இந்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், 6 மாத காலஅவகாசம் அளித்து வழக்கை ஒத்திவைத்தது.
ஆனால், ஐபிஎல் தொடரில் பங்கேற்கவிருப்பதால் காத்திருப்பு காலத்தை ரத்து செய்து, உடனடியாக விவாகரத்து அளிக்க வலியுறுத்தி இருவரும் தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதுதொடர்பாக, இருவரும் மும்பை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்த நிலையில், நீதிபதி மாதவ் ஜம்தார் தலைமையிலான ஒரு நீதிபதி அமர்வில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, காத்திருப்புக் காலத்தை ரத்து செய்து, நாளைக்குள்(மார்ச் 20) விவகாரத்து வழக்கில் முடிவை அறிவிக்க குடும்ப நல நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து, மும்பை குடும்பநல நீதிமன்றத்தில் சஹால் விவாகரத்து வழக்கில் இறுதி தீர்ப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, நிரந்தர ஜீவனாம்சமாக தனஸ்ரீ-க்கு ரூ. 4.75 கோடியை வழங்க சஹால் ஒப்புக் கொண்டதாகவும், ஏற்கெனவே ரூ. 2.37 கோடி தொகை வழங்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வருகின்ற மார்ச் 22 முதல் தொடங்கவுள்ள ஐபிஎல் கிரிக்கெட் தொடரில், பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக சஹால் விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.