ஐபிஎல் 2022 போட்டியில் 34 ஆட்டங்கள் முடிவடைந்து விட்டன.
இந்த 34 ஆட்டங்களிலும் டாஸ் வென்ற அணிகள் முதலில் ஃபீல்டிங் செய்வதையே தேர்வு செய்கின்றன.
இப்படியொரு நிலை எந்த ஐபிஎல் போட்டியிலும் ஏற்பட்டதில்லை. கடைசியாக 2018-ல் தான் டாஸ் வென்ற அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்ய 15 ஆட்டங்கள் தேவைப்பட்டன. இந்தமுறை இந்த எண்ணிக்கை உயர்ந்துகொண்டே செல்கிறது. எந்த அணி டாஸ் வென்று முதல்முறையாக முதலில் பேட்டிங் செய்யப்போகிறது என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
அணிகளின் முடிவுக்கான காரணத்தைப் புரிந்துகொள்ள முடிகிறது. பனிப்பொழிவு காரணமாக 2-வதாகப் பந்துவீசுவது சிரமம். அந்த நேரத்தில் பேட்டிங் செய்வதுதான் நல்லது. வார இறுதிகளில் பகலில் ஆட்டம் நடைபெற்றாலும் 2-வதாக பேட்டிங் செய்வதையே அணிகள் விரும்புகின்றன.
இதுவரை நடைபெற்ற 34 ஆட்டங்களில் டாஸ் வென்ற கேப்டன்கள், முதலில் ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தாலும் 15 முறை முதலில் பேட்டிங் செய்த அணிகளே வெற்றி பெற்றுள்ளன. அதாவது 15 முறை டாஸ் வென்று முதலில் ஃபீல்டிங் எடுத்த கேப்டன்களின் முடிவு தவறாகியிருக்கிறது.
34 முறையும் டாஸ் வென்று 2-வதாக பேட்டிங் செய்த அணிகளுக்கு 19 முறை வெற்றி கிடைத்துள்ளன.
இதனால் 2-வதாக பேட்டிங் செய்தாலும் வெற்றி நிச்சயம் என்பது கிடையாது. ஆனாலும் அணிகள் புதிய முடிவை எடுக்கத் தயங்குகின்றன. பனிப்பொழிவால் பந்துவீச்சுக்கு ஆபத்து வரக்கூடாது என்று முதலிலேயே பந்துவீசத் தீர்மானித்து வருகின்றன.
இந்த நிலையில் ராஜஸ்தான் அணி மட்டும் வித்தியாசமாக உள்ளது. இதுவரை டாஸில் தோற்று முதலில் பேட்டிங் செய்ததில் 5 முறை வெற்றி கண்டுள்ளது. மற்ற அணிகள் எல்லாம் அதிகபட்சமாக முதலில் பேட்டிங் செய்து 2 வெற்றிகளே பெற்றுள்ளன.
ஒரே ஒருமுறை டாஸில் வென்று முதலில் ஃபீல்டிங் செய்த ராஜஸ்தான் அணி அந்த ஆட்டத்தில் தோற்றது. அதேபோல ஆர்சிபிக்கு எதிராக மட்டும் முதலில் பேட்டிங் செய்து தோற்றுள்ளது. தில்லிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் டாஸில் தோற்று முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி, கடைசியில் 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஐபிஎல் 2022 (முதல் 34 ஆட்டங்களின் முடிவில்): டாஸில் தோற்று முதலில் பேட்டிங் செய்ததில் அணிகள் பெற்ற வெற்றிகள்
ராஜஸ்தான் - 5
குஜராத் - 2
பஞ்சாப் - 2
லக்னெள - 2
ஆர்சிபி - 2
தில்லி - 1
சென்னை - 1
ராஜஸ்தான் அணி சஹால், அஸ்வின், பிரசித் கிருஷ்ணா, டிரெண்ட் போல்ட் என வலுவான பந்துவீச்சைக் கொண்டிருப்பதால் 5 முறை 2-வதாகப் பந்துவீசி ஜெயித்திருக்கிறது.
குஜராத், பஞ்சாப், லக்னெள, ஆர்சிபி ஆகிய அணிகள் தலா 2 முறை முதலில் பேட்டிங் செய்து வெற்றி பெற்றுள்ளன.
சன்ரைசர்ஸ், மும்பை, கொல்கத்தா ஆகிய மூன்று அணிகளும் இந்தப் பட்டியலில் இல்லை. அதாவது அந்த அணிகள் டாஸில் தோற்று முதலில் பேட்டிங் செய்து இதுவரை ஒரு வெற்றியையும் பெறவில்லை. இதில் சன்ரைசர்ஸ் அணி ஒருமுறை கூட முதலில் பேட்டிங் செய்யவேயில்லை! எல்லா ஆட்டங்களிலும் டாஸ் வென்று முதலில் பந்துவீச்சையே தேர்வு செய்துள்ளது.
மும்பை அணி மூன்று முறை டாஸ் வென்று முதலில் பந்துவீசியும் வெற்றி பெற முடியவில்லை. கொல்கத்தா டாஸ் வென்று இருமுறை தோற்றுள்ளது.