

இந்தியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இந்தூரில் இன்று (ஜனவரி 18) நடைபெற்றது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, நியூசிலாந்து முதலில் விளையாடியது.
இருவர் சதம் விளாசல்; 338 ரன்கள் இலக்கு!
முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் விக்கெட்டுகளை இழந்து 337 ரன்கள் எடுத்தது.
நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான டெவான் கான்வே 5 ரன்களிலும், ஹென்றி நிக்கோல்ஸ் 0 ரன்னிலும் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.
இதனையடுத்து, டேரில் மிட்செல் மற்றும் வில் யங் ஜோடி சேர்ந்தனர். இந்த இணை நன்றாக விளையாடியது. இருப்பினும், வில் யங் 30 ரன்களில் ஹர்ஷித் ராணா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதன் பின், டேரில் மிட்செல் மற்றும் க்ளென் பிலிப்ஸ் ஜோடி சேர்ந்தனர். இந்த இணை அபாரமாக விளையாடி ரன்கள் சேர்த்தது.
அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் சதம் விளாசி அசத்தினர். க்ளென் பிலிப்ஸ் அதிரடியாக 88 பந்துகளில் 106 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 9 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும். தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடிய டேரில் மிட்செல் 131 பந்துகளில் 137 ரன்கள் எடுத்தார். அதில் 15 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும்.
கேப்டன் மைக்கேல் பிரேஸ்வெல் ரன்கள் எடுத்தார்.
இந்தியா தரப்பில் அர்ஷ்தீப் சிங் மற்றும் ஹர்ஷித் ராணா தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். முகமது சிராஜ் மற்றும் குல்தீப் யாதவ் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
விராட் கோலியின் சதம் வீண்; தொடரைக் கைப்பற்றிய நியூசிலாந்து
338 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி, 46 ஓவர்களில் 296 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம், நியூசிலாந்து அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி ஒருநாள் தொடரைக் கைப்பற்றியது.
இந்திய அணியில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி சதம் விளாசி அசத்தினார். அவர் 108 பந்துகளில் 124 ரன்கள் எடுத்தார். அதில் 10 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, நிதீஷ் குமார் ரெட்டி மற்றும் ஹர்ஷித் ராணா இருவரும் அரைசதம் விளாசினர். நிதீஷ் குமார் ரெட்டி 57 பந்துகளில் 53 ரன்களும் (2 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள்), ஹர்ஷித் ராணா 43 பந்துகளில் 52 ரன்களும் (4 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள்) எடுத்தனர்.
கேப்டன் ஷுப்மன் கில் 23 ரன்களும், ரவீந்திர ஜடேஜா 12 ரன்களும் எடுத்தனர்.
நியூசிலாந்து தரப்பில் ஸகாரி ஃபோல்க்ஸ் மற்றும் கிறிஸ்டியன் கிளர்க் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். ஜேடன் லென்னாக்ஸ் 2 விக்கெட்டுகளையும், கைல் ஜேமிசன் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை நியூசிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
நியூசிலாந்து அணி முதல் முறையாக இந்தியாவில் ஒருநாள் தொடரைக் கைப்பற்றுவது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.