நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகியதற்கான காரணத்தை ஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்துவீச்சாளர் ஆடம் ஸாம்பா தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பைத் தொடரில் ஆஸ்திரேலிய அணியில் ஆடம் ஸாம்பா இடம்பெற்று விளையாடினார். இறுதியில் ஆஸ்திரேலிய அணி சாம்பியன் பட்டமும் வென்றது.
இந்த நிலையில், தொடர்ச்சியாக கிரிக்கெட் விளையாடி முழுவதும் சோர்வடைந்துவிட்டதாக ஆஸ்திரேலிய அணியின் ஆடம் ஸாம்பா தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: நடப்பு ஐபிஎல் தொடரில் பங்கேற்காததற்கு பல காரணங்கள் உள்ளன. கடந்த ஆண்டு தொடர்ச்சியாக கிரிக்கெட் விளையாடியதில் முழுவதும் சோர்வடைந்துவிட்டதே முதன்மையான காரணம். கடந்த ஆண்டு ஐபிஎல் தொடர் முழுவதும் விளையாடினேன். அதனைத் தொடர்ந்து, இந்தியாவில் நடைபெற்ற உலகக் கோப்பைத் தொடரில் விளையாடினேன்.
இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாட முயற்சி செய்ய வேண்டும் என நினைத்திருந்தேன். ஆனால், சோர்வாக இருப்பதால் ராஜஸ்தான் ராயல்ஸுக்காக எனது சிறப்பான பங்களிப்பை வழங்க முடியுமா என்ற சந்தேகம் இருந்தது. அதுமட்டுமல்லாமல், இன்னும் சில மாதங்களில் டி20 உலகக் கோப்பை தொடங்கவுள்ளது. டி20 உலகக் கோப்பைத் தொடர் எனக்கு மிகவும் முக்கியம் என்றார்.