ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பையில் இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் கிரிக்கெட்டின் நேற்றைய (சனிக்கிழமை) இரண்டாவது ஆட்டத்தில் தினேஷ் கார்த்திக்கின் சிறப்பான அதிரடி பேட்டிங்கால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி டெல்லி கேபிடல்ஸை வீழ்த்தியது. ஆட்டமிழக்காமல் 34 பந்துகளில் 66 ரன்கள் விளாசிய கார்த்திக் ஆட்டநாயகன் விருதை வென்றார்.
இதன்பிறகு, சகவீரர் விராட் கோலி அவரை நேர்காணல் செய்தார்.
இதையும் படிக்க | நான்காவது வெற்றியை பதிவு செய்தது பெங்களூரு!
அப்போது கோலியிடம் கார்த்திக் பேசியதாவது:
"குறுகிய கால இலக்கும் உள்ளது, நீண்ட கால இலக்கும் உள்ளது. குறுகிய கால இலக்கு என்பது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்காக சிறப்பாக செயல்படுவது. பெரிய இலக்கு என்பது நாட்டுக்காக விளையாடுவது. உலகக் கோப்பை வருகிறது என்பது எனக்குத் தெரியும். உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இருக்க வேண்டும். இந்திய அணி உலகக் கோப்பை வெல்வதற்கு உதவ வேண்டும்" என்றார் அவர்.
இந்த ஐபிஎல்-இன் சிறந்த வீரர் தினேஷ் கார்த்திக் என விராட் கோலி புகழாரம் சூட்டினார்.
டி20 உலகக் கோப்பை வரும் அக்டோபர் 16 முதல் நவம்பர் 13 வரை மெல்போர்ன், சிட்னி, பிரிஸ்பேன், அடிலெய்ட், ஹோபார்ட், பெர்த் என ஆஸ்திரேலியாவிலுள்ள 7 இடங்களில் நடைபெறுகிறது.