ஷிவம் துபேவுக்கு பந்துவீச எதிரணிகள் அஞ்சுவதாக சிஎஸ்கேவின் பந்துவீச்சு பயிற்சியாளர் எரிக் சைமன்ஸ் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற நேற்றையப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ரன்கள் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தி அசத்தியது.
இந்தப் போட்டியில் சென்னை அணியின் ஷிவம் துபே 38 பந்துகளில் 66 ரன்கள் குவித்து கடைசி வரை களத்தில் இருந்தார். மும்பை இந்தியன்ஸ் 7 பேரை பந்துவீச்சில் ஈடுபடுத்தியபோதும், ஷிவம் துபே களமிறங்கிய பிறகு அவர்கள் சுழற்பந்துவீச்சாளர்களை பயன்படுத்தவில்லை.
இந்த நிலையில், ஷிவம் துபே ஆட்டத்தினை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் திறன் கொண்டவர் எனவும், அவருக்கு எதிராக எதிரணிகள் சுழற்பந்துவீச்சாளர்களை பயன்படுத்துவதற்கு அஞ்சுவதாகவும் எரிக் சைமன்ஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: மும்பை இந்தியன்ஸ் 7 பந்துவீச்சாளர்களை பயன்படுத்தினர். ஆனால், 8-வது ஓவருக்குப் பிறகு அவர்கள் சுழற்பந்துவீச்சாளர்களை பயன்படுத்தவில்லை. சுழற்பந்துவீச்சாளர் ஸ்ரேயாஸ் கோபால் ஓவரில் ஷிவம் துபே ஒரேயொரு பந்தினை மட்டுமே எதிர்கொண்டார். ஷிவம் துபே களமிறங்கிய பிறகு மும்பை இந்தியன்ஸ் வேகப் பந்துவீச்சாளர்களை பயன்படுத்த ஆரம்பித்து விட்டார்கள். சுழற்பந்துவீச்சாளர்களை திறம்பட எதிர்கொண்டு விளையாடுவதால் துபே எளிதில் ஆட்டத்தை அவரது கட்டுப்பாட்டுக்குள் எடுத்து வருகிறார். அதனால் எதிரணியினர் அவர் களத்தில் இருக்கும் வரை சுழற்பந்துவீச்சாளர்களை பயன்படுத்த அஞ்சுகின்றனர் என்றார்.