வாஷிங்டன் சுந்தரின் கை விரலில் மீண்டும் காயம் ஏற்பட்டுள்ளதாக சன்ரைசர்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் டாம் மூடி கூறியுள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் அணியில் விளையாடும் தமிழகத்தைச் சேர்ந்த வாஷிங்டன் சுந்தர் பந்துவீசவில்லை. ஃபீல்டிங் செய்தபோது விரலில் காயம் ஏற்பட்டதால் பந்துவீச முடியாத நிலைமை ஏற்பட்டது. எனினும் பேட்டிங் செய்த வாஷிங்டன் சுந்தர், 2 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
வாஷிங்டன் சுந்தரை ஏலத்தில் ரூ. 8.75 கோடிக்குத் தேர்வு செய்தது சன்ரைசர்ஸ் அணி. ஐபிஎல் போட்டியின் ஆரம்பத்தில் குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் வாஷிங்டன் சுந்தருக்கு விரலில் காயம் ஏற்பட்டது. இதனால் சன்ரைசர்ஸ் அணியின் அடுத்த மூன்று ஆட்டங்களில் அவர் விளையாடவில்லை. இப்போது மீண்டும் அதே இடத்தில் காயம் ஏற்பட்டதால் சிஎஸ்கேவுக்கு எதிராக வாஷிங்டனால் பந்துவீச முடியவில்லை. இதுபற்றி சன்ரைசர்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் டாம் மூடி கூறியதாவது:
இதற்கு முன்பு காயம் ஏற்பட்டு தையல் போட்ட அதே கையில் வாஷிங்டன் சுந்தருக்குக் காயம் ஏற்பட்டுள்ளது. முன்பு ஏற்பட்ட காயத்திலிருந்து அவர் குணமடைந்து விட்டாலும் அதே இடத்தில் மீண்டும் காயம் ஏற்பட்டுள்ளது. மீண்டும் தையல் போட வேண்டிய அவசியமில்லை. ஆனால் அவரால் பந்துவீச முடியவில்லை. மிகவும் துரதிர்ஷ்டவசமானது. இதனால் அவருடைய பந்துவீச்சு இல்லாமல் 20 ஓவர்களை முடிக்க வேண்டியிருந்தது. முதல் 10 ஓவர்களில் வாஷிங்டனின் பந்துவீச்சு எங்களுக்கு எப்போதும் உதவியாக இருக்கும் என்றார்.
தற்போது ஏற்பட்ட காயம் காரணமாக சன்ரைசர்ஸ் அணியின் அடுத்த ஆட்டங்களில் வாஷிங்டன் இடம்பெறுவாரா என்பது குறித்து இதுவரை தகவல் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.