கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக முதலில் பேட் செய்த லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 7 விக்கெட்டுகளை இழந்து 161 ரன்கள் எடுத்துள்ளது.
ஐபிஎல் தொடரில் கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பந்துவீச்சைத் தேர்வு செய்ய, லக்னௌ முதலில் பேட் செய்தது.
அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக குயிண்டன் டி காக் மற்றும் கேப்டன் கே.எல்.ராகுல் களமிறங்கினர். டி காக் 10 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின் களமிறங்கிய தீபக் ஹூடா 8 ரன்களில் ஆட்டமிழக்க கே.எல்.ராகுல் மற்றும் ஆயுஷ் பதோனி ஜோடி சேர்ந்தனர். இந்த இணை நிதானமாக விளையாடியது. இருப்பினும், கே.எல்.ராகுல் 39 ரன்களிலும், ஆயுஷ் பதோனி 29 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதன்பின் களம் கண்ட நிக்கோலஸ் பூரன் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். அவர் 32 பந்துகளில் 45 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 2 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும்.
இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 7 விக்கெட்டுகளை இழந்து 161 ரன்கள் எடுத்துள்ளது. கொல்கத்தா தரப்பில் மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். வைபவ் அரோரா, சுனில் நரைன், வருண் சக்கரவர்த்தி மற்றும் ஆண்ட்ரே ரஸல் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் களமிறங்குகிறது.