

உலகக் கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் முதலில் விளையாடிய தென்னாப்பிரிக்க அணி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 319 ரன்கள் எடுத்துள்ளது.
மகளிர் உலகக் கோப்பைத் தொடரின் அரையிறுதிப் போட்டிகள் இன்று முதல் தொடங்கியுள்ளன. குவாஹாட்டியில் இன்று (அக்டோபர் 29) நடைபெற்று வரும் முதல் அரையிறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகள் விளையாடி வருகின்றன.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, தென்னாப்பிரிக்க அணி முதலில் விளையாடியது.
சதம் விளாசிய லாரா வோல்வர்ட்
முதலில் விளையாடிய தென்னாப்பிரிக்க அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 319 ரன்கள் எடுத்துள்ளது.
அந்த அணியில் அதிரடியாக விளையாடிய கேப்டன் லாரா வோல்வர்ட் சதம் விளாசி அசத்தினார். அவர் 143 பந்துகளில் 169 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 20 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும். 169 ரன்கள் எடுத்ததன் மூலம், உலகக் கோப்பைத் தொடரில் தென்னாப்பிரிக்க அணிக்காக அதிகபட்ச ரன்கள் குவித்த வீராங்கனை என்ற சாதனையை லாரா வோல்வர்ட் படைத்தார்.
அவரைத் தொடர்ந்து, தஸ்மின் பிரிட்ஸ் 45 ரன்களும், மாரிஸன் காப் 42 ரன்களும் எடுத்தனர். சோல் டிரையான் 33 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார்.
இங்கிலாந்து தரப்பில் சோஃபி எக்கல்ஸ்டோன் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். லாரன் பெல் 2 விக்கெட்டுகளையும், கேப்டன் நாட் ஷிவர் பிரண்ட் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
320 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இங்கிலாந்து அணி களமிறங்குகிறது.
இதையும் படிக்க: சர்வதேச டி20 போட்டிகளில் சூர்யகுமார் யாதவ் புதிய சாதனை!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.