

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பைத் தொடரில் இந்திய அணி அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பைத் தொடரில் குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் திடல் நடைபெற்ற இன்றையப் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாடின.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, இந்திய அணி முதலில் விளையாடியது.
அரையிறுதிக்கு முன்னேறிய இந்திய அணி!
முதலில் விளையாடிய இந்திய அணி 49.5 ஓவர்கள் முடிவில் 252 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
அந்த அணியில் அதிகபட்சமாக வேதாந்த் திரிவேதி அரைசதம் கடந்தார். அவர் 98 பந்துகளில் 68 ரன்கள் எடுத்தார். அதில் 2 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். அவரைத் தொடர்ந்து, கனிஷ்க் சௌகான் 35 ரன்களும், வைபவ் சூர்யவன்ஷி 30 ரன்களும் எடுத்தனர். ஆர்.எஸ்.அம்பிரிஷ் 29 ரன்கள், விஹால் மல்ஹோத்ரா மற்றும் கிலான் படேல் தலா 21 ரன்கள் எடுத்தனர்.
பாகிஸ்தான் தரப்பில் அப்துல் சுபன் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். முகமது சையம் இரண்டு விக்கெட்டுகளையும், அலி ராஸா, அகமது ஹுசைன், மோமின் மற்றும் அலி ஹாசன் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
253 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி பாகிஸ்தான் அணி விளையாடியது. பாகிஸ்தான் அணி இந்த இலக்கை 33.3 ஓவர்களில் துரத்திப் பிடித்தால் அரையிறுதிக்குத் தகுதி பெறும் நிலை உருவானது.
இந்த நிலையில், போட்டி 33.3 ஓவர்களைக் கடந்தும் பாகிஸ்தான் அணியால் இந்த இலக்கை துரத்திப் பிடிக்க முடியவில்லை. அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களுக்குள் ஆட்டமிழந்தது. 46.2 ஓவர்களில் பாகிஸ்தான் அனைத்து விக்கெட்களையும் இழந்து 194 ரன்களுக்குச் சுருண்டது.
இதனால், இந்திய அணி 58 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியது. பாகிஸ்தான் அணி தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.